Wednesday, 1 January 2020

கட உபநிஷதம்


மரணத்திற்குப் பின்னால்

கட உபநிஷதத்திற்கான  சாந்தி மந்திரம்

ஆச்சாரியர், சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக! அறிவின் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக!  நாம் இருவரும் ஈடுபாடுமிக்க ஆற்றலுடன் உழைப்போமாக! கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும்!  எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக.

குறைகளும் தடைகளும் இல்லாமல் உபநிஷதக் கல்வி நிறைவேற இந்த மந்திரம் பிராத்திக்கிறது.

வேத மந்திரங்கள் அனைத்தும் இறுதியில்  ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்று நிறைவுபெறுவதை காணலாம்.

சாந்தி என்றால் அமைதி.

மூன்று முறை சாந்தி: சாந்தி: சாந்தி: என்றுவதன் சொல்காரணங்கள், மூன்று விதமான தடைகளிலிருந்து விலகுவதற்கு.

மூன்று விதமான தடைகள் வருமாறு.


1. ஆத்யாத்மிகம்:  நம்மால் வரும் தடை: உடல் நோய், மனப் பிரச்சனைகள் போன்றவை.

ஆதி பௌதிகம்:  பிற உயிர்களால் வரும் தடை.

ஆதி தைவிகம்:  இயற்கை சக்திகளால் வரும் தடை; மழை, இடி, தீ  போன்றவைகளால் வரும் தடை.

மூன்று முறை ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்று சொல்வதன் மூலம் இந்த மூவகை தடைகளிலிருந்து விடுபட்டு இந்த உபநிஷத்தைப் படிப்பதற்கான நமது முயற்ச்சி வெற்றி பெறுவதற்காக பிராத்திக்கிறோம்.


அத்தியாயம் 1

நசிகேதனின் தந்தை செய்த யாகம்


1. முன்னொரு காலத்தில் வாஜசிரவஸ் என்பவர் பலனில் ஆசை கொண்டவராய் தன்னிடமுள்ள எல்லாப்பொருட்களையும் தானமாகக் கொடுத்தார். அவருக்கு நசிகேதன் என்று மகன் இருந்தான்.

தானப் பொருட்களைக் கண்ட நசிகேதனின் சிந்தனை


2. தட்சிணைகள்  எடுத்துச் செல்வதை குமாரன் நசிகேதன் கண்டான்.  சிரத்தை அவனை வந்தடைந்து. அவன் சிந்திக்கலானான்.


சிரத்தை என்றால் செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கை என்று பொருள். நம்புகிறேன் என்று சொல்லிக்கொண்டு சும்மா இருபதல்ல;  அந்த நம்பிக்கையைச் செயல்படுத்துவது,  அந்த நம்பிக்கையின் லட்சியத்தை அடையப் பாடுபடுவது அதுவே சிரத்தை.  உயர் லட்சியத்தை அடைவதர்கான எல்லா முயற்சிகளுக்கும் சிரத்தை தேவை.  சிரத்தை இறைவனின் தலையில் உள்ளது. இதயத் தாகத்தால் அது அடையப்படுகிறது. அந்த சிரத்தை நசிகேதனிடம் வந்தது.

நசிகேதனின் சிந்தனைக்கான காரணம்


3.தண்ணீர் குடித்து முடித்த, புல்மேய்ந்து முடித்த, பால் கறந்து முடித்த, கன்று போடும் சக்தியை இழந்த பசுக்களைத் தானம்செய்பவர்கள் மகிழ்சி இல்லாத உலகங்களை அடைகிறார்கள்.

ஒருவனிடம் இருக்கும் பசுக்களின் எண்ணிக்கையை வைத்து அவனது செல்வாக்கை அந்த நாட்களில் மதிப்பிட்டார்கள்.  எனவே பசுக்களைத் தானம் செய்வது தானங்களில் சிறந்தது ஒன்றாகக் கருதப்பட்டது.  விசுவஜித் யாகத்தின் முடிவில் அனைத்தையும் தானம் செய்ய வேண்டும்.  ஆனால் வாஜசிரவஸ் தனக்கு உதவாத கிழட்டு பசுக்களை கொடுத்ததார்.  இதனால், தானத்தின் பலன் கிடைக்காமல் போவது மட்டுமல்லாமல், தானத்தின் அடிப்படைக் கருத்தை சரியாகக் கடைப்பிடிக்காதலால்  இரட்டைத் தவறுகளுக்கு உள்ளானார் . வாஜசிரவஸ் அதற்குத் தண்டனையாக மகிழ்சியற்ற உலகங்களில் வாழவும் நேருமென்பதை புரிந்துகொண்ட நசிகேதன் ஆழ்த சிந்தனைக்கு வசப்பட்டான்.

நசிகேதன் தந்தைக்கு உண்மையை அறிவுறுத்துதல்


தந்தை செய்யும் தவறை மறைமுகமாக சுட்டிக்காட்டும் நோக்கத்துடன் நசிகேதன் அவரிடம் சென்று கூறினான்.

4. நசிகேதன் தந்தையிடம் சென்று  அப்பா என்னை யாருக்குக் கொடுக்கப் போகிறீர்கள்? என்று கேட்டான் .  இரண்டாவது முறையும் மூன்றாவது முறையும் கேட்டான். அதற்கு தந்தை உன்னை யெமனுக்கு கொடுக்கப்போகிறேன் என்று கூறினார்.

தந்தை தவறு செய்வதை கண்டு ஆழ்ந்து சிந்தித்த நசிகேதன், அவர் செய்யும் தவறிலிருந்து காப்பாற்றுவது தனது கடமை, அதனலிருந்து காப்பாற்றி, அவர் மகிழ்சியற்ற உலகங்களை அடையாமல் தடுப்பது தனது  கடமை என்று உணர்ந்தான்.  சிறுவனான தான் நேரடி யாக நீங்கள் செய்வது தவறு என்று கூறினால் அதிகப் பிரச்சனை ஆகிவிடும் என்று கருதி மறை முகமாக அவருக்கு விசயத்தை தெளிவுபடுத்த எண்ணினான்.

சிறந்தவற்றை தானம் செய்ய வேண்டும் என்பது யாகத்தின் நிபந்தனை. ஒரு தந்தைக்கு நல்ல மகனைவிடச் சிறந்த செல்வம் இல்லை எனவே  என்னை யாருக்கு தானமாகக் கொடுக்கப்போகிறீர்கள்?  என்று வாஜசிரவசிடம் கேட்டான்.  இதன்மூலம், சிறந்தவற்றை தானம் செய்ய வேண்டும் என்பதை மறந்துவிட்டீர்களே! என்று அவருக்கு நினைவூட்டினான்.

நசிகேதனின் இந்தக் கேள்வியை முதலில் வாஜசிரவஸ் பொருட்படுத்தவில்லை.  ஆனால் நசிகேதன் விடவில்லை. தந்தையை அணுகி மீண்டும் கேட்டான். அதற்கும் வாஜசிரவஸ் பதில் சொல்லவில்லை. எனவே மூன்றாம் முறையாகக் கேட்டான். அதனால் கோபமுற்ற வாஜசிரவஸ்  உன்னை எமனுக்குக் கொடுக்கிறேன். அதாவது செத்துத்துலை என்று ஆத்திரத்துடன் கூறினார்.

நசிகேதனின் சுயமதிப்பு

5. பல விசயங்களில் நான் முதல் நிலையில் இருக்கிறேன்.  பல விசயங்களில் இடநிலையில் இருக்கிறேன். என்னை எமனிடம் அனுப்புவதின் மூலம் தந்தை என்ன சாதிக்கப்போகிறாா் என்று சிந்தித்தான் நசிகேதன்.
நசிகேதனிடம் நாம் காணும் ஒரு முக்கிய பண்பு:  சுய மதிப்பு.  தன்னை, வாழ்கையில் தனது  இடத்தை,  தனது குறை நிறைகளை நன்றாக அறிந்து வைத்திருந்தான்.  எனவே அவன் பலவிஷயங்களில் முதல் நிலையில் உள்ளேன், பல விசயங்களில் இடை நிலையில் உள்ளேன்.  ஆனால் எதிலும் கடை நிலையில் இல்லை.  அவன் துணிச்சலாக தன்னை மதிப்பிடுகிறான். அப்படியான என்மீது தந்தை ஏன் ஆத்திரப்படுகிறார்?  எதற்காக நான் அவரிடம் இதை சொல்கிறேன் என்பதை புரிந்து கொள்ளாமல்,  என்னை எமனிடம் அனுப்புவதாகக் கூறிவிட்டாரே!  என்று ஆதங்கப்படுகிறான்.

நசிகேதன் தந்தையிடம் சிந்திக்குமாறு கூறியது


தந்தை ஆத்திரத்தால் சொன்னாலும், சொன்னது சொன்னதுதான், தான் எமனிடம் போயே ஆகவேண்டும் என்பதை நிச்சயித்துக் கொண்டான்,  நசிகேதன். ஆனால் போகுமுன் அவருக்கு உண்மையை உணர்த்த விரும்பிய அவன் அவரிடம் கூறினான்.

6. முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். இப்போது உள்ளவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அதையும் சிந்தித்துபாருங்கள். செடி கொடிகளைப்போல் மனிதன் பிறக்கவும் இறக்கவும் செய்கிறான்.  என்று தந்தையிடம் கூறினான் நசிகேதன்.

வாழ்கையில் அனுபவங்கள் பெரிய வழிகாட்டிகள்.  நமது அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது உண்மை. ஆனால் பிறருடைய அனுபவங்களிலிருந்தும் நாம் நிறைய  கற்றுக்கொள்ள முடியும்.  தீ சுடும் என்பதை நாமே அனுபவித்து பார்கவேண்டியதில்லை, பிறருடைய அனுபவத்திலிருந்து அதை புரிந்து கொள்ளலாம்.   அதுபோல் பிறருடைய அனூபவங்களிலிருந்து உண்மையை கற்றுக்கொள்ளுமாறு வாஜசிரவஸிடம் கூறுகிறான் நசிகேதன்.   நல்லவர்கள் இவ்வாறு தானம் செய்யவில்லை, அப்படிச்செய்தவா்கள் மகிழ்சியற்ற உலகங்களை அடையாமலும்  இல்லை,  எனவே உண்மையாக நடந்துகொள்ளுங்கள்.  என்று தந்தைக்கு அறிவுறுத்துகிறான் நசிகேதன். அதுமட்டுமல்ல தன்னை எமனுக்கு கொடுப்பதாக தந்தை ஆத்திரத்திலோ கோபத்திலோ சொல்லியிருந்தாலும் அவர் சொன்ன வாக்கு காப்பாற்றப்பட வேண்டும், தான் எமனிடம் போயே ஆகவேண்டும் என்று எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டான் நசிகேதன்.  அவனுக்கு தந்தையிடம் வருத்தமோ கோபமோ வரவில்லை. என்பதையும் இங்கே கவனிக்கவேண்டும்.

பிறகு, நசிகேதன் எமலோகம் போவதான தன்முடிவைத் தந்தையிடம் கூறினார். ஆத்திரத்தில், தான்செய்து விட்டதை எண்ணிய வாசிரவஸ் கவலையில் ஆழ்ந்தார்.  அதைக் கண்ட நசிகேதன் அவருக்கு வாழ்கையின் உண்மையை எடுத்துக் கூறினார். வாழ்கை நிலையற்றது.  மனிதன் செடி கொடிகளைப்போல் பிறக்கவும் இறக்கவும் செய்கிறார்கள்.
பிறந்தவர்கள் இறப்பதும்,  இறந்தவர்கள் பிறப்பதும்,  உறுதி.  எனவே நான் எமலோகம் போவதுபற்றி கலங்கவேண்டாம், என்றுநசிகேதன், தந்தையிடம் கூறிவிட்டு, எமலோகம் சென்றார் .

எமதர்மனிடம் மந்திரிகள் கூறியது


நசிகேதன் சென்றபோது எமதர்மன் அங்கே இல்லை.  எனவே அவர் எமதர்மனின் மாளிகையின் முன்னால் மூன்று நாட்கள் காத்திருக்க நேர்ந்தது.  அதன்பிறகே எமதர்மன் வந்தார். அவரது மந்திரிகள் அவரிடம் சென்று நசிகேதன் வந்து காத்திருப்பதைபற்றி கூறினார்கள்.

7. தூயவ ஒருவர் விருந்தினராக வரும்போது நெருப்புபோலவே நுழைகிறார்கள். நல்லவர்கள் அவர்களுக்கு  தண்ணீர் முதலானவற்றைக் கொடுத்து உபசரித்து  அவர்களை அமைதிப்படுத்துகின்றனர்.

விருந்தினர் என்பவர் வழிபாட்டுக்குாியவர். அந்த வேளைக்கு  அவர் தெய்வமே,  அந்த நிலையில் அவர் போற்றப்படவேண்டும்.  விருந்தினரை உபசரித்தல் என்பது ஒருகாலத்தில்  வழிபாட்டாகவே செய்யப்பட்டு வந்தது. அதன் முக்கியத்தத்துவத்தை இங்கே மந்திாிகள் எமதர்மனிடம் தெரிவிக்கின்றனர்.

8.  யாருடைய வீட்டில் தூயவர் ஒருவர் உணவின்றி இருக்க நேர்கிறதோ, அற்பபுத்தி யுடையவரான அவரது நம்பிக்கைகள், எதிர்பார்புக்கள் எல்லாம் அழிகின்றன.  தான்செய்த புண்ணியங்களின் பலன், நற்பணிகளின் பலன் அனைத்தையும் அவன் இழக்கிறார்.  அவரது பிள்ளைச்  செல்வம், கால்நடைச் செல்வம் அனைத்தும் அழிகின்றன.

தூயவர் ஒருவர் வீட்டிற்கு வந்தால் அவரை உபசரிக்க வேண்டியது கடமை என்பதை இந்த மந்திரம் உணர்துகிறது.   உபசரிக்காவிட்டால் எல்லா செல்வமும் அழியும். அதேவேளையில், உபசரித்து அவர்களின் மனம் கனிந்த  ஆசிகளைப்பெற்றால் செல்வம் அனைத்தும் சேரும் என்பதை உணர்த்தப்படுகிறது.

எமதர்மனின் உபசாரம்


மந்திரிகள் கூறியதை கேட்ட எமதர்மன் நேராக நசிகேதனிடம் சென்று அவரை உபசரித்தார்.

9. வழிபாட்டிற்கு உாியவரே! விருந்தாளியும் வணங்கத் தக்கவருமான நீர் உணவின்றி என்வீட்டில் மூன்று இரவுகள் தங்க நேர்ந்தது.  தூய பாலனே!  அந்த குற்றம் என்னை பாதிக்காமல் எனக்கு நன்மை உண்டாகட்டும்.  உனக்கு வணக்கம்.  நீர் மூன்று இரவுகள் தங்க நேர்ந்ததற்காக என்னிடமிருந்து மூன்று வரங்களை பெற்றுக்கொள்ளும்.


நசிகேதன் கேட்டது

முதல் வரம் தந்தை நலம்(10 - 11)

10. எமதர்மனே!  உங்களிடம் இருந்து திரும்பிச் செல்கின்ற என்னை எனது தந்தையாகிய வாஜசிரவஸ் புரிந்துகொள்ள வேண்டும்.  என்னை ஏற்றுக் கொண்டு மனக்கவலை அற்றவராக என்னிடம் பேசவேண்டும்.  மூன்று வரங்களுள் இதையே முதல் வரமாகக் கேட்கிறேன்.

எமனைச் சந்தித்து வருகின்ற இவர் ஆவியல்ல, என் மகன்தான் என்று வாஜசிரவஸ் புரிந்து கொள்ள வேண்டும்,  தான் ஒரு தவறு செய்ததாகக் கோபம் கொண்ட அவர் இப்போது அந்தக்கோபத்தை விட்டிருக்க வேணடும். சுருக்கமாகச் சொன்னால், என் தந்தை ஏற்றுக் கொள்ள  வேண்டும் .  அதை நசிகேதன் முதல் வரமாகக் கேட்டார்.

எமதர்மன் வரமளித்தல்


11. அருணனின் மகனும் உனது தந்தையுமாகிய உத்தாலகர் உம்மைக்காணும்போது முன்பு போலவே உம்மைப்புாிந்து கொள்வார். என் அருளால் இரவுகளில் கவலையற்று தூங்குவார்.  என்னிடமிருந்து திரும்பிச் செல்கின்ற உம்மைக் கண்டு கோபம் கொள்ளமாட்டார். என்றுகூறி முதல் வரத்தை அளித்தார் எமதர்மன்.

12. சொர்கத்தில் சிறிதும் பயம் கிடையாது.  மரண தேவனாகிய நீங்களும் அங்கில்லை.  அங்கே மூப்பினால் பயப்படுவதில்லை. அவர்களுக்கு பசி, தாகம் இரண்டும் கிடையாது. அவர்கள் கவலையற்றவர்களாக மகிழ்சியில் திளைத்திருக்கிறார்கள்.

13. எமதர்மனே! சொர்கத்தில் வாழ்பவர்கள் தேவத்தன்மையை பெறுகின்றனர்.  அங்கே அழைத்து செல்லக் கூடிய யாகத்தைப்பற்றி உங்களுக்குத் தெரியும். சிரத்தை மிக்கவனான எனக்கு அதைப்பற்றி சொல்ல. இதனை இரண்டாவது வரமாகக்கேட்கிறேன்.

மனிதனுக்கு இன்ப நுகர்ச்சியிலுள்ள நாட்டம் முடிவற்றது,  ஆயுளோ குறைவு. எனவே இங்கே கிடைக்காத,  இங்கே பூர்தி செய்ய முடியாத    இன்பங்கள் வேறோர் உலகத்தில் இருப்பதாகக் கொண்டு,  அங்கே சென்று தனது சுகபோக வாழ்க்கையைத் தொடர நினை்கிறான் மனிதன்.  இதன்விளைவாக எழுந்தது சொர்கம் என்ற கருத்து.  எல்லா  புராணங்களிலும் இந்த கருத்து இருப்பதை காணலாம்.  பசி, தாகம் மூப்பு, அனைத்திற்கும் மேலாக மரணம் போன்றவை சுகபோகங்களுக்கு தடையாக உள்ளன.  எனவே அந்தத்தடைகள் இல்லாத உலகமாக சொர்கத்தைக் கருதினார்கள் மனிதர்கள்.

நசிகேத வித்யை

வாழ்வில் சாதிக்க வேண்டிய அனைத்திற்கும் யாகத்தை நாடினான் மனிதன். சொற்கத்திற்குப் போவதற்கென்றும் யாகங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றைபற்றி எமதர்மனிடம் இரண்டாவது வரமாக நசிகேதன் கேட்கிறான்.

நசிகேத வித்யை


யாகங்கள் புறத்தில் செய்யப்படுபவை.  சில பொருட்களைக் கொண்டு புறத்தில் செய்யப்படுகின்ற கிரியைகள் புண்ணியத்தை தரலாம், ஆனால்  அக(body and mind) வளர்சியை தருமா, அனுபூதி (Realization (உணர்தல்)) யைத்தருமா.  என்றகேள்வி எழுந்தது. அகப் பயிர்சிகளே அக வளர்சியை தரமுடியும் என்ற கருத்து வலுப்பெற்றது. யாகங்கள் அகமுகமாக்கப்பட்டன. வித்தைகள் உருவாகின. இந்த மந்திரத்தில் யாகம் வித்யையாக பாிணமிப்பதை காண்கிறோம்.

14. நசிகேதா! சொர்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற யாகத்தைபற்றி கேட்டாய். அது எனக்குத் தெரியும்.  அதை உனக்கு சொல்கிறேன் விழிபபுற்றவனாகக் கேள். சொர்கத்தை தருவதும் , பிரபஞ்சத்திற்கு ஆதாரமானதுமான அந்த அக்கினி இதயக்குகையில் உள்ளது.

15.நசிகேத யாகத்தை மும்முறை  செய்தவர்கள் மூவருடன் தொடா்பு கொண்டு மூன்று பயிற்சிகளைச் செய்யும்போது பிறப்பையும் இறப்பையும் கடக்கிறார்கள். பிரம்மத்திலிருந்து தோன்றியவரும் வழிபடத் தகுந்தவருமாான இறைவனை அறிந்து அனுபவித்து நிலைத்த அமைதியைப் பெறுகிறார்கள்.

நசிகேதனின் இரண்டாவது வரம் சொற்கத்திற்குப் போவதற்கான வழி பற்றியது.  அந்த வழி நசிகேத யாகம். அந்தப் புற யாகத்தை சில நிபந்தனைகளுடன்  செய்தால் அதுவே ஓர் அகப் பயிற்சியாக,  ஒரு வித்தையாக இறை நெறியில் நம்மைச் சேர்க்கும் என்பதை இந்த மந்திரம் சுட்டிக்காட்டுகிறது. அந்த நிபந்தனைகள் என்னென்ன

1. மூவருடன் தொடர்பு:தாய், தந்தை, குரு ஆகிய மூவர் காட்டும் வழியில் செல்ல வேண்டும். தாயின் அரவணைப்பு, உலக விசயங்களில் தந்தையின் வழிகாட்டுதல், அகவாழ்கையில் தகுந்த குருவின் வழிநடத்தல் ஆகிய மூன்றும் உரிய வேளையில் சரியாகக் கிடைப்பவர்களின் வாழ்கை வெற்றிகரமானதாக அமைகிறது. இதில் ஒன்று குறைந்தாலும் அந்த வாழ்க்கை நிறைவு பெறுவதில்லை. எனவே இந்த மூவரின் ஆசிகளால் வாழ்கை நிறைவு பெற்றவர்களாக இருக்க வேணடும் .

இந்த மூவரின் தொடர்பால் ஒருவர் இறைவனை அறிகிறார்.  அதாவது இறைவன் ஒருவர் இருக்கிறார், அவரை அடைவதே வாழ்க்கையின் நோக்கம் என்பது அவருக்கு தெரியவருகிறது. இதனையே(விதித்வா - அறிந்து)என்ற வார்த்தை குறிப்பிடுகிறது. ஆனால் அப்படி அறிவது மட்டும் போதாது. அனுபூதியில் (Realization( உணர்தல்)) இறைவனை உணர வேண்டும், அனுபவிக்க வேண்டும் இதனை மந்திரத்தில் (நிசாச்ய - அனுபவித்து) என்ற வார்த்தை குறிப்பிடுகிறது. அதற்கான பயிர்ச்சிகள் எவை.


2. மூன்று பயிற்சிகள்: தவம், ஸ்வாத்யாயம், ஈசுவர ப்ரணிதானம். இதனை மூன்று பயிற்சிகள் அல்லது மூன்று கர்மங்கள் என்று கூறலாம்.

சொந்தத் தேவைகளைச் சுருக்கிக் கொள்வதும், தனது வாழ்கை பிறருக்குப் பயனுள்ளதாக அமையும் வண்ணம் வாழ்வது தவம்.

நல்ல நூல்களைப் படித்தல், நல்ல கருத்துக்களைப் பிறருக்குச் சொல்லுதல், மந்திர ஜபம், சுய ஆராச்சி போன்றவை ஸ்வாத்யாயம்.

இறைவனை வழிபடுவதும், அவரைச் சரணடைந்து வாழ்வதும் ஈசுவர ப்பிரணிதானம்.

 இவ்வாறு மூவரின் தொடர்புடன் மூன்று பயிற்சிகளை செய்பவன்  இறைவனை அடைகிறான். அந்த இறைவன் யார்?

பிரம்மத்திலிருந்து  தோன்றியவர். உருவமற்ற, குணங்களற்ற அறுதி  நிலையில் இறைவன் பிரம்மம் என்று வழங்கப்படுகிறார். சாதரண மனிதர்கள் புரிந்து கொள்ளத் தக்க நிலையில் குறிப்பிட்ட வடிவத்துடனும்  குணங்களுடனும் இருக்கின்ற நிலையில் இறைவன்,  சிவன்,விஷ்ணு, தேவி என்று பல்வேறு பெயர்களைப் பெறுகிறார். இந்த நிலையிலுள்ள இறைவனை  அவர்கள் அடைகிறார்கள்.

அதனால் அடையும் பலன் என்ன?  நிலைத்த அமைதி.


இறைவனைத் தவிர வேறு எதன் மூலமும் கிடைக்கின்ற அமைதியும் நிலையானதல்ல.  சில புறக் காரணங்களின் வாயிலாகக் கிடைக்கின்ற  அமைதி காரணம் விலகியதும் குலைந்து விடும்.  ஆனால் இறைவனைப்  பெறுவதால் கிடைக்கின்ற அமைதி, எதனாலும் குலையாது.

(மூவருடன் தொடர்பு தாய், தந்தை, குரு.  மூன்று பயிற்சிகள் தவம், ஸ்வாத்யாயம், ஈசுவர ப்ரணிதானம்) மூன்றையயும் அறிந்து யார் நசிகேத யாகத்தை செய்கிறானோ, அவன் உடல் விழு முன்பே  மரணத்தை  வென்று, கவலைகளை கடந்து சொர்க லோகத்தில் மகிழ்திருக்கிறான்.

நசிகேத யாகத்தை ஒரு வித்தையாகச் செய்யுமாறு இந்த சுலோகம் வலியுறுத்துகிறது. வெறுமனே நசிகேத யாகத்தை செய்வதால் சொர்கலோக்திற்கு செல்கிறான். மூன்றையும் அறிந்து நசிகேத வித்தையைச் செய்பவன் மரணத்தை வெல்கிறான்.

உடல் விழும் முன்பே, அதாவது வாழும்போதே மரணத்தை வெல்வது  என்றால், மனிதர்கள் அறியாமையிலுருந்து விடுபடுகிறார்கள். ஆசை வெறுப்பு போன்ற உணர்சிகளின் பிடியிலிருந்து விடுபட்டு வாழ்கிறார்கள். அறியாமை, ஆசை போன்றவற்றில் வசப்ட்டு நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் நம்மை உலகுடன் பிணைக்கிறது. தொடர்ந்து பிறவிக்கு வழியாகிறது. ஆசையோ வெறுப்போ  அற்றவர்களாக வாழும்போது பிறவியற்றுப்போவதால் அது மரணத்தை வென்ற வாழ்கை ஆகிறது.

18.நசிகேதா! சொர்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற எந்த யாகத்தைப்பற்றி கேட்டாயோ அதை உனக்குச் சொன்னேன். இந்த யாகத்தை மக்கள் இனி உன்பெயராலே அழைப்பார்கள். இனி மூன்றாவது வரத்தை கேள்.

மரணத்திற்குபிறகு மனிதனின் நிலை


இந்த உபநிஷதத்தின் மையக்கருவான மரணத்திற்கு பிறகு மனிதனின் நிலை பற்றிய உபதேசம் இங்கிருந்து தொடங்குகிறது.

19. மரணத்திற்கு பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும், இல்லையென்று சிலரும் கூறுகின்றனர். இந்த சந்தேகத்தை உன்னிடம் கேட்டு தெளிவு பெற விரும்புகிறேன். நான் கேட்க விரும்பும் மூன்றாவது வரம் இதுவே.

எமதர்மனின் பதில்

20. நசிகேதா! இந்த விசயத்தில் தேவர்களுக்கும் கூட சந்தேகம் உள்ளது. இந்த விஷயம் மிகவும் நுண்மையானது, எளிதாக அறியக்கூடியதல்ல. எனவே வேறு வரம் கேட்டுக்கொள். என்னை கட்டாயப் படுத்தாதே, விட்டுவிடு.

21.இந்த விஷயத்தில் தேவர்களுக்கும் சந்தேகம் உள்ளதா! எமதர்மனே! இதனை எளிதாக அறியமுடியாது என்று நீயும் சொல்கிறாய். ஆனால் இதை உபசேசிப்பதற்கு உன்னைப்போல் வேறொருவர் கிடைக்க மாட்டார்.  வேறு எந்த வரமும் இதற்கு இணையாகவும் ஆகாது.

நசிகேதனைத் திசைதிருப்ப எமதர்மனின் முயர்ச்சி

22. நூறாண்டு ஆயுள் உள்ள மகன்களையும் பேரன்களையும் கேள். ஏராளம் பசுக்கள், யானை, பொன், குதிரை போன்றவற்றை கேள். பூமியில் பரந்த அரசை கேள்.  நீ எவ்வளவு விரும்புகிறாயோ அதுவரை வாழ்ந்து கொள்.

23. நசிகேதா! இதற்கு இணையான வரம் என்று நீ எதையாவது கருதினால் அதைக்கேள். செல்வம் , நீண்ட ஆயுள், பரந்த பூமியில் அதிபதியாக  வாழ்க்கை என்று எது வேண்டுமானாலும் கேள். உன்னை எல்லா ஆசைகளையும் அனுபவிப்பவனாகச் செய்கிறேன்.

24. நசிகேதா! மானிட உலகில் அடைதற்கரிய ஆசைகள் எவையெவை உண்டோ அனைத்தையும் கேள். சாரதிகளுடன் தேர்களைத் தருகிறேன். வாத்தியக் கலைஞர்களைத் தருகிறேன். ஆண்களை மயக்குகின்ற இந்த தேவலோகப் பெண்களைத் தருகிறேன். இத்தகைய  பெண்கள் மனிதர்களுக்குக் கிடைக்கக் கூடியவர்கள் அல்லவே! நான் தருகின்ற இவர்களால் நீவேண்டிய பணிவிடை பெற்றுக்கொள். ஆனால் மரணத்தை மட்டும் கேட்காதே.

நசிகேதனின் ஆசையின்மை.


25. மரணதேவனே! நீங்கள் கூறுகின்ற இன்பங்கள் அனைத்தும் நிலையற்றவை. அவை மனிதனுடைய புலன்கள் அனைத்தின் ஆற்றலையும் வீணாக்குகின்றன. வாழ்க்கையோ குறுகியது. எனவே நீங்கள் சொன்ன குதிரைகள்,ஆடல்கள், பாடல்கள் எல்லாம் உம்மிடமே இருக்கட்டும்.

உலகின் இன்பங்கள் நிலையற்றவை. அதாவது உலகப் பொருட்களிலிருந்து கிடைக்கும் இன்பம் நிலையாக இருக்காது. அந்த இன்பங்களைத் தொடர்ந்து எப்போதும் துன்பங்கள்வரும். அது மட்டும் அல்ல, இன்பங்களை அனுபவிக்க அது ஆற்றலை விரயம் செய்து புலன்களை அழிக்கின்றன. நம்மையும் அழித்து, துன்பங்களையும் விளைவாகக்  கொண்டுவருகின்ற இந்த உலக இன்பங்களை நாடக் கூடாது. மனிதனின் ஆயுள் மிகவும் குறுகியது. இறைவன் தந்துள்ள இந்தக் குறுகிய ஆயுளை அற்ப சுகங்களில் செலவிடக்கூடாது. உயர் லட்சியத்தை அடைவதற்காகவே பயன்படுத்தவேண்டும். இதனை அறிந்து கொண்டு, எமதர்மன் அளித்த சுகபோகங்களை மறுத்து விட்டான் நசிகேதன்.

26.மனிதன் பணத்தாால் திருப்தி அடையக்கூடியவன் அல்ல.  உன்னை பார்த்தால் வேண்டிய செல்வம் பெறுவது உறுதி. நீங்கள் ஆளும்வரை என்னுடைய ஆயுளுக்கும் பஞ்சமில்லை. எனவே ஆயுளோ செல்வமோ எனக்கு வேண்டாம். நான் கேட்க தக்க வரம் இது ஒன்றே (மரணத்திற்கு பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும், இல்லையென்று சிலரும் கூறுகின்றனர். இந்த சந்தேகத்தை உன்னிடம் கேட்டு தெளிவு பெற விரும்புகிறேன்). நான் கேட்க விரும்பும் மூன்றாவது வரம் இதுவே.

பத்து டொலர் அல்லதுபத்து ரூபாய் கிடைத்தால் போதும் என்று தோன்றும். நூறு கிடைத்தால் ஆயிரம் போதும் என்று தோன்றும். இவ்வாறு வளர்ந்து கொண்டே செல்லும்  பணத்தின் மீது உள்ள ஆசை. ஆசை ஒரு சங்கிலி . பொதுவாக பணம் மட்டும்மல்ல உலக இன்பங்கள் எதிலும் திருப்தி வராது. எமதர்மன் கொடுத்த அத்தனை செல்வத்தை அனுபவித்தாலும் விளைவு ஒன்றாகத்தான் இருக்கும்.  திருப்தி கிடைக்கப் போவதில்லை. எனவே அதை நாடிப் பயனில்லை. புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப ஒருவருடைய ஆயுளை நிர்ணயிப்பவன் எமதர்மன். வேண்டிய காலம் வரை வாழ்வதற்கான வரத்தை நசிகேதனுக்கு அவரே அளித்துள்ளார். ஆனாலும் அந்தக் காலம் முடிந்தபின் இறக்கத்தான் வேண்டும். எனவே நீண்ட ஆயுளாலும் பலன் இல்லை.

அதனால், மரணத்தைப்பபற்றி தான் கேட்டதற்கு விடை வேண்டும், அதுமட்டுமே வேண்டும் என்று சாதிக்கிறான் நசிகேதன்.

27. மூப்பற்றவர்களும் மரணமற்றவர்களுமான உங்களை அடைந்து  உண்மையை அறிந்து கொண்டேன். நானோ மூப்பும் மரணமும் உள்ள கீழ் உலகில் வசிப்பவன் பாடல், உடல்சுகம் முதலியவற்றால் உண்டாகும் இன்பம் என்ன என்பவற்றை சிந்தித்து அறிந்தவன். எனேவ எவ்வளவுதான் நீண்ட ஆயுள் தந்தாலும் அந்த வாழ்கையில்  நான் ஆசை வைப்பேனா?

தேவர்கள் மூப்பற்றவர்கள், மரணமற்றவர்கள் என்று கூறப்படுகின்றனர். அதாவது  நம்முடன் ஒப்பிடும்பபோது  அவர்கள் இன்னும் நீண்டகாலம்,  மிக நீண்டகாலம் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களும் அத்தக் காலம் முடிந்ததும் மீண்டும்  பிறப்பிற்கு உள்ளாகியே தீரவேண்டும்.  உங்ககளை அடைந்து உண்மையை அ்றிந்து கொண்டேன். ( என்று கூறுவதை இதைத்தான்.) தேவர்களே ஒருநாள் மரணத்தைத் தழுவவேண்டுமானால் மனிதனின் ஆயுள் எவ்வளவு சிறியது!  அதனை இந்த நிலை அற்ற உலகங்களில் செலவிடுவேனா?  என்பது நசிகேதனின் கேள்வி. மரணத்திற்கு பின்னால் என்ன உள்ளது என்பதை மட்டுமே அறிய விரும்புகிறார் அவர்.

28.மரணதேவனே!  எந்த விசயத்தில்  இந்த சந்தேகம் நிலவுகிறதோ, மறு உலக விசயத்தைப் பற்றி அறிய எதனை  அறிந்தால் பெரும்பலன் கிடைக்குமோ, எந்த உண்மை மிகரகசியமாக வைக்கப்பட்டுள்ளதோ , அதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். வேறு எந்த வரமும் எனக்கு வேண்டாம்.

இவ்வாறு கட உபநிஷத்தின் முதல் அத்தியாயத்தின் முதல் பகுதி நிறைவு பெறுகிறது.


 மூன்று வரங்கள் ஒருகண்ணோட்டம்


நசிகேதன்

உயர் உண்மைகளை நாடுபவர்களுக்கு நசிகேதன் கதை ஒரு கலங்கரை விளக்கம். அவர்களிடம் இருக்க வேண்டிய சில முக்கியமான குணங்கள் நசிகேதனின் மூலம்  வெளிப்படுத்தப் படுகின்றன.

முதலாவதாக சிரத்தை (2. தட்சிணைகள்  எடுத்துச் செல்வதை குமாரன் நசிகேதன் கண்டான்.  சிரத்தை அவனை வந்தடைந்து. அவன் சிந்திக்கலான்) வெறும் நம்பிக்கைமட்டும் அல்ல, அந்த  நம்பிக்கையை சாதிக்கின்ற செயல்திறன்.

இரண்டாவதாக சுய மதிப்பு (5. பல விசயங்களில் நான் முதல் நிலையில் இருக்கிறேன்.  பல விசயங்களில் இடநிலையில் இருக்கிறேன். என்னை எமனிடம் அனுப்புவதின் மூலம் தந்தை என்ன சாதிக்கப்போகிறார் என்று சிந்தித்தான் நசிகேதன்.)தனது மதிப்பு நசிகேதனுக்கு  நன்றாகத் தெரிந்ததிருந்தது. அதாவது, தன்னைப்பற்றி  அவன் அறிந்திருந்தான். சிரத்தை மிக்கவனான  எனக்கு சொல் என்று (13. எமதர்மனே! சொர்கத்தில் வாழ்பவர்கள் தேவத்தன்மையை பெறுகின்றனர்.  அங்கே அழைத்து செல்லக் கூடிய யாகத்தைப்பற்றி உனக்குத் தெரியும். சிரத்தை மிக்கவனான எனக்கு அதைப்பற்றி சொல்ல. இதனை இரண்டாவது வரமாகக்கேட்கிறேன்.) அவன் சொல்வதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. சிரத்தை உள்ளவர்களிடம் சொன்னால் அது வீண்போகாது. ஏனெனில் அதை அவர்கள் செயல்படுத்துவார்கள். தன்னால் செயல்படடுத்த முடிந்ததையே அவர்கள் கேட்பார்கள், கேட்டதை செயல்படுத்துவார்கள். நசிகேதன் சொல்லுகிறான், எமதரமன் சொல்வதைக் கடைபிடிக்கின்ற திறமை தன்னிடம் இருப்பதை  உணர்திருந்தான் நசிககேதன். இதுவவேதான் சுயமதிப்பு  என்பது.

அதுமட்டுமின்றி, செல்வம் பதவி பெண் என்று பலவிசயங்களை  காட்டி திசைதிருப்ப எமதர்மன்  முயற்சித்தபோது (இந்த இன்பம் என்ன என்பதைச்  சிந்தித்து அறிந்தவன் நான்(27மூப்பற்றவர்களும் மரணமற்றவர்களுமான உங்களை அடைந்து  உண்மையை அறிந்து கொண்டேன். நானோ மூப்பும் மரணமும் உள்ள கீழ் உலகில் வசிப்பவன் பாடல், உடல்சுகம் முதலியவற்றால் உண்டாகும் இன்பம் என்ன என்பவற்றை சிந்தித்து அறிந்தவன் எனேவ எவ்வளவுதான் நீண்ட ஆயுள் தந்தாலும் அந்த வாழ்கையில்  நான் ஆசை வைப்பேனா) என்று தைரியமாகக் கூறுகிறான் நசிகேதன். தன்னைப்பற்றி அவன்  உயர்ந்த மதிப்பு வைத்திருந்தான் என்பதையே காட்டுகிறது.

சுயமதிப்பை ஆணவத்துடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. இல்லாத திறமைகளை இருப்பதாகக் காட்டிக்கொள்வதும், பலவீனங்களை மறைப்பதற்காக போடும் முகமூடியே ஆணவம். சுயமதிப்பு என்பது தன்னிடம் இருப்பதைப் புரிந்து கொள்வது. ஆணவம் பிறரைக் கீழாகப் பார்கும், சுயமதிப்பு அனைவரையும் சமமாகப் பார்கும்.

எனவே தன்னறிவு (self knowledge) அதன் விளைவாக வருகின்ற சுயமதிப்பு இரண்டும் உயர்வாழ்கைக்கு மிகவும் இன்றியமையாது.

அடுத்தது உண்மையை ஏற்றுக் கொள்ளல் (openness to reality). வாசிரவஸ் நசிகேதனை மரண தேவனிடம் அனுப்பத் துணிந்த போதும் கோபமோ ஆத்திரமோ அடையாமல் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு ஆழ்ந்து சிந்திக்கிறான் அவன். (5,. பல விசயங்களில் நான் முதல் நிலையில் இருக்கிறேன்.  பல விசயங்களில் இடநிலையில் இருக்கிறேன். என்னை எமனிடம் அனுப்புவதின் மூலம் தந்தை என்ன சாதிக்கப்போகிறாா் என்று சிந்தித்தான் நசிகேதன். 6. முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். இப்போது உள்ளவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அதையும் சிந்தித்துபாருங்கள். செடி கொடிகளைப்போல் மனிதன் பிறக்கவும் இறக்கவும் செய்கிறான்.  என்று தந்தையிடம் கூறினான் நசிகேதன்.). சூழ்நிலை கொண்டு வருபவற்றை, அவை நல்லவையானாலும் கெட்டவையானாலும்  அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். உயர் உண்மையை  நாடுபர்கள் ஒருபோதும் சூழ்நிலைகளை மாற்றியமைக்க முயற்சி செய்யக் கூடாது. எத்தகைய சூழ்நிலை வந்தாலும், உடனே மனத்தை உள்ளே திருப்பி அதனை அக(body and mind) வளர்சிக்கான  ஒரு படியாக மாற்றும்  திறமைவேண்டும்.

அடுத்தது துணிச்சல் (10) எமனையே நேரே சந்திக்கும்  துணிச்சலை நசிகேதனிடம் காண்கிறோம். பாதையில் எத்தனை இடர்கள் வந்தாலும் அத்தனையும் எதிர்கொண்டு, தான் லட்சியமாக கொண்டதைச் சாதிப்பதற்கான துணிச்சல், உண்மையை நாடுபவர்களிடம் துணிச்சல்வேண்டும்.

கடைசியாக ஆசையின்மை(28.மரணதேவனே!  எந்த விசயத்தில்  இந்த சந்தேகம் நிலவுகிறதோ, மறு உலக விசயத்தைப் பற்றி அறிய எதனை  அறிந்தால் பெரும்பலன் கிடைக்குமோ, எந்த உண்மை மிகரகசியமாக வைக்கப்பட்டுள்ளதோ அதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். வேறு எந்த வரமும் எனக்கு வேண்டாம். ) உயர் உண்மையை  நாடுபவர்களிடம் உலகைப்பற்றிய, அதன் சுகபோகங்களைப் பற்றி தெளிவான கருத்து இருக்க வேண்டும். அப்போது மட்டுமே அவர்களுடைய  லட்சியத்தை அடைய முடியும்.  உலகம் அதன் சுககபோகங்கள் என்றால் என்ன?  அவற்றிற்கு எந்தளவில் இடம் கொடுக்கவேண்டும், என்பது மிகமுக்கியமானது  ஒன்று. உலகின்  சுகங்கள் அத்தனையயையும் எமதர்மன் கொடுத்த பிறகும் நசிகேதன் அவற்றை உதறிவிட்டு, லட்சியத்திலேயே குறியாக இருக்கிறான். ஏனெனில் அந்த சுகபோகங்களின் நிலையாமையை அவன்  சிந்தித்து  அறிந்திருந்தான் (27. மூப்பற்றவர்களும் மரணமற்றவர்களுமான உங்களை அடைந்து  உண்மையை அறிந்து கொண்டேன். நானோ மூப்பும் மரணமும் உள்ள கீழ் உலகில் வசிப்பவன் பாடல், உடல்சுகம் முதலியவற்றால் உண்டாகும் இன்பம் என்ன என்பவற்றை சிந்தித்து அறிந்தவன் எனேவ எவ்வளவுதான் நீண்ட ஆயுள் தந்தாலும் அந்த வாழ்கையில்  நான் ஆசை வைப்பேனா?). எனவே  உண்மையை நாடுபவனுக்கு உலகின் கவர்ச்சிகள் எதனாலும் நிலைகுலையாத மனம் வேண்டும்.

மூன்று வரங்கள்


நசிகேதன்  எமதர்மனிடம் கேட்கின்ற மூன்று  வரங்களில் ஒரு தெளிவான, படிப்படியான  லட்சிய நாட்டத்தை காண்கிறோம். உயர் வாழ்க்கையை, ஆன்மீக வாழ்க்கையை நாடுகிறோம் என்பதற்காக உலகின் உண்மையையோ சமுதாய உறவுகளையோ தூக்கி எறியவேண்டும் என்பதில்லை.

நசிகேதனின் முதல்வரம் தந்தை தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாக இருந்தது. இது குடும்பத்தில் ஒரு  நல்ல உறவு நிலவவேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. பெற்றோருடனும் குடும்பத்தில் உள்ளவர்களிடமும் சரியான உறவு நிலவ வேண்டும்.

 இரண்டாம் வரம் யாகம் பற்றியது. யாகங்களின் மூலம் இயற்கைை சக்திகளுடன் நாம் தொடர்புகொள்கிறோம். நமக்கு  வேண்டியவற்றை இயற்கை சக்திகளின் மூலம் சாதித்துக் கொள்கிறோம். அதாவது, இயற்கையைப் பேணுதல், சமுதாயத்துடனும் இயற்கையுடனும் இயைந்து வாழ நாம் கற்றிருக்க வேண்டும்.

 மூன்றாம் வரம் உயர் உண்மையைப்பற்றியது.


குடும்பத்துடனும் சமுதாயாத்துடனும் இயற்கையுடனும் நல்ல உறவை வைத்துக்கொண்டே உயர் ஆன்மீக உண்மைகளை நாம் அடைய முடியும் என்பதை இந்த மூன்று வரங்களும் நமக்கு காட்டுகின்றன.



அத்தியாயம் 2


எல்லாம் உன்னுள்



பிரித்தறிந்து வாழ்!


மரணத்திற்கு பிறகு மனிதனின் நிலை என்ன என்று கேட்டான் நசிகேதன். பலவிதங்களில் சோதித்து அவனது தகுதியை அறிந்த பிறகு பதில் சொல்லத் தொடங்குகிறான் எமதர்மன்.

மரணத்திற்கு பின்னால் என்ன உள்ளது என்பதைப் பற்றி அறிய வேண்டுமானால் மரணத்தை எதிர் கொள்ள வேண்டும். இறக்கின்ற ஒவ்வொருவரும் மரணத்தை எதிர் கொள்வதில்லையா?  இல்லை. பெரும்பாலோரும் மரணம் வருமுன்பு பயத்திலே செத்து விடுகின்றனர். எனவே அவர்கள் மரணத்தை எதிர் கொள்வதில்லை.

மரணத்தை எதிர்கொள்வது எப்படி


வாழ்கையில் கவனம் செலுத்துவதன் மூலம். இந்த வாழ்க்கையைச் சிறப்பாக, உரிய முறையில் வாழ்பவனே இறைநிலையை அடைகிறான். வாழ்கை நம் முன் பல அனுபவங்களைக் கொண்டு வரும், சூழ்நிலைகளை உருவாக்கும், வாய்ப்புக்களை தரும்.  அவற்றுள், நமது லட்சியத்திற் கானவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றவற்றை விலக்கி வாழ அறிந்திருக்கவேண்டும்.  இவ்வாறு பிரித்தறிந்து வாழ்வதை அத்யாத்மயோகம் என்று இந்த அத்தியாயத்தில் விழக்குகிறார் எமதர்மன். இவ்வாறு வாழத்தெரிந்தவனால் மரணத்தை எதிர்கொள்ள முடியும்.  மரணத்திற்கு அப்பால் உள்ளது என்ன என்பதை அறியமுடியும்.

எனவே வாழ்க்கையின் ஓர் அற்புதமான சித்திரத்துடன் தனது விளக்கத்தை தொடங்குகிறான் எமதர்மன்.

வாழ்க்கையின் இரண்டு கோணங்கள்.


பொதுவாக மனிதனிடம் இருப்பவற்றை வைத்தே அவர்களை எடைபோடுகிறோம்.  வீடு, செல்வம், பதவி, அந்தஸ்து போன்ற புற வளர்சிகளே அவர்களை நிர்ணயிக்கின்றன. ஆனால் அக வளர்ச்சி, உணர்வின் விரிவு என்ற ஒன்று உள்ளது. மனிதன் அகத்திலும் வளர்கிறான். அன்பு இரக்கம், விவேகம் போன்ற அவனது பண்புகள் விரிகின்றன. தன் உடம்பை, தன்னை மட்டுமே நேசித்தவன், தன் வீடு, தன் கிராமம், தன் நாடு, உலகம் பிரபஞ்சம் முழுவதையுமே தனதாகக் கண்டு நேசிக்கும் அளவிற்கு மனிதனின் உணர்வு விரிகிறது.

இந்த அக வளர்ச்சிதான் உண்மையான வளர்ச்சி. புற  வளர்ச்சிக்குக் காரணமாக அவனிடம் சேர்ந்தவை விலக நேர்ந்தால் அவன் பழையபடியே ஆகிவிட நேர்கிறது. அகவளர்சியில் எதையும் இளக்கும் அபாயம் இல்லை.

அக புற வளர்சிக்கான களம் உலகம் 1 - 3

அக வளர்சி, புற வளர்சி இரண்டிற்குமான களமாக  உலகம்  உள்ளது. உலகம் இரண்டிற்கும் வாய்ப்பு தருகிறது.

1. மேலானது வேறு, சுகம் தருவது வேறு. அவை இரண்டும் வேறுபட்ட பலன்களைத் தந்து அ்வற்றின் மூலம்   மனிதனை பிணைக்கின்றன.  மேலானதை ஏற்றுக் கொள்பவனுக்கு நன்மை உண்டாகிறது. சுகம் தருவதைவை நாடுபவன் லட்சியத்திலிருந்து வீழ்கிறான்.

 உலகையும் அது தரும் சுகபோகங்களையும் முடிவாகக் கொண்டு அவற்றைத் தேடுபவர்கள் பலர், அவை பாதையில் சில படிக்கற்கள் மட்டுமே என்று கண்டு உயர் லட்சியங்களை நாடுபவர்கள் சிலர்.  இது சாரரின் முன் உலகம் உள்ளது.  சுகம் தருவது புற வளர்ச்சிக்கு உதவுகிறது, மேலானது அக வளர்ச்சிக்கு உதவுகிறது .  உலகின் சுகங்கள் அனுபவிக்கின்ற அந்த நேரத்துக்கு இன்பத்தை தந்தாலும் முடிவில் துயரத்தில் ஆழ்த்துகின்றன. உயர் லட்சியங்கள் ஆரம்பத்தில் சிரமமாக , துன்பம் தருபவையாக இருந்தாலும்,  முடிவில் பேரின்பத்தில் சேர்க்கின்றன. மேலோட்டமாக இன்பதை நாடுபவன் முடிவில் துன்பத்தில் ஆழ்கிறான்.  அவன் லட்சியத்திலிருந்து வீழ்கிறான், என்பதையே இந்த மந்திரம் கூறுகிறது.

2. மேலானது சுகம் தருவது இரண்டும் மனிதனை அணுகுகின்றன. அறிவாளி அவற்றை ஆராய்ந்து அவை இரண்டையும்  பாகுபடுத்துகிறான்.  சுகம் தருவனவற்றை விட்டுவிட்டு மேலானதை தேர்ந்தெடுக்கிறான்.  மூடன், உடம்பின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு  சுகம் தருவனவற்றை நாடுகிறான்.

 பாதையில் பணக்கட்டு ஒன்று கிடக்கிறது,  அருகில் யாரும் இல்லை.  அதை இறைவன் தந்தது என்று எடுத்து பையில் இட்டுக்கொண்டு எதுவும் அறியாத போல் அங்கிருந்து அகலலாம், எடுத்து உரியவரை கண்டுபிடித்து சேர்க்கலாம், எடுத்து நல்ல பணிகளில் செலவிடலாம், போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவிக்கலாம், அங்கேயே விட்டு செல்லலாம். பொறுப்பு நம் கையில்.  அந்த பணத்தை பையில் இட்டு கொள்பவன் சுகம் பெறுகிறான். ஆனால் அது திருட்டு என்பதால் மேலானதை இழக்கிறான்.  இறைநெறியில் செல்வதற்கான தகுதியை இழக்கிறான். இவ்வாறு உலகம் வாய்ப்புகளைத் தருகிறது.  சூழ்நிலைகளை உருவாக்குகிறது. நமது இலட்சியம் என்ன, அந்த லட்சியத்திற்காகன பாதை எது, இந்தச் சூழ்நிலையில் நான் எப்படி நடந்து கொண்டால் அது அந்த லட்சியத்தை அடைய துணை செய்யும் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். பிரித்தறிந்து வாழ்வது என்பது இதுவே.


3. நசிகேதா!  நீயும் நன்றாக சிந்தித்து செல்வங்களையும் அழகிய பெண்களையும் ஒதுக்கிவிட்டீர். எந்த பாதையில் பெரும்பாலான மனிதர்கள் உழல்கிறார்களோ அது செல்வத்தை குறிக்கோளாக கொண்டது. அந்தப் பாதையை நீ தேர்ந்தெடுக்க வில்லை.

 இறைநெறி, உலகியல் இரண்டும் வேறுபட்டவை, நேர்மாறானவை, வேறுவேறான பாதைகளை பின்பற்றுபவை. எந்த ஆசையும் உன்னை மேலான பாதையை நாடுபவையிலிருந்து விலக்கவில்லை. எனவே நீ இறைநெறியில் நாட்டம் உடையவன் என்று நான் கருதுகிறேன்.

 வித்யை (இறைநெறி) அவித்யை (உலகியல்) இரண்டும் உள்ளன. அவித்யை மோகத்தில் ஆழ்த்துகிறது.  காமமும் பணத்தாசையும் அதிலிருந்தே உண்டாகிறது. அது மனிதனை மோகத்தில் ஆழ்த்துகிறது. பக்தி, தயை, ஞானம், பிரேமை இவற்றை தோற்றுவிப்பது வித்யை. இது இறைநெறியில் நம்மை அழைத்துச் செல்கிறது.

5.உலகியல் நடுவில் வாழ்கின்ற மூடர்கள் தங்கள் அறிவாளிகள் என்றும் பண்டிதர்கள் என்றும் கருதி குறுக்கு வழிகளை பின்பற்றுகிறார்கள்.  குருடனால் வழிகாட்டப்பட்ட குருடனைப் போல் இவர்கள் மீண்டும் மீண்டும் பிறவிச் சுழலில் உழல்கிறார்கள்.

 மேலானது என்று எமதர்மன் குறிப்பிடுகின்ற அக வளர்ச்சி அல்லது இறைநெறியில் குறுக்கு வழி எதுவும் கிடையாது.  உலகின் சுகபோகங்களை அனுபவித்து அல்லது குருவருளாலோ இறையருளாலோ புரிந்துகொண்டு, இந்த உலகம் போதும்,  இனி இறைவன் மட்டுமே வேண்டும், என்று சொல்ல வல்லவன் தான் இறை நெறியில் செல்ல முடியும்.  கொஞ்சம் ஆசைகளை வைத்துக் கொள்ளலாம், கொஞ்சம் இறைவனையும் தேடலாம் என்றெல்லாம் கூறுபவர்கள் உண்மையை அறியாதவர்கள்.  சுயநலன்களுக்காக பிறருக்கு தவறான வழிகாட்டுபவர்கள் இவர்கள் காட்டும் பாதைகள் ஆரம்பத்தில் இதம் தருபவையாக தோன்றும்.  ஆனால் இறுதியில் படுகுழியில் ஒருவனை வீழ்த்தும்.  அத்தகைய வழிகாட்டுபவன் பின்பற்றுபவன் இருவருமே படுகுழியில் விழ்கிறார்கள்.

அகவளர்ச்சியை நோக்கமாக கொண்டு இறை நெறி ஆரம்பத்தில் கடினமாகத் தெரிகிறது . ஆனால் இறுதியில் பேரின்பத்தை தருகிறது எனவே குறுக்கு வழிகளை நாடாமல் சிரமமாக இருந்தாலும்,  உண்மையான வழிகளை நாட வேண்டும் என்பது இந்த மந்திரத்தின் கருத்து.

6.  குறுக்கு வழியில் செல்கின்ற ,பணத்தாசையால் அறிவிழந்த மனப்பக்குவமற்றவர்களுக்கு மறுவுலக உண்மைகள் புரிவதில்லை. இந்த உலகம்தான் எல்லாம், வேறு எதுவும் கிடையாது என்று கருதுகின்ற அவர்கள் மீண்டும் மீண்டும் என்னை அடைகிறார்கள்.

குறுக்கு வழிகளை நாடுபவர்கள் மீண்டும் மீண்டும் மரணதேவர்களிடம் செல்கிறார்கள். அதாவது பிறப்பு இறப்பு சுழலில் உழல்கிறார்கள். அவர்கள் உயர்ந்த கதியை அடைவதில்லை. ஏன்?  ஏனெனில் அவர்களுக்கு உண்மை புரியவில்லை,  உலகமும் அது தருகின்ற சுகம்களும்தான் எல்லாம்.  அவற்றை அனுபவிப்பதே லட்சியம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அகவளர்சி உயர்லட்சியம் எதையும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

 மரத்தால் செய்யப்பட்ட யானை சிலை ஒன்று உள்ளது. அதை குழந்தை பார்க்கும் போது யானை என்று பயப்படுகிறது. அங்கே அது மரத்தைக் காணவில்லை. மன வளர்ச்சி பெற்ற ஒருவன் அதே சிலையைக் காணும்போது அவன் பயப்படுவதில்லை, ஏனெனில் அங்கே அவன் யானை காண்பதில்லை, மரப் பொம்மையை காண்கிறான்.  அதுபோல்தான் இந்த உலகமும் சுகபோகமும் காமமும் பணத்தாசையும் நம்மீது ஆதிக்கம் செலுத்தும் வரை உயர் லட்சியங்களோ அக உலகமோ எதுவும் நம் சிந்தனையில் வருவதில்லை.  அக வளர்ச்சி பெற்று உயர் லட்சியங்களை ஏற்று இறைநிலையை அடையும் வரை பிறவிச் சுழலிலிருந்து விடுபட முடியாது என்கிறது இந்த மந்திரம்.

உண்மையான குருவும் சீடனும் அபூர்வம் .


7. எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ, அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம், கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்.

ஆன்மா ஆன்மிகம் கடவுள் அகவளர்ச்சி, உணர்வு போன்ற உயர் உண்மைகளைப் பற்றி கேட்கும் வாய்ப்பு பெரும்பாலோருக்கு கிடைப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் நாம் உயர் உண்மைகளை உணர்வதற்கான தகுதி பெறும் போது. நமது மனம் அதற்கான பக்குவம் வரும் போது அந்த உண்மைகளை உபதேசித்தவர் வந்து சேர்வர் என்பது உண்மை. வயல் தயாரானதும் விதை வந்து சேர்ந்தே ஆகவேண்டும். என்பது இயற்கையின் அறிய இயலாத நியதியாகும். நாம் எவ்வளவோ விரும்பியும், நமக்கு உண்மை இன்னும் கிடைக்கவில்லை என்று நாம் அங்கலாய்த்துக் கொள்ளும் போது, நமது முதல் கடமை நம்முடைய உள்ளத்தை ஆராய்ந்து பார்த்து உண்மையிலேயே நாம்  உண்மையை விரும்புகிறோமா என்று கண்டுபிடிப்பது தான் பெரும்பாலோர் விஷயத்தில் நாம் இன்னும் தகுதி பெறவில்லை. நமக்கு உண்மையான ஆன்மீக தாகம் இன்னும் ஏற்படவில்லை என்பதையே காண்போம்.

 தகுதியான ஒருவர் வந்து அவரிடம் உபதேசம் பெற்றாலும் நமது நம்பிக்கை திடமாக இல்லாவிட்டால் பயனில்லை.  என்னால் உயர் உண்மைகளை அடைய முடியும் என்று நம்பிக்கை வேண்டும்,  இவரால் எனக்கு வழிகாட்ட முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்,  இந்த வழி என்னை என் லட்சியத்திற்கு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கை வேண்டும்,  இவற்றுள் ஒன்று ஊசலாடினால் நமது முன்னேற்றம் தடைபடும்.  எனவேதான் தகுதி வாய்ந்த குருவும் அபூர்வம்,  தகுதி வாய்ந்த சீடனும் அபூர்வம்,  என்று இந்த மந்திரம் கூறுகிறது. ஆன்மீகத்தைப் பற்றிப் பேசுபவர் அற்புதமானவராக இருக்க வேண்டும். கேட்பவரும் அப்படியே இருக்கவேண்டும்.  இருவரும் சிறப்பான அசாதாரண மானவர்களாக இருக்கும் போது மட்டுமே மிகச் சிறந்த ஆன்மீக வளர்ச்சி ஏற்படுகிறது.  இல்லாவிட்டால்  ஏற்படாது.  இவர்களே உண்மையான குருமார்கள்.  இவர்களே உண்மையான சீடர்கள்.  இவர்களோடு ஒப்பிடும் போது மற்றவர்கள் ஆன்மீகத்தோடு விளையாடு கிறார்கள்.  தங்கள் அறிவாற்ரலுக்கு பயிற்சி கொடுக்கிறார்கள்.  தங்கள் ஆர்வத்தைச் சிறிது தீர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில், இன்னும் வெளி விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.


8.உலகியல் மனிதர்கள் கூறும் வழிகளால் இந்த ஆன்மாவை அறிய முடியாது, ஏனெனில் அவர்கள் பலவிதமாகக் கூறுகின்றனர்.  அனுபூதி பெற்றவனின் உபதேசங்களைப் பின்பற்றினால் குழப்பம் இல்லை இந்த ஆன்மா அணுவை விட நுண்ணியது எனவே வாதங்களுக்கு அப்பாற்பட்டது.

 ஆன்மா அனுபவத்திற்கு உரியது,  ஆராய்ச்சிக்கும் வாதங்களுக்கு உரியது அல்ல. கடலை நேரில் காணாத ஒருவனுக்கு எவ்வளவு விளக்கினாலும் அவனால் கடலைப் புரிந்து கொள்ள முடியாது.  அதுபோலவே ஆன்மாவை விளக்கங்காளால் புரிந்துகொள்ள முடியாது.  ஆன்மா என்ற ஒன்று உண்டு, அது பெரியது, அது சிறியது என்றெல்லாம் பல விளக்கங்களை நூல்களில் காண முடியும்.  அவற்றைப் படித்து விட்டு விளக்க முயன்றால் அது சரியான விளக்கமாக அமையாது.  அந்த விளக்கத்தைக் கேட்டு அதை பின்பற்ற முயற்சிப்போம் ஆனால் படுகுழியில் வீழ்வார்.  ஆனால் ஆன்மாவை அனுபூதியில் அறிந்தவன் சரியான வழியைக் காட்டுவான். அந்த வழியில் செல்பவனும் அதனை அடைவான்.

 அன்புக்குரியவனே!  நீ அடைந்துள்ள இந்த அறிவு வாதங்களில் அடையக்கூடியது அல்ல. உண்மை உணர்ந்து ஒருவர் உபதேசித்து அதை பின்பற்றும் போது அது ஒருவனை மேலான ஞானத்துக்கு அழைத்துச் செல்கிறது . நசிகேதா! உண்மையை   அடைவதில் நீ உறுதி உடையவனாக இருக்கிறாய்.  உன்னை போன்ற மாணவர்கள் எங்களுக்குக் கிடைக்க வேண்டும்.

ஒரு லட்சியம் எடுத்துக் கொண்டால் அதனை அடைவதற்கான உறுதிவேண்டும் வழியில் எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறுகின்ற ஆற்றல் வேண்டும்.  அத்தகைய ஒருவரே இலட்சியத்தை அடைவார்.  நசிகேதன் மரணத்துக்கு அப்பாலுள்ள உண்மையை அறிய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டார். அதிலிருந்து அவனை விலக்குவதற்காக  எமதர்மன் எத்தனையோ ஆசைகளை காட்டினார்.  அவை அனைத்தையும் மறுத்துவிட்டு உண்மையை அடைய வேண்டும் என்ற ஒன்றிலேயே உறுதியாக இருந்தார் அத்தகைய மாணவர்கள் தனக்கு வேண்டும் என்று கூறி அவனைப் புகழ்கிறான் எமதர்மன்.

வினைப்பயன்களை நிலையற்றவை என்று நான் அறிவேன். அவற்றால் ஆன்மாவை அடைய முடியாது அதனால்தான் நிலையற்ற பொருட்களால் நசிகேத யாகத்தைச் செய்த நான் எமபதவியை அடைந்திருக்கிறேன்.

 நாம் செய்கின்ற நல்ல மற்றும் தீய செயல்களால் விளைபவை வினைப்பயன்கள். எவ்வளவு நல்ல செயலாக இருந்தாலும், அதன் விளைவாக எவ்வளவு உயர்ந்த சொர்க்க பதவி கிடைத்தாலும் அது நிலையற்றது. ஏனெனில் புண்ணியம் நிறைவுற்றதும் பூமியில் பிறந்தே ஆகவேண்டும். ஆசைகள் அற்ற நிலையை அடையும்போது மட்டுமே பிறப்பு-இறப்பு என்னும்  சுழலிலிருந்து விடுபட்டு நிலையான இறைவனை அடைய முடியும்.

 இங்கே எமதர்மன் தன்னையே உதாரணமாகக் காட்டுகிறான் நசிகேத யாகத்தைச் செய்ததால் தனக்கு சொர்க்கத்தில் பதவி. அதாவது எமது பதவி கிடைத்துள்ளது என்கிறார். அவரது புண்ணியம் காலம் தீர்ந்ததும் யம பதவியும் போய்விடும்.

நிலையற்ற பொருட்களால் என்று எமன் இங்கே கூறப்படுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஹோமகுண்டம், விறகு, நெய் போன்ற பொருட்களால் செய்த யாகத்தை எமதர்மன் இங்கே குறிப்பிடுகிறார். இது நிலையற்ற சொர்க்க பதவியையே தரும்.  அதே யாகத்தை ஒரு அக யாகமாக ஆன்மீக சாதனையாக ஒரு வித்யையாக செய்யும்போது அது நிலையான முக்திப் பேற்றைத் தருகிறது. அந்த சாதனையையே இந்த மந்திரம் விளக்குகிறது.

நசிகேதா!  சொர்க்கலோகம் ஆசைகளின் நிறைவிடம், உலகின் ஆதாரம் யாகங்களின் பலனாக கிடைக்கின்ற அளவற்ற இன்பங்களில் இருப்பிடம், பயமின்மையின் உறைவிடம், போற்றத்தக்கது, மகிமை வாய்ந்தது, நீண்ட காலம் நிலைத்து இருப்பது, மேலானது. புத்திசாலியான நீ (இந்த உண்மைகளை அறிந்தும் அது நிலையற்றது என்பதற்காக) அதனை உறுதியுடன் மறுத்து விட்டாய்.

பூமியில் அனுபவிக்கின்ற சுகபோகங்கள் போதாமல் சொர்க்கத்தை நாடுகிறான் மனிதன்.  எனவே சொர்க்கம் என்பது அனைத்து ஆசைகளும் நிறைவுபெறுகின்ற இடமாக கருதப்படுகிறது.

பிரபஞ்சத்தை இயக்குகின்ற பல்வேறு சக்திகள் தேவர்களாக உருவகிகப்பட்டு இருப்பதை கண்டோம். யாகங்களின் மூலம் மனிதர்கள் தேவர்களைப் பேணவேண்டும், பதிலாக தேவர்கள் மழை, காற்று முதலானவற்றின் மூலம் மனித குலத்தை வளர்பார்கள்.  இந்த சுழற்சியில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போது இயற்கை வளம் குன்றுகிறது எனவேதான் சொர்க்கம் உலகிற்கு ஆதாரமாகக் கூறப்பட்டது.

புற யாகத்தால் தனக்கு எம பதவி மட்டுமே கிடைத்தது என்றும் நசிகேத வித்தை இத்தகைய உலகங்களில் நிலையாமையை உணர்ந்து நசிகேதன் அவற்றை மறுத்து விட்டான் என்றும் கூறிய எமதர்மன் அக யாகத்தைப் பற்றி அதாவது நசிகேத வித்யை பற்றி கூற ஆரம்பிக்கிறார்.

 அந்த அக்னி இதயக் குகையில் உள்ளது என்பது நசிகேத வித்தையையின் அடிப்படைக் கருத்தாக உள்ளது. அந்த இதயக் குகை பற்றிய விளக்கம் ஆரம்பிக்கிறது.

இதயக் குகை


 நீ கேட்ட ஆன்மா சிரமப்பட்டு அடைய வேண்டியது, மறைவான இடத்தில் இருப்பது, இதய குகையில் ஒளிர்வது, இருண்ட பகுதியில் உள்ளது, பழமையானது .  புத்தி விழிப்புற்றவர்கள் ஒளிமயமான அந்த ஆன்மாவை அத்யாத்ம யோகத்தால் தியானித்து இன்ப துன்பங்களைக் கடக்கிறார்கள்.

 நம்முள்ளே இருக்கிற நமக்கு ஆதாரமான ஆன்மா எளிதாக அறியதக்கது அல்ல. புறமாக இயக்குகின்ற புலன்களை அகமுகமாக்கி ஆன்மாவை தேடுவது அவ்வளவு எளிய காரியம் அல்ல . எனவேதான் அதனை சிரமப்பட்டு அடைய வேண்டியது என்று இந்த உபநிஷதம் குறிப்பிடுகிறது.

 இதயக்குகையில் ஆன்மா இருப்பதாக ஏற்கனவே கண்டோம்.  ஆனால் இதயக்குகை என்று ஒன்று இருப்பதாக நாம் அறிவதில்லையே, ஏன் ? இதனை சற்று விரிவாக அறிய வேண்டியது அவசியம்.

 இதயக் குகையைபற்றி பேசப்படுகிறது.  இது எந்த இதயம் லப்டப் என்று துடித்துக் கொண்டு இருக்கிற பௌதீக இதயம்   அல்ல இது .  இது ஆன்மீக இதயம்.

இதற்கு மூன்று அடையாளங்களைச் சொல்லுகிறது நாராயண ஸூக்தம்.

ஒன்று தொப்புளுக்கு மேலே ஒரு சாண் தூரத்தில் உள்ளது, பௌதீக இதயம் அதே தூரத்தில்தான் உள்ளது ஆனால் அது சற்று இடதுபுறம் உள்ளது. ஆனால் ஆன்மீக இதயம் நடுவில் உள்ளது.

இரண்டு, சுடர் வரிசையால் சூழப்பட்டுள்ளது.

மூன்று அந்த இதயம் பிரகாசிக்கிறது.  இந்த மூன்று அடையாளமும்  பௌதீக இதயத்திற்கு பொருந்தாது.

 இந்த ஆன்மீக இதயம்தான் இதயக் குகை.


ஆனால் இதனை நாம் உணர்வதில்லையே !    உணர்வதில்லை ஆனாலும் அது அங்கே உள்ளது.  இதுவே புத்தி , தீ ,இதயத்தாமரை மூன்றாம் கண் ஞானக்கண் என்றெல்லாம் சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.

 மிகப் பெரும்பாலோனரிடம் இந்த ஆன்மீக இதயம் மலராமல் அரும்பாகவே உள்ளது. இதனால் தான் இது குகை, இருண்ட பகுதி மறைவான இடம் என்றெல்லாம் கூறப்பட்டது. முதலில் அதை மலரச் செய்ய வேண்டும், உணரவேண்டும்.

 இதயக் குகையை உணர்வதற்கான ஒரு வழியாக இந்த உபநிஷதம் கூறுவது அத்யாத்ம யோகம். அத்யாத்ம என்றால் (ஆன்மா) யோகம் என்றால் (பொருந்துதல் அல்லது இணைதல்) அத்யாத்ம யோகம் என்றால் ஆன்மாவுடன் இணைதல். புறபொருட்களை விட்டுவிட்டு அகத்தை நாடும்போது, நாம் மேலும் மேலும் இதயக் குகையை உணர்வோம். புறப்பொருட்களிலிருந்து விலக விலக நம்முள் புறஉலகால் பாதிக்கப்படாத அக உலகம் ஒன்று இருப்பதை நாம் உணர்வோம். நம்முள் உள்ள இந்த அமைதி பிரதேசத்தை உணரத் தொடங்கிவிட்டால் புற உலகம் நம்மை பாதிப்பது படிப்படியாக  குறைந்துவிடும். இதையே இந்த மந்திரம் இன்ப துன்பங்களைக் கடக்கிறார்கள் என்று கூறுகிறது.

 அத்யாத்ம யோகா பயிற்சி


 13. இந்த உண்மையை தகுந்த குருவிடமிருந்து கேட்டு ஆராய்ந்து அறிய வேண்டும். பிறகு உடம்பிலிருந்து அதனைப் பிரித்து உணர வேண்டும். அணுபோன்றதும், ஆனந்தம் நிறைந்ததுமான ஆன்மாவை இவ்வாறு பிரித்து அறிபவன் ஆனந்தம் பெறுகிறான். நசிகேதா! உனக்கு அந்த பாதை திறந்து இருப்பதாக நினைக்கிறேன்.

 தலைவலி வந்தால் தலைவலி மாத்திரை சாப்பிடுகிறோம். இது எல்லோருக்கும் தெரியும் ஆனால் இது நோயை நிரந்தரமாக குணப்படுத்துவதற்கான வழி அல்ல. அதற்கு டாக்டரை அணுக வேண்டும் தலைவலிக்கான காரணத்தை ஆராய்ந்து அதற்குரிய மருந்தை தர அவரால் மட்டுமே முடியும் . அவரது ஆலோசனைப்படி சிகிச்சை செய்தால் தலைவலி முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.  அதுபோல்தான் அகவுலகு உண்மைகளும்.  ஆன்மா கடவுள் போன்ற விசயங்களும் பல நூல்களில் காணப்படலாம்.  பலர் சொல்லக் கேட்டும் இருக்கலாம். ஆனால் இவற்றை அனுபவித்து அறிந்த, ஆன்மாவை அனுபூதியில் உணர்ந்த,  இறைவனை நேரடியாக கண்ட ஒருவரிடமிருந்து இந்த உண்மைகளை அறிந்தால் மட்டுமே அது நம்மை சரியான வழியில் அழைத்துச் செல்லும்.  அத்தகைய ஒருவரே குரு எனப்படுகிறார். எனவே உயர் வாழ்க்கை அல்லது ஆன்மீக வாழ்க்கைக்கு முதல் தேவை தகுந்த குரு.  அவரிடம் இருந்து நேரடியாக உண்மைகளைப் பெற வேண்டும்.

 அடுத்ததாக குருவிடமிருந்து பெற்ற உண்மைகளை நன்றாக ஆராய்ந்து அதனை நமக்குரிய தாக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு மனத்தளவில் உடம்புவேறு, ஆன்மாவேறு என்று பிரித்தறிந்து பழக வேண்டும்.  இவ்வாறு தொடர்ந்து மனதிற்கு பயிற்சி அளிப்பது ஆரம்பகால அடிப்படை பயிற்சிகளுள் ஒன்றாகும்.  சாதாரணமாக நமது வாழ்வில் உடம்பே எல்லாமாக இருக்கிறது. உடம்பே எல்லாம், அதைத் தவிர எதுவும் இல்லை, என்பதை அடிப்படையாக வைத்தே நமது வாழ்க்கை செல்கிறது. ஆனால் உடம்பு ஒரு கருவி மட்டுமே, வாழ்க்கை என்னும் மாபெரும் பயணத்தில் நாம் அணிகின்ற ஒரு சட்டை மட்டுமே,  உண்மையான நாம் என்பது இந்த உடம்பினுள் ஒளிர்கின்ற ஆன்மா என்பதை மனதிற்கு புரியவைக்கவேண்டும்.

நசிகேதனை  பொறுத்தவரை இந்த மூன்று படிகளையும் கடந்து ஆன்மீக பாதையில் பயணம் செய்ய தயாராக இருக்கிறான் என்பதை இங்கே எமதர்மன் சுட்டிக்காட்டுகிறான்.


 நசிகேதனின் கேள்வி


14. தர்மம், அதர்மம், காரியம்,  காரணம்,  இறந்த காலம்,  எதிர் காலம், ஆகியவற்றிலிருந்து வேறுபட்டதாக நீ எதை காண்கிறாயோ நீ  அதை எனக்கு சொல்வாய்.

 பிரணவ தியானம் 15 - 17


அத்யாத்ம யோகத்தின் சாதனையாக ஓம்காரம் அல்லது பிரணவ மந்திரத்தை தியானிக்குமாறு கூறுகிறது உபநிஷதம்.  இது ஓங்காரம் சப்த பிரம்மம், நாதப் பிரம்மம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.  உலகம் படைக்கப்பட்ட போது முதலில் எழுந்தது இந்த ஓங்கார த்வனி. இது எங்கும் கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் யோகிகளால் இதனைக் கேட்க முடியும் என்றும் கூறப்படுகிறது. யாராலும் எழுப்பப்படாத ஓசை ஆதலால் இது அனாஹத த்வனி எனப்படுகிறது. ஓம்காரம் அதன் உபாசனை முறையும் நமது உபநிஷதங்களில் குறிப்பாக மாண்டூக்யம் போன்றவற்றில் சிறப்பாகப் பேசப்படுகிறது.  பிரம்மம் என்ற அறுதி நிலையிலிருந்து எழுந்த முதல் நாதம் ஆதலால் இதனைப் பின்பற்றி சொல்லும் போது இறைவனை அடையலாம். தொலைவிலிருந்து அலையோசை கேட்கிறோம். அந்த ஓசையை பின்பற்றிச் சென்றால் கடலை அடைந்து விடலாம் . அலையோசை இருந்தால் கடலும் இருக்கிறது. அதுபோல அனாஹத த்வனியை பற்றியவாறு சென்றோமனால் அந்த த்வனி குறிப்பதான பிரம்மத்திடம் போய்சேரலாம். அதுவே பரமபதம் எனப்படுகிறது.

 பிரணவ மந்திரத்தின் மகிமையை இந்த மூன்று மந்திரங்களும் கூறுகின்றன.


 1. எல்லா வேதங்களும் எந்த லட்சியத்தை  உபதேசிக்கின்றனவோ, எதற்காக எல்லா தவங்களும் செய்யப் படுகின்றனவோ, எதை விரும்பி பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கிறார்களோ அந்த லட்சியத்தை அடைவதற்கான மந்திரத்தை சுருக்கமாக உனக்கு சொல்கிறேன். அது "ஓம்".

 2. ஓம் என்ற இந்த மந்திரமே இறைவன்.  இந்த மந்திரம் மேலானது. இந்த மந்திரத்தை அறிந்து யார் எதை  விரும்புகிறானோ அவனுக்கு அது கிடைக்கிறது.

3. இந்தப் பாதை சிறந்தது. இந்த பாதை மேலானது இந்த பாதையை அறிந்து அதன்வழி செல்பவன் பிரம்மலோகத்தில் சிறப்புப் பெறுகிறான்.

மரணம் யாருக்கு?


உடம்பு, உயிர், ஆன்மா என்ற மூன்றின் சேர்க்கையே மனிதன்.  நாம் பொதுவாக மரணம் என்று குறிப்பிடுவது உடம்பின் மரணத்தை மட்டுமே. பழைய சட்டையை களைந்துவிட்டு புதிய சட்டையை அணிந்து கொள்வது போல் ஜீவன் ஒரு உடம்பை களைந்துவிட்டு  புதிய உடம்பு எடுக்கிறது. உடம்பை களைந்துவிடுதலையே  நாம் மரணம் என்கிறோம். ஆனால் நாம் ஆன்மா, நமக்கு மரணம் இல்லை. உடம்பின் மரணத்திற்குப் பிறகும் நாம் வாழ்கிறோம். என்றென்றும் நாம் வாழ்கிறோம்.


மரணம் யாருக்கு? என்று இந்த நான்கு மந்திரங்களும் கூறுகின்றன.

ஆன்மாவில் எந்த மாற்றங்களும் இல்லை: 18 -19

18. ஆன்மா பிறப்பதில்லை,  இறப்பதும் இல்லை.  இது எதிலிருந்தும் உண்டானது இல்லை,   இது பிறப்பற்றது , என்றென்றும் இருப்பது. நிலையானது, பழமையானது ; உடம்பு அழிக்கப்பட்டாலும் அழியாதது.

19. தான் அடிப்பதாக நினைப்பவன், தான் அடிபட்டதாக நினைப்பவன் இருவருமே உண்மை அறியாதவர்கள். ஆன்மா அடிப்பதும் இல்லை அடிபடுவதும் இல்லை.

 ஆன்மாவின் இயல்புகள் 20 - 22


அறிவு, உணர்ச்சி,   இரண்டும் வெவ்வேறானவை. நமது வாழ்க்கை இரண்டுடனும் பின்னிப் பிணைந்ததாக உள்ளது.  அன்பு, ஆசை, கோபம், பயம் வெறுப்பு,  என்று பொதுவாக நமது வாழ்க்கையின் உணர்ச்சிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன; அறிவின் செயல்பாடு மிகக்குறைவே.  அதிலும் ஆன்மீகம், கடவுள், ஆன்மா போன்ற உண்மைகளை அறிவினால் ஆராய்ந்து புரிந்துகொள்ள முடியாது, உணர மட்டுமே இயலும்.

ஆன்மா, கடவுள் போன்றவற்றை பற்றி படிக்கும் போது இந்த கண்ணோட்டம் நமக்கு மிக முக்கியமானது. அறிவுக்கு எட்டாதது என்பதை உணர்த்துவதற்கே  நமது ரிஷிகள் முரண்பட்ட இயல்புகளால் விழக்க முயல்கின்றனர். தொடரும் மந்திரங்களை, சாதனைகள் செய்து உணரமுடியுமே தவிர, அறிவினால் விளக்கவோ அறியவோ முடியாது. அதற்கான ஒவ்வொரு முயற்சியும் நம்மை மேலும் குழப்பத்திலேயே ஆழ்த்தும்.

20. அணுவைவிட அணுவானதும்,  பெரியதை விடப் பெரியதுமான இந்த ஆன்மா உயிர்கள் உயிரினங்களின் இதயக்குகையில் இருக்கிறது. ஆசையற்றவர்கள் அதனை காண்கிறார்கள். மனத்தெளிவினால் ஆன்மாவின் மகிமையை உணர்கின்ற அவர்கள் கவலையகளை கடந்து செல்கிறார்கள்.

21. அந்த ஆன்மா உட்கார்ந்தபடி வெகுதூரம்  செல்கிறது.
படுத்துக்கொண்டே எல்லா இடங்களுக்கும் செல்கிறது. அது இன்ப வடிவானது. துன்ப வடிவானதும் அதுவே.  அது ஒளிமயமானது. என்னைத் தவிர வேறு யார் அதனை அடைவதற்கு தகுதியானவர்?


என்னை தவிர யார் தகுதியானவர் என்று மரணதேவன் கேட்கிறார். அதாவது மரண நிலையை போன்றதொரு நிலையிலேயே ஆன்மாவை உணர முடியும்.  இதன் பொருளென்ன ?  மரணத்தில் புலன்கள் ,மனம் எல்லாம் செயலிழக்கின்றன.  அதுபோல் புலன்களும் மனமும் செயலிழந்து, அதாவது புலன்களையும் மனத்தையும் கடந்த ஒரு நிலையில்தான் ஆன்மாவை உணர முடியுமே தவிர புலன்களாலோ மனத்தாலோ அதனை அறிய முடியாது என்பதை இங்கே குறிப்பால் உணர்த்துகிறார் எமதர்மன்.

22.ஆன்மா உடல்களில் உடலற்றது;  நிலையற்ற பொருள்களில் நிலையானது; பெரியது; எங்கும் நிறைந்தது. அதனை புத்தி விழிப்புற்றவன் அதனை அறிந்து கவலைகளை நீக்கப் பெறுகிறான்.


ஆன்மா எல்லா உடல்களிலும் உறைகிறது.  ஆனால் அதற்கென்று ஒரு தனியான உடலோ உருவமோ இல்லை.  உடல்கள் உட்பட இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே நிலையற்றது.  மாறுவது, தோன்றி மறைவது.  ஆனால் இந்த மாற்றங்கள் எதுவுமே இல்லாமல் நிலைத்திருப்பது ஆன்மா.

நாளை உணவு கிடைக்காதோ என்ற எண்ணம் கவலையைத் தருகிறது. நாளை இறந்து விடுவோமோ என்ற பயம் கவலையை தருகிறது. அதாவது வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களே கவலையையும் பயத்தையும் தருகின்றன.  ஆன்மா இந்த மாற்றங்கள் அனைத்தையும் கடந்தது. ஆதலால் அந்த நிலையை அடைபவர் கவலைகளை நீங்க பெறுகிறார்.

நான் ஆன்மா என்று யாரால் உணர முடியும்? 23 - 24


 23.சொற்பொழிவுகளாலோ புலமையாலோ, பலவற்றை கேட்பதாலோ இந்த ஆன்மாவை அடைய இயலாது.  யார் அதை அடைவதற்காக மன ஏக்கம் கொள்கிறாரகளோ அவர்கள் மட்டுமே அதனை அடைகிறார்கள்.  அந்த ஆன்மா அவர்களுக்கு தங்களுடைய சொந்த இயல்பை வெளிப்படுத்துகிறது.


மன ஏக்கம்  என்பது ஒரு ஆன்மீக சாதனையாக கூறுவதுடன், இறைக்காட்சிக்கு முந்தின நிலையாகவும் வைக்கலாம்.  ஆழ்ந்த மன ஏக்கத்துடன் அழுதால் கடவுளை காண முடியும்...... மன ஏக்கம் வந்துவிட்டாலே அருணோதயம் ஆகிவிட்டது. அதன் பிறகு கதிரவன் தன்னைக் காட்டியருள்வான். அதுபோல் மனஏக்கதிற்குப் பிறகு இறைகாட்சி வருகிறது.

தீவிரமான தேவை ஏற்படும் போதுதான் மன ஏக்கம் வருகிறது.  உள்ளார்ந்த ஏக்கமின்றி, சொற்பொழிவுகளை செய்வதாலோ, கேட்பதாலோ, நூல்களைப் படிப்பதாலோ, ஆன்மீகத்தில் எதையும் அடைய இயலாது.  உயர் உண்மையை அடைய வேண்டும்,  இறைவனை காண வேண்டும், என்பதெல்லாம் உணவு உடை போன்ற நமது அன்றாடத் தேவைகளில் ஒன்றாக வேண்டும்.  அப்போது மட்டுமே அதற்காக நாம் ஏக்கம் கொள்வோம். ஏக்கம் கொள்ளும்போதுதான் வழி பிறக்கும், உண்மை தெரியும்.

தீய ஒழுக்கத்திலிருந்து விலகாதவவர்கள், புலனடக்கம் இல்லாதவவர்கள், மன ஒருமைப்பாடு இல்லாதவவர்கள், மனத்தின் பரபரப்பு அடங்கப்பெறாதவவர்கள், இத்தகையவவர்கள் எவ்வளவுதான் அறிவாளியாக இருந்தாலும் ஆன்மாவை அடைவதில்லை.

உயர் உண்மைகளை அடைவதற்கான சில அடிப்படை பண்புகள் இங்கே கூறப்படுகின்றன

1. நல்லொழுக்கம்:  எந்த ஒன்றையும் செய்ய வேண்டுமானால் அதற்கு ஆற்றல் தேவை. பௌதீகமான ஒன்றைச் செய்ய உடம்பின் ஆற்றல் வேண்டும்.  மனத்தால் ஒன்றை செய்ய வேண்டுமானால் மன ஆற்றல் வேண்டும்.  உயர் உண்மைகளை நாடி, இறைவனைத் தேடி செய்யப்படுகின்ற அனைத்தும் மனதின் மூலமே செய்யப்படுகின்றன. அதற்கு மன ஆற்றல் தேவை.  இந்த ஆற்றல் ஒழுக்க வாழ்வின் மூலம் மட்டுமே அடையப்படுகிறது. தூய்மையின் நிலையான ஆற்றல்.   மனத்திற்கு இந்த ஆற்றல் வரும்போதுதான் அதனால் உயர்ந்த உண்மைகளை சிந்திக்க முடிகிறது.  அதற்கான வழியில் செல்ல முடிகிறது.  இந்த ஆற்றலைத் தருவது நல்லொழுக்க வாழ்க்கை மட்டுமே.

 2.புலனடக்கம்: புலனகள் புற உலகை நாடுமாறே படைக்கப்பட்டுள்ளன.  எனினும் ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டால், அதற்கு ஏற்ப உடையவற்றை மட்டுமே நாடுமாறு அவற்றுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.  இது புலனடக்கம்.  தொடர்ந்த பயிற்சியால் இதனை சாதிக்க முடியும்.

3. மன ஒருமைப்பாடு: பணம் சம்பாதிப்பதிலும் சரி, கடவுளை வழிபடுவதிலும் சரி, மற்ற எதை செய்வதிலும் சரி, மன ஒருமைப்பாடு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கின்ற அளவுக்கு அந்த காரியத்தை நன்றாக செய்ய முடியும்.  இந்த ஒரு முயற்சியால் மட்டுமே  இயற்கையின் கதவுகளைத் திறக்க முடியும்.  அதன் ஒளியை வெளியே கொண்டுவர முடியும்.  இந்த ஒருமைப்பாட்டு சக்தியே அறிவிப் பொக்கிஷத்திற்கான  ஒரே திறவுகோல்.

4. பரபரப்பின்மை:  எந்த பூவிலும் அமராமல் படபடுத்தபடியே பறக்கின்ற வண்ணாத்திப் பூச்சி போல் மனம் சிலவேளைகளில் பரபரப்பதை அனைவரும் உணர முடியும்.  இந்த நேரங்களில் மனத்தால் எதிலும் ஆழ்ந்து ஈடுபட இயலாது;  ஜபம் தியானம் போன்றவற்றில் கட்டாயமாக மனத்தைச் செலுத்த முடியாது.

 புலனடக்கம், மன ஒருமைப்பாடு, மனத்தின் பரபரப்பின்மை அனைத்தையும் ஒழுக்க வாழ்வின் மூலம் நாம் அடைய முடியும்.  அதை தவிர வேறு வழியில்லை.  அனைத்திற்கும் மூலமாக அமைவது நல்லொழுக்கம். ஆன்மீக வாழ்வில் ஈடுபட விரும்பும் ஒருவருக்கு சிந்தையில், சொல்லில், செயலில் தூய்மை வேண்டும்.  ஒழுக்க வாழ்க்கை இல்லாமல் எவ்வளவு கற்றாலும் கேட்டாலும் முயற்சித்தாலும் ஆன்மாவை அடைய முடியாது என்று இங்கே ஆணித்தரமாக கூறப்படுகிறது.

ஆன்மாவின் மகிமை

25.அறிவின் ஆற்றல் தோள் வலிமை இரண்டும் யாருக்கு உணவாக உள்ளதோ, மரணம் யாருக்கு ஊறுகாயாக  உள்ளதோ அது எத்தகையது என்பதை யார் அறிவார்?

 நம்மை இக்யக்குபவற்றுள் அறிவின் ஆற்றல், தோள் வலிமை இரண்டும் முக்கியமானவை. அறிவின் ஆற்றல், தோள் வலிமை ஆன்மாவிற்கு உணவு போன்றவை. அனைவரும் பயப்படும் மரணம் அதற்கு ஊறுகாய் போன்றது. அதாவது ஆற்றல்கள், மரணம் எல்லாம் ஆன்மாவின் முன் மண்டி -யிடுகின்றன. இத்தகைய ஆற்றல்களால் ஆன்மாவை அறிமுடியாது. மன ஏக்கம் ஆகிய அன்பின் ஆற்றல் ஒன்றினாலேயே அதனை அடைய இயலும் என்பது இங்கே சுட்டி காட்டப்படுகிறது.



அத்தியாயம் 3

பிரித்து அறிந்து வாழ்

விழித்தெழு!


உடம்பின் மாற்றங்களாலோ, மனத்தின் மாற்றங்களாலோ பாதிக்கப்படாத ஆன்மா என்ற  ஒன்று இதயக்குகையில் உள்ளது.  அதை அறிய வேண்டும். பிரித்து அறிந்து வாழ்தல், பிரணவ தியானம் போன்றவை  அதற்குரிய சாதனைகள் என்பதை சென்ற அத்தியாயத்தில் கண்டோம்.

 ஆனால் இந்த சாதனைகள் சிறந்த பலன் அளிக்க வேண்டும் ஆனால் புத்தி விழிப்புற்றிருக்க வேண்டும் என்பதை இந்த அத்தியாயம் வலியுறுத்துகிறது.


வாழ்க்கையை ஒரு தேர் பயணத்துடன் ஒப்பிட்டு கூறுகின்ற எமதர்மன் தேரோட்டி விழித்திருக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை கூறுவதன் மூலம் புத்தியின்  விழிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை சுட்டிக் காட்டுகிறார்.

 மனிதன் என்றால் யார் என்பது பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தையும் இங்கு நாம் காண்கிறோம்.

 1. செயல்களின் பலனை அனுபவிக்கின்ற இருவர் இந்த உடம்பில் உள்ளனர். அவர்கள் நிழலும் வெயிலும் போல் ஒருவருக்கொருவர் மாறுபட்டவர்கள்;  இந்த உடம்புலுள்ள நுண்ணியதான இதயக்குகையில் புகுந்தவர்கள்.  மகான்களும் ஐந்து அக்கினியை உடையவர்களும் மும்முறை நசிகேத யாகம் செய்தவர்களும் இவ்வாறு கூறுகின்றனர்.

 இந்த உடம்பில் இருவர் இருப்பதாக சொல்லப்படுகிறது.  இருவரும் செயல்களின் பலனை அனுபவிப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் நிழலும் வெயிலும்போல் ஒருவருக்கு ஒருவர் மாறுபட்டவர் என்று கூறுவதால், ஒருவர் செயல்களின் பலனை அனுபவிக்கிறார், மற்றவர் எதிலும பங்கெடுக்காமல் சாட்சியாக இருக்கிறார் என்றும் கொள்ள வேண்டும்.

 அனுபவ வார்த்தைகள் இதனை விளக்குகிறது. நமது கையில் அடிபட்டபோது அவர் கூறினார் இதனுள்(உடம்பினுள்) இருவர் இருக்கின்றனர்.   ஒன்று பகவான், மற்றொருவர் பக்தனாக ஆகியுள்ளார். பக்தனுக்குதான் கை உடைந்தது.  இப்போது நோய் வந்திருப்பது அவனுக்குத்தான் புரிகிறதா?


முண்டக உபநிஷதம் ஒரு கதையின் மூலம் இந்தக் கருத்தை விளக்குகிறது ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் வாழ்கின்றன. ஒன்று அந்த மரத்திலுள்ள இனிப்பும், புளிப்பும், கசப்பும், பல்வேறு பழங்களைத் தின்கிறது. அதன்காரணமாக இன்ப துன்பங்களை மாறிமாறி அனுபவிக்கிறது. மற்றொரு பறவை எதையும் தின்னாமல்  அனைத்தையும் பார்த்த வண்ணம் இருக்கிறது.


செயல்களில் ஈடுபட்டு, சுகதுக்க அனுபவங்களைப் பெற்று  அவற்றின் பலனை அனுபவிப்பது ஜீவன் அல்லது உயிர்.  மனம் பிராணனின் சேர்க்கை இது.  எதிலும் பங்கெடுக்காமல் அனைத்தையும் பார்த்துக் கொண்டு சாட்சியாக நிற்கின்ற ஒன்றே ஆன்மா. ஆன்மாவுடன் நம்மை ஒன்றுபடுத்திக் காணக்காண நாம் இறை நிலையை அடைவோம்.   ஜீவனுடன் நம்மை ஒன்றுபடுத்திக் காணக்காண நாம் உலகில் குழப்பங்களில் அழுந்துவோம்.

 மேலே கண்ட உண்மையை மகான்களிடம்  இருந்து கேள்விப்பட்டதாக உபநிஷத முனிவர் கூறுகிறார்.  மூன்று வகையான மகான்களைப் பற்றி அவர் கூறுகிறார்.

1.மகான்கள்: இறைவனை உணர்ந்தவர்கள் என்று பொருள் படுகின்ற ப்ரஹ்மவித என்ற வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

 2. ஐந்து அக்கினி உடையவர்கள்:  கார்ஹபத்யம், ஆஹவனீயம், தக்ஷிணாக்னி, ஸப்யம்,  ஆவஸத்தியம் என்பவை ஐந்து அக்னிகள். இல்லறத்தான் இந்த ஐந்து அக்கினிகளையும் வீட்டில் நிறுவி வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கார்ஹபத்யம் - குல தெய்வத்தின் வடிவமாகக் கருதப்படுவது. இல்லற தர்மத்தைப் பரிபாலிப்பதுவரை இந்த அக்கினி எரிய வேண்டும்.

 ஆகவனீயம் - ஆஹுது அளிப்பதற்கான அக்கினி.
தக்ஷிணாக்கினி தக்ஷிணம் என்றால் மகிழ்ச்சி. மகிழ்ச்சியைத் தருகின்ற அக்கினி.  இது தெற்கு மூலையில் நிறுவப்படுகிறது.

ஸப்யம் - சாட்சி ரூபமாக விளங்குவது. செயல்கள் அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொண்டு இருக்கிறார். என்பதை உணர்த்துகின்ற அக்கினி.

ஆவஸத்யம் - ஆவஸத்யம் என்றால் வீடு. வீட்டிற்கு மங்கலத்தை தருகின்ற அக்கினி.


3.மூன்று முறை நசிகேத யாகம் செய்தவர்கள்:

 நசிகேத யாகத்தை பற்றி ஏற்கனவே கண்டோம். மீண்டும் கீழே வருமாறு 1-5.

1. எல்லா வேதங்களும் எந்த லட்சியத்தை  உபதேசிக்கின்றனவோ, எதற்காக எல்லா தவங்களும் செய்யப் படுகின்றனவோ, எதை விரும்பி பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கிறார்களோ, அந்த லட்சியத்தை அடைவதற்கான மந்திரத்தை சுருக்கமாக உனக்கு சொல்கிறேன். அது "ஓம்."

 2. ஓம் என்ற இந்த மந்திரமே இறைவன்.  இந்த மந்திரம் மேலானது. இந்த மந்திரத்தை அறிந்து யார் எதை  விரும்புகிறானோ அவனுக்கு அது கிடைக்கிறது.

3. இந்தப் பாதை சிறந்தது. இந்த பாதை மேலானது இந்த பாதையை அறிந்து அதன்வழி செல்பவன் பிரம்மலோகத்தில் சிறப்புப் பெறுகிறான்.

4.ஆன்மா பிறப்பதில்லை,  இறப்பதும் இல்லை.  இது எதிலிருந்தும் உண்டானது இல்லை,   இது பிறப்பற்றது , என்றென்றும் இருப்பது. நிலையானது, பழமையானது ; உடம்பு அழிக்கப்பட்டாலும் அழியாதது.

5. தான் அடிப்பதாக நினைப்பவன், தான் அடிபட்டதாக நினைப்பவன் இருவருமே உண்மை அறியாதவர்கள். ஆன்மா அடிப்பதும் இல்லை அடிபடுவதும் இல்லை.

ஒரு சுய தூண்டுதல்


பின்பற்றுபவர்களுக்கு எந்த வித்தையை பாலமாக அமைகிறதோ, அந்த நசிகேத யாகத்தைச் செய்ய வல்லவர்கள் ஆவோம். பயமற்ற கரையை அடைய விரும்புபவர்களுக்கு அழிவற்ற  எந்த இறைவன் அடைக்கலமானவரோ, அந்த இறைவனை அறிய வல்லவர்கள் ஆவோம்.

 ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு முன்னேறும்போது, சிலவேலைகளில் இலட்சியத்தை மறந்து விடுவதும் உண்டு ; அது போலவே சில வேளைகளில் லட்சியம் நாட்டம் நீர்த்துப் போவதும் உண்டு.  எனவே தினமும் அதனை நினைவூட்டிக் கொள்வது நல்லது.  இது சுயத்தூண்டுதல் (auto suggestion) எனப்படுகிறது.  இத்தகைய மந்திரங்கள் நமது வேதங்களிலும் உபநிஷதங்களிலும் ஏராளம் உள்ளன.  உபநிஷதங்களை படிக்கும் போது மட்டும் இல்லாமல் இவற்றை பொருளுணர்ந்து அவ்வப்போது  ஓதுவது நாம் நமது லட்சியத்தில் உறுதியாக இருக்க உதவும்.  அத்தகைய ஒரு மந்திரம் இது.

வாழ்க்கையும் தேர் பயணமும்

நமது வாழ்க்கையின் ஓர் அற்புதமான சித்திரம் இந்த ஏழு மந்திரங்களில் கூறப்படுகிறது.


3. ஆன்மா பயணம் செய்பவர், உடம்பு தேர், புத்தி தேரோட்டி, மனம் கடிவாளம்.

4.புலன்கள் குதிரைகள்;  உலகப் பொருள்கள் அந்த குதிரைகள் செல்வதற்கான பாதைகள்;  உடம்பு, புலன்கள், மனம் ஆகியவற்றுடன் கூடிய ஜீவன் வாழ்க்கை அனுபவிப்பவர்கள் என்று மகான்கள் சொல்கின்றனர்.

5. யார் விழுப்புறாதவர்களோ, பிளவுபட்ட மனத்தை உடையவர்களோ, அவர்களுடைய புலன்கள் தேரோட்டிக்கு அடங்காத குதிரைகள் போல் வசப்படாமல் போகின்றன.

6. யார் விழிப்புற்றவர்களோ பொருந்திய மனத்தை உடையவர்களோ, அவரகளுடைய புலன்கள் தேரோட்டிக்கு அடங்கிய குதிரைகள் போல் வசப்படுகின்றன.

7.யார் விளிப்புறாதவராகளாக, அடங்காத மனத்தை உடையவர்களாக, தூய்மை இல்லாதவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் இறை நிலையை அடைய மாட்டார்கள்;  உலகியலில் ஆழ்கிறார்கள்.

8. யார் விழிப்புற்றவர்களாக, அடங்கிய மனத்தை உடையவர்களாக, எப்போதும் தூயவர்களாக இருக்கிறார்களோ அவர்கள்,  எங்கே சென்றால் மீண்டும் பிறப்பு இல்லையோ அந்த இறைநிலையை அடைகிறார்கள்.

9. யார் விழிப்புற்ற தேரோட்டியுடனும், கடிவாளம் ஆகிய மனத்தை கைப்பற்றியவர்களாகவும்  இருக்கிறார்களோ, அவர்கள் பாதையின் முடிவை அடைகிறார்கள். அதுவே இறைவனின் மேலான இருப்பிடம்.

வாழ்க்கைப் பயணம் ஒரு கண்ணோட்டம்

3 முதல் 9 வரையுள்ள மந்திரங்களில் நமது வாழ்க்கை பயணம் ஒரு தேர் பயணத்திற்கு ஒப்பிடப்படுகிறது. முதலில் உவமையை காண்போம், பிறகு அது தரும் செய்தியை பார்ப்போம்.

தேர் பயணமும் வாழ்க்கையும்

தேரில்  ஒருவன் பயணம் செய்கிறான். தேரோட்டி ஒருவன் உள்ளான். அவன் கடிவாளத்தைப் பிடித்து இருக்கிறான்.  ஐந்து குதிரைகள் தேரை இழுகின்றன. தேர் செல்லும் பாதை ஒன்று உள்ளது. இது தேர்பயணம்.

நமது வாழ்க்கைக்கு உதாரணமாக இது கூறப்பட்டுள்ளது.

ஆன்மா    -   பயணம் செய்பவன்
புத்தி         -   தேரோட்டி
மனம்        -  கடிவாளம்
புலன்கள் -   குதிரைகள் 
உலகப் பொருட்கள் -  பாதை

தேர் பயணம் தரும் செய்தி

1.பயணம் உலகப் பொருட்களாகிய சாலை வழியாகத்தான் சென்றாக வேண்டும். அதாவது உலகப் பொருட்களிலிருந்து, உலகிலிருந்து விலக முடியாது. நாம் எதைச் செய்ய வேண்டுமானாலும் உலகப் பொருட்களுடன் வாழ்ந்தபடியேதான் சாதிக்கவேண்டும்.

2.பயணத்தின் வேகமும்  வெற்றியும் குதிரைகளைப் பொறுத்து அமைகிறது. குதிரையின் வேகம் கடிவாளத்தால் கட்டப்படுகிறது. கடிவாளத்தின் இயக்கம் தேரோட்டியை பொறுத்தது. எனவே பயணத்தின் வெற்றியோ தோல்வியோ தேரோட்டியால் நிர்ணயிக்கப்படுகிறது. குதிரைகளுடன் போராடுவதாலோ கடிவாளத்தில் மாற்றங்களை செய்வதாலோ எந்த பயனும் இல்லை.

தேரோட்டி திறமைசாலியாக இருந்தால் பயணம் எவ்விதத் தடங்கலுமின்றி நடைபெறும். தேரோட்டி தூங்கிக்கொண்டிருந்தால் பயணம் என்னவாகும்?இதுவே சாதாரணமாக நாம் வாழ்க்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. புலன்கள் தங்கள் போக்கில் போகின்றன. மனம் கட்டவிழ்ந்து பல திசைகளில் பரந்து கிடக்கிறது. ஏனெனில் புத்தி விழிப்புறவில்லை. இந்த நேரத்தில் தேரோட்டியாகிய புத்தியை  எழுப்புவதே நாம் செய்யவேண்டியது. அதை விட்டுவிட்டு மனத்துடனோ புலன்களுடனோ போராடுவது பெரிதாக பலனளிப்பதில்லை.

3.புத்தியை எழுப்புதல், அல்லது புத்தி விழிப்படைதல் என்றால் என்ன
சாதாரணமாக அறிவு மூன்று நிலைகளில் செயல்படுகிறது.
1 இயல்புணர்ச்சி (instinct) 2.அறிவு (intellect) 3.உள்ளுணர்வு (intuition)

1.இயல்புணர்ச்சி: ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இயல்பாக எழுகின்றன உணர்ச்சி. வாத்துக்குஞ்சு நீந்துவதும் குருவிகள் கூடுகட்டுவதும் யாரும் கற்றுக் கொடுத்ததல்ல. பிறவியிலிருந்தே இவை அவற்றிடம் இயல்பாக உள்ளன. அதுபோல் ஒவ்வொரு மனிதனிடமும் இயல்பாக காணப்படுகின்ற இயற்கையான மனபோக்குகளே இயல்புணர்ச்சி. இது ஆழ்மனத்திலிருந்து (subconscious mind) வருவதால் பொதுவாக தவறுவதில்லை. பொதுவாக இதற்கேற்ப ஒருவன் வாழ்க்கை சூழ்நிலைகளை எதிர் கொள்கிறான். எனினும் இது நமது ஆதிக்கத்தின் கீழ் இல்லாததால் நாம் விரும்பிய விதத்தில் இதனை பயன்படுத்த முடிவதில்லை.

 2.அறிவு:  புற உலகிலிருந்தும் வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும்  பெறுகின்ற அறிவு. புற உலகைச் சார்ந்திருப்பதால் இந்த அறிவு தவறாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே இதனை முழுமையாக நம்பி நாம் செயல்பட முடியாது.


3. உள்ளுணர்வு: கற்றறிவு, கேட்டறிவு போன்ற எந்த புற உபகரணங்களின் துணையும் இன்றி உணர்வின் ஆழங்களிலிருந்து எழுகின்ற அறிவு இது. இது ஒருபோதும் பொய்ப்பதில்லை. இந்த உள்ளுணர்வு விழிக்கப்பெற்றவர்களே படைப்பாளிகளாக இருந்தார்கள்.

 இது எல்லோரிலும் செயல்பட தொடங்கவில்லை. கல்வி, ஞானம், விஞ்ஞானம், கலை, மதம், என்று எந்தத் துறையை எடுத்தாலும் அவற்றின் உன்னத சிகரங்களுக்கான வாசலாக திகழ்கிறது உள்ளுணர்வு. இது விழிப்பதே புத்தி விழிப்பு. இதைப் புத்தியோகம் என்று கீதை கூறுகிறது.

 இதயத் தூய்மையாலும் பிரார்த்தனையாலும், காயத்ரி போன்ற மந்திர ஜபங்களாலும் புத்தி விழிப்படைகிறது.

 பயண லட்சியம் 10 - 11

 இந்த பயணத்தின் லட்சியம் இறைவன். அனைத்திலும் வலிமை வாய்ந்தவர் அவர், எனவே பயணத்தின் வெற்றிக்கு அவரை நாடுவதே வழி என்பதை படிப்படியாக இரண்டு மந்திரங்கள் விளக்குகின்றன.

10. புலன்களை விட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை. பொருட்களைவிட மனம் வலிமை வாய்ந்தது. மனத்தை விட புத்தி வலிமை வாய்ந்தது. மகிமை வாய்ந்ததான ஆன்மா புத்தியை விட வலிமை வாய்ந்தது.

11. மகிமை வாய்ந்ததான ஆன்மாவைவிட அவ்யக்தம் வலிமை வாய்ந்தது. அவ்யக்தத்தைவிட இறைவன் வலிமை வாய்ந்தவர். இறைவனை விட வலிமை வாய்ந்தது எதுவும் இல்லை.  அவரே அறுதிப்பொருள். அவரே கடைசி புகலிடம்.

எந்த ஒன்றையும் வசப்படுத்த வேண்டுமானால் அதைவிட உயர்ந்த ஒன்றை நாடவேண்டும். மேற்கிலிருந்து 'விலகவேண்டுமானால், விலகவேண்டும்'. விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்வதாலோ, அங்கே நின்று போராடுவதாலோ பயனில்லை. செய்ய வேண்டியதெல்லாம் கிழக்கு  நோக்கி நடப்பதே.  கிழக்குநோக்கி நடந்தால் தானாகவே மேற்கிலிருந்து விலகிவிடுவோம். அதுபோலவே மனதை வசப்படுத்த, புலன்களை ஒரு கட்டுக்குள் கொண்டுவர அவற்றுடன் போராடுவதோ, அவற்றை அந்த நிலையிலேயே அடக்க முயற்சிப்பதோ பயனற்றது.  இதையே கீதை 'அடக்குவதால் என்ன பயன்? என்று கேட்கிறது. எனவே கீழானதை வசப்படுத்த மேலானதை கைப்பற்றிக் கொள்ள வேண்டும்.

 புலன்களாகிய கண், காது, மூக்கு, வாய், உடம்பு இவற்றின் மூலமே நாம் செயல்படுகிறோம். இவை தன்னிச்சையாக செயல்படுவது இல்லை. பார்க்குமாறு தூண்டப்படும்போது கண்கள் பார்க்கின்றன, கேட்குமாறு தூண்டப்படும்போது காதுகள் கேட்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு புலனும் செயல்படுகிறது.

புலன்களை தூண்டுபவை உலகப் பொருட்கள் அவற்றின் மீதுள்ள கவர்ச்சியாலே நாம் உலகை அனுபவிக்கிறோம். அதனால்தான் புலன்களைவிட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை என்று கூறப்படுகிறது.

புலன்களின் கவனத்தைக் கவரக் கூடிய பொருட்கள் வெளியில் இருந்தாலும் மனம் புலன்களுடன் ஒத்துழைக்கவில்லை  என்றால் அந்த பொருட்கள் புலன்களை தூண்ட முடியாது. உதாரணமாக அழகிய தாமரை மலர்    ஒன்றை நாம் இருக்கின்ற வழியாக ஒருவன் கொண்டு செல்கிறான்.   அந்த வேளையில் நாம் எதையாவது தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தால் அந்த மலரை நாம் கண்டிருக்க மாட்டோம். பிறகு கேட்டால் 'நான் பார்க்கவில்லையே' என்போம். சாதரணவேளையில்  நம் கண்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய மலர் இப்போதும் இருந்தது.  ஆனால் மனம் ஈடுபடாததால் நம் கண்களை கவர  அந்த மலரால் முடியவில்லை. எனவே  புறப்பொருட்களைவிட மனம் வலிமை வாய்ந்தது.

நமது வாழ்க்கைப் பயணத்தின் இந்த மூன்று பகுதிகளையும் நாம் அறிவோம். புற உலகம்  நமக்கு தெரியும். புலன்களை நாம் அறிவோம், மனத்தை நாம் உணர்கிறோம். இதற்குமேல் உள்ளவை சாதரணமாக நம்மால் உணரப்படாதவை. இவற்றுள் முதலில் வருவது புத்தி. இது விழிப்புறாத நிலையில் உள்ளது.  புத்தியைவிட வலிமை வாய்ந்தது ஆன்மா.

 ஆன்மாவைவிட வலிமையானது அவ்யக்தம்.  அவ்யக்தம் என்றால் இறைவனின் ஆற்றல். எந்த ஆற்றலால்  இந்த பயணம் நடைபெறுகிறதோ, ஒரு தனிநபரின் பயணம் மட்டுமல்ல இந்த பிரபஞ்சமே வெளிபட்டு இயங்கிக் கொண்டிருக்கிறதோ அந்த ஆற்றல்.  ஆனால் அந்த ஆற்றலும் இறைவனாகிய தளம் இல்லாமல் இயங்க முடியாது. எனவே அவ்யக்தைவிட வலிமை வாய்ந்தவர் இறைவன். அவரே கடைசி புகலிடம்.
புத்தி  விளிப்புற வேண்டும்

 இந்த ஆன்மா எல்லா உயிர்களிலும் மறைவாக உள்ளது. வெளிப்பட்டு தெரிவதில்லை. ஆனால் ஒருமைப்படுத்தப்பட்ட, நுண்ணிய புத்தியால் மகான்கள் இந்த ஆன்மாவை காண்கின்றனர்.

 எப்போதும் சஞ்சலப்படுவது மனம், ஒன்றை நிச்சயமாக முடிவு செய்வது புத்தி. ஆனால் இந்த புத்தியால் பிற விஷயங்களை மட்டுமே முடிவு செய்ய இயலும். அக உண்மைகளைக் காணும் ஆற்றல்  இதற்கு இல்லை. ஏனெனில் இது விழிப்புறா நிலையில் உள்ளது  புத்தி. அது விழிப்புறும்போது மட்டுமே நுண்மை பெறுகிறது. அந்த நுண்ணிய புத்தியால் தான் ஆன்மாவை உணர முடியும்.

 புத்தி விளிப்புற என்ன செய்யவேண்டும்?


அக நாட்டம் உடையவன் பேச்சை மனதில் ஒடுக்கவேண்டும். மனத்தை விழிப்புற்ற புத்தியில் ஒடுக்கவேண்டும். புத்தியை மகிமை வாய்ந்த ஆன்மாவில் ஒடுக்க வேண்டும். ஆன்மாவை அமைதியின் இருப்பிடமான இறைவனில் ஒடுக்கவேண்டும்.

 சாதனை முறை இங்கே கூறப்படுகிறது. சாதாரண படியிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த சாதனை. பேச்சை மனதில் ஒடுக்க வேண்டும். இது முதல் படி. உயர் வாழ்க்கைக்கு முதற்படி பேச்சு கட்டுப்பாடு. தேவையற்ற பேச்சு உயர் வாழ்க்கைக்கு என்றல்ல சாதாரண வாழ்க்கைக்கும் பெரிய தடையாகும். நமது ஆற்றலில் முக்கிய பகுதி பேச்சில் செலவழிகிறது. அதனை செலவிடாமல் சேமித்தால் அக வாழ்க்கை போன்ற உயர் தேவைகளுக்காக அதனை பயன்படுத்த முடியும்.

 பேச்சு இரண்டு வகை - புற பேச்சு, அகப் பேச்சு,  அதாவது வாய் பேசுவது மற்றும் எண்ணங்களின் கிளர்ச்சி. வாய் பேசாமல் இருந்தாலும்,எண்ணங்கள் ஆர்பரிந்து எழும். இரண்டும் அடங்க வேண்டும். தேவையற்ற பேச்சை பயிற்சியின் மூலம் குறைக்கவோ தவிர்க்கவோ முடியும். ஆனால் எண்ணங்கள் எழுவதை எப்படி தவிர்ப்பது? ஒரு சாட்சியாக நின்று எண்ணங்கள் எழுந்து அடங்குவதை கவனிக்க வேண்டும். எழுகின்ற எண்ணங்களுடன்  சேர்ந்து மிதக்காமல் தனித்து நின்று அவற்றை காண்பதற்கு பழகவேண்டும்.

 பேச்சு என்பது ஓர் உதாரணமாகக் கூறப்பட்டது. இவ்வாறே அனைத்து புலன்களையும் வசப்படுத்த வேண்டும். அதாவது புலன்களின் போக்கில் போகாமல் சாட்சியாக நின்று பழகவேண்டும்.

இதுவே 'பேச்சை மனதில் ஒடுக்குவது' என்ற முதற்படி. இந்த பயிற்சி மனதிற்குப் பெரிய ஆற்றலையும் அமைதியையும் தருவதை நாம் உணர முடியும்.


தொடரும் படிகள் நாம் முன்னேற முன்னேற தாமாகவே நிகழ்வதை நாம் காணலாம். மனம் என்ற ஒன்றை நான் அறிந்திருப்பதால் முதற்படி எளிதாக விளங்குகிறது. ஆனால் விழிப்புற்ற புத்தியோ, ஆன்மாவோ, இறைவனோ நாம் அறியாதவை. எனவே சாதனை முறையின் இரண்டாவது படியான விழிப்புற்ற புத்தி அல்லது புத்தி விழிப்புறுவதை உணரும்போதுதான்  மனத்தை விழிப்புற்ற புத்தியில் ஒடுக்குவது என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளமுடியும். தொடரும் படிகள் அனைத்தும் இவ்வாறே.  எனவே பேச்சை கட்டுப்படுத்தி பயிற்சியை தொடங்க வேண்டியதே முக்கியம். பேச்சை குறைத்து அமைதியை கடைபிடிப்பதன் மூலம் அமைதியின் உறைவிடமான இறைவனை அடைகிறோம்.

குரு தேவை


14. எழுங்கள் விழியுங்கள், தகுந்த குருவை அடைந்து அனுபூதி பெறுங்கள். கூரான கத்தியின் முனை மீது நடப்பது போன்று, இறை நெறி கடினமானது என்று சான்றோர்கள் கூறுகின்றனர்.

தகுந்த குருவை ஒருவரை அடைய வேண்டும். ஆனால் அதற்கு முன் நாம் செய்ய வேண்டிய இரண்டு விஷயங்களை இந்த மந்திரம் தெரிவிக்கிறது. முதலில் எழுந்திருக்க வேண்டும், பிறகு விழிக்க வேண்டும். எழுந்து, விழித்து, தகுந்த குருவை அடையும்போது அவர் அனுபூதி நிலைக்கான வழியை காட்டுவார். இந்த மூன்று படிகளையும் மந்திரம் விளக்குகிறது.

உண்மையற்ற நிலையிலிருந்து என்னை
உண்மை நிலைக்கு அழைத்துச் செல்வாயாக!
அறியாமை இருளிலிருந்து என்னை
அறிவுப் பேரொளிக்கு அழைத்துச் செல்வாயாக!
மரணத்திலிருந்து என்னை
மரணமிலாப் பெரு நிலைக்கு அழைத்துச் செல்வாயாக!

என்று பிராத்திக்கிறது அந்த வேத மந்திரம். எழுந்திருத்தல் என்றால் உண்மையற்றதிலிருந்து உண்மையைப் பிரித்தறிதல். விழித்தல் என்றால் அறியாமையிலிருந்து விடுபடல். மூன்றாவதாக மரணமிலாப் பெருநிலையாகிய அனுபூதியை அடைதல்.

உண்மையற்ற உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; இதில் உண்மையான இன்பத்தையோ அமைதியையோ அடைய முடியாது என்பதை உணர்வது முதற்படி.  இது வெறும் புத்தக அறிவாக இல்லாமல் மனத்தின் அடியாழங்களில் பதிய வேண்டும். அப்போதுதான் நமது செயல்கள் அதற்கேற்ப அமையும்.

உண்மையற்றதிலிருந்து  உண்மையை பிரித்தறியும் போது நமக்குத் தெரிவது என்ன?  நாம் அறியாமையில் மூழ்கி இருக்கிறோம் என்ற உண்மை. எது அறியாமை? புற வளர்ச்சியை உண்மையான வளர்ச்சி என்று நம்பி அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்தாமல் இருப்பதுதான் அது. இந்த உண்மையைப் புரிந்துகொண்டு அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்துவதுதான் விழித்தல் என்கிற இரண்டாம் படி.

 அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்தும்போதுதான் குருவின் தேவை உண்மையாக நாம் உணர்வோம். உண்மையான தேவையுடன்  தகுந்த குருவை அடைந்து அவரால் வழிகாட்டப்படும் போது இறைய அனுபூதி வாய்க்கிறது.

இறையனுபூதியின் மகிமை


15. ஒலி, தொடு உணர்ச்சி, காட்சி, சுவை, மணம் என்று புலன்களால் உணரக்கூடிய அனைத்தையும் கடந்த அழிவற்ற, என்றென்றும் உள்ள, ஆரம்பம் இல்லாத, முடிவற்ற, புத்தியைவிட மேலான, நிலையான இறைவனை அனுபூதியில் உணர்பவன் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடுகிறான்.

17. மேலான பொருளாழும் மிக்க இந்த உபநிஷதத்தை சான்றோர்களின் சபையிலோ சிராத்த காலத்திலோ தூயவனான ஒருவன் படித்தால் அது எல்லையற்ற பலனை தருகிறது.

பொதுவாக உபநிஷதங்கள் போன்றவற்றை படிப்பது ஒரு புண்ணிய செயலாக கருதப்படுகிறது. ஆனால் அதன் முழுப் பலனையும் பெற வேண்டுமானால் புத்தி விழிக்கப்பெற்ற தூயவனாக இருத்தல் அவசியம். என்பதை இந்த 16 மற்றும் 17 மந்திரங்கள் கூறுகின்றன. அவர்களால்தான் உபநிஷதங்களின் உட்பொருளை உணர்ந்து கொள்ள முடியும். அதற்கேற்ப செயல்பட முடியும் என்பதே இதன் கருத்து. பாடுபடுபவர்களுக்கு பலன், வெறுமனே கிளிப்பிள்ளை போல் படிப்பவர்கள் உயர்ந்த பலனை எதிர்பார்க்க கூடாது.





அத்தியாயம் 4

அதுவே நீ


கட உபநிஷதத்தின் இரண்டாம் பகுதி ஆரம்பிக்கிறது. உயர் வாழ்விற்கான அடிப்படைகள் சிலவற்றை முதற்பகுதியில் கண்டோம். சிரத்தை ஆசையின்மை போன்ற அடிப்படைப் பண்புகளுடன் புத்தியின்  விழிப்பு மிகவும் அவசியம் என்பது அங்கே விளக்கப்பட்டது.
விழிப்புற்ற புத்தியில் எவ்வாறு ஆன்ம தரிசனம் உண்டாகிறது, இறையனுபூதி என்றால் என்ன என்பவற்றை விளக்குகிறது இந்த இரண்டாம் பகுதி. கட உபநிஷதம் கூறுகின்ற வித்தைகளுள் அங்குஷ்ட மாத்திர வித்தை இந்த பகுதியில் வருகிறது.

மரணத்துக்குப் பின்னால் என்ன நிகழ்கிறது என்பது நசிகேதனின் கேள்வி. மரணம் எனபது உடம்புக்கு மட்டுமே, மரணத்தால் பாதிக்கப்படாத ஒன்று இந்த உடம்பில் உள்ளது, அதுவே நீ என்று அவனுக்கு (நசிகேதனுக்கு)உபதேசிக்கிறார் எமதர்மன். அது எனப்படுகின்ற அந்த ஆன்மா மூன்று அத்தியாயங்களிலுமாக 10 கோணங்களில் விளங்கப்படுகிறது.

ஆழ்ந்த சிந்தனைக்கு, தியானத்திற்கு உரியது இந்தப் பகுதி எதை நினைக்கிறோமோ அது ஆகுறோம்.  நான் உடம்பல்ல, உயிரல்ல அனைத்தையும் கடந்த ஆன்மா என்பதை திரும்பத் திரும்ப பல்வேறு கோணங்களில் ஆழ்ந்து சிந்திக்க தூண்டுகிறது. அதுவே நீ என்ற இந்த உபதேசப் பகுதி. அதுவே நான் என்ற  இந்த உயர்நிலை, தியானத்தின் மூலம் நாம் ஆன்மா என்பதை உணர்கிறோம். ஆன்மா ஆகுறோம்.

ஆன்மாவை அறிவதற்கான அடிப்படை நிபந்தனையுடன் அத்தியாயம் தொடங்குகிறது.

புலன்களை உள்ளே திருப்புதல். 1 - 2

1. புலன்களைப் புறநோக்குடன் இறைவன் அமைத்துள்ளார் அதனால் அவை வெளியில் பார்க்கின்றன அகத்தில் உள்ள ஆன்மாவை பார்ப்பதில்லை. மரணமற்ற நிலையை விரும்புகின்ற யாரோ விவேகி அகநோக்கு உடையவனாய் ஆன்மாவைப் பார்க்கிறான்.

 தொலைநோக்கியால் தூரத்திலுள்ள பொருட்களை பார்க்க முடியும் அருகிலுள்ள ஒன்றை பார்க்க முடியாது. தூரத்தில்உள்ளவற்றை பார்பதற்காகவே தொலைநோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோலவே புலன்கள் வெளியுலகை அனுபபிப்பதற்காகவே  உள்ளவை.  அவற்றை உள்ளே திருப்புவது என்றால் அவற்றின் புறநாட்டத்தை தடுப்பது, அவ்வளவுதான். அவை புறமுகமாகச் செயல்படாமல் இருக்குமானால் அக வளர்ச்சியும் அகமாற்றங்களும் இயல்பாகவே நிகழும். இது சொல்வது எளிது. செய்வது மிக மிக கடினமானது. அதனால்தான் விவேகி ஒருவன் அக வளர்சியை நாடுவதாக மந்திரம் கூறுகிறது.

2. மனப்பக்குவம் இல்லாதவர்கள் புறத்திலுள்ள சுகபோகப் பொருட்களை நாடுகின்றனர். எங்கும் இருக்கின்ற மரண வலையில் அவர்கள் வீழ்கின்றனர். ஆனால் நிலையற்ற உலகில் அழிவற்ற நிலையான பொருள் ஒன்று இருப்பதை விவேகிகள் அறிகின்றனர். எனவே சுகபோகப் பொருட்களை விரும்புவதில்லை.

சுகபாேகப் பொருட்கள் புலன்களின் ஆற்றலை அழித்து விடுகின்றன.  என்று ஏற்கனவே கண்டோம்.  எனவே சுகபோகங்களை நாடுபவர்கள் விரைவில் மரணத்தின் பிடியில் சிக்குகிறார்கள் என்பதே இங்கே குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

மரணம் எங்கும் நிறைந்ததாகக் கூறப்படுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும். உண்மையில் இந்த உலகம் மரணத்தின் நிழல் படிந்தது. தோன்றிய அனைத்தும் மரணம் என்ற மாபெரும் அழிவை நோக்கியே சென்று கொண்டு இருக்கின்றன. புலன்களின் வசப்பட்டு அவற்றின் போக்கிலேயே சென்று கொண்டிருந்தால் நாமும் மரண வலையில் விழுவதை தவிர வேறு வழியில்லை. ஆனால் இந்த நிலையற்ற உலகின் உள்ளே அதாவது அதன் பின்னணியில், அழிவற்ற நிலையான இறைவன் உள்ளார். அவரை நாடும்போது சுகபோகப் பொருட்களிலிருந்து நாம் விலகுகிறோம் மரணத்திலிருந்து விலகுகிறோம். இவ்வாறு விவேகி சுகபோகப் பொருட்களை நாடாமல் இருக்கிறான். புலன்களின் போக்கைத் தடுத்து,புற வளர்ச்சியை விரும்பாமல் அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்தி மரணத்தை வெல்கிறான்.

அதுவே நீ  ( 3 - 9 )


 என்ற இந்த பகுதி ஆழ்ந்த சிந்தனைக்கு உரியதாகும். ஆழ்ந்த சிந்தனையின் மூலம் இந்த உணர்வு, அதாவது உடம்பையும் மனத்தையும் கடந்த ஆன்மா என்ற உணர்வு நம்மிடம் வலுப்படுகிறது.  புலன்களை வசப்படுத்துவதில் இது மிகவும் உதவுகிறது. புலன்கள் வசப்படும்போது அக வளர்ச்சி உண்டாகிறது. அக வளர்ச்சி ஆன்ம அனுபூதியில் நிறைவுறுகிறது.

சாட்சி பொருள் நீ  3 - 4


புலன்களின் புற நாட்டத்தை தடுக்க வேண்டும். எப்படி? அவற்றிற்கு உண்மையை உணர்த்த வேண்டும். உலகின் அனுபவங்களில் உள்ளீடு எதுவும் இல்லை என்பதை அவை புரியுமாறு செய்ய வேண்டும். அதற்கான பயிற்சியை இந்த மந்திரங்கள் தெரிவிக்கின்றன.

வாழ்வில் எவ்வளவோ நிகழ்கின்றன. உடம்பிற்கு எத்தனையோ அனுபவங்கள் வருகின்றன; எத்தனையோ விஷயங்கள் மனத்தைக் கடந்து செல்கின்றன. அவற்றுடன் இணைந்து நாமும் துயரப்படுகிறோம், சுகத்தை அனுபவிக்கிறோம், வெறுக்கிறோம், விரும்புகிறோம், அழுகிறோம், சிரிக்கிறோம். ஆனால் இவை எதிலும் பங்கெடுக்காமல், நம்முள் ஒன்று இருப்பதாக ஏற்கனவே கண்டோம்.( 1.3.11. செயல்களின் பலனை அனுபவிக்கின்ற இருவர் இந்த உடம்பில் உள்ளனர். அவர்கள் நிழலும் வெயிலும் போல் ஒருவருக்கொருவர் மாறுபட்டவர்கள்;  இந்த உடம்புலுள்ள நுண்ணியதான இதயக்குகையில் புகுந்தவர்கள்.  மகான்களும் ஐந்து அக்கினியை உடையவர்களும் மும்முறை நசிகேத யாகம் செய்தவர்களும் இவ்வாறு கூறுகின்றனர்.)அதுவே ஆன்மா அதனுடன் நம்மை ஒன்றுபடுத்திக் கொள்ள வேண்டும்.

3. காட்சி, சுவை, மணம், ஒலி, தொடு உணர்ச்சி, உடலின்பம் முதலியவற்றை எதனால் ஒருவன் உணர்கிறானோ, இந்த அனுபவங்களில் என்ன எஞ்சியிருக்கிறது என்பதையும் எதனால் தெரிந்து கொள்கிறானோ அதுவே நீ கேட்ட பொருள்(ஆன்மா).

அழகிய பூவை ரசிக்கிறோம். நம்முள்ளே உணர்வு பொருளாகிய ஆன்மா இருப்பதால்தான் அதனை நம்மால் ரசிக்க முடிகிறது என்பதை மறந்து விடுகிறோம். உயிரற்ற உடலின் முன்னால் அழகோ நறுமணமோ எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை. நம்முள் இருக்கின்ற இருவருள் ஒருவர் அனுபவங்களில் ஈடுபட்டு அனுபவிக்கிறார்; மற்றொருவர் சாட்சியாக நின்று அவற்றை கவனிக்கிறார்.  அனுபவங்களைப் பெறுபவருடன் நம்மை ஒன்றுபடுத்திக் கொள்ளும்போது மேலும் மேலும் செயல்களில் ஈடுபட்டு தளைகளை (பிணைப்பை)அதிகப்படுத்திக் கொள்கிறோம். மாறாக சாட்சியாக நிற்கின்ற ஆன்மாவுடன் நம்மை ஒன்றுபடுத்திக் கொண்டு, விலகி நின்று, அனுபவங்களை பார்க்கும்போது இந்த அனுபவங்களின் உள்ளீடற்ற  (தேவையற்ற) தன்மை நமக்கு மேலும் மேலும் தெரிய வரும்.

புலன் அனுபவங்கள் தேவையற்றவை என்ற கருத்து நம்முள் பதியும்போது புலன்கள் புற உலகு நாடுவதை இயல்பாகவே விட்டு விடுகின்றன என்பது தானாகவே நிகழ்கிறது. எனவே சாட்சியாக இருந்து பழகுவது என்பது புலன்களை வசப்படுத்துவதற்கான ஒரு சிறந்த பயிற்சியாகிறது.

நாம் ஆன்மா என்ற உணர்வு இந்தப் பயிற்சியின் மூலம் வலுப்பெறுகிறது. எனவே சுகதுக்க அனுபவங்கள் நம்மை அணுகும் போது அவற்றுடன் நம்மை இணைத்துக் கொள்ளாமல் விலகி நின்று பார்க்க நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

4. கனவு, விழிப்பு ஆகிய இரண்டு நிலைகளையும் எதனால் ஒருவன் உணர்கிறானோ அதுவே ஆன்மா. அது மகிமை வாய்ந்தது எங்கும் நிறைந்தது. அதனை அனுபூதியில்(அனுபவஞானத்தில்)உணர்கின்ற விவேகி கவலையிலிருந்து விடுபடுகிறான்.

நாம் சாட்சிப் பொருள் என்பதை இங்கே மற்றொரு கோணத்தில் இருந்து விளக்க முற்படுகிறார் எமதர்மன்.

கனவு, விழிப்பு, ஆழ்ந்த தூக்கம் இந்த மூன்று நிலைகளின் வழியாக நாம் தொடர்ந்து சஞ்சரித்துக் (வாழ்ந்து) கொண்டு இருக்கிறோம். ஒரு மாலையில் உள்ள நூல் பல முத்துக்களைக் கோர்த்து அவற்றுக்கிடையே ஒரு தொடர்பை உண்டாக்குவது போல் நமது இந்த மூன்று நிலைகளையும் (கனவு, விழிப்பு, ஆழ்ந்த தூக்கம்)தொடர்பு படுத்திக் கொண்டு நிற்கின்ற பொருளே ஆன்மா.

கனவு உலகம் வேறு, விழிப்பில் நாம் வாழ்கின்ற உலகம் வேறு,  ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிக்கின்ற உலகம் வேறு. ஆனால் இந்த மூன்றிலும் நான் என்ற உணர்வு இருக்கிறது. அதனால்தான் நான் கனவு கண்டேன், நான் விழித்திருக்கிறேன், நான் ஆழ்ந்து தூங்கினேன் என்று சொல்கிறோம். கனவில் நனவுலகம் மறைகிறது, விழிப்பு நிலையில் கனவு உலகம் மறைகிறது, ஆழ்ந்த தூக்கத்தில் இரண்டு (கனவு உலகம், நனவுலகம்) உலகங்களுமே மறைகின்றன. மறைகின்ற எதுவும் உண்மையாக இருக்க முடியாது. எனவே இந்த மூன்று நிலைகளும் உண்மை அல்ல. இந்த நிலைகள் எதனுடன் சம்பந்தப்படாமல், மூன்று நிலைகளும் தன்னைக் கடந்து செல்வதை ஒரு சாட்சியாக நின்று காண்கிறது ஆன்மா.

காலத்தின் தலைவன் நீ


நமது உணர்வை பிரபஞ்சம் முழுவதுமாக விரிப்பதற்கான ஒரு முயற்சி இந்த மந்திரத்தில் இருந்து காண்கிறோம்.  உடம்பினுள் இதயக் குகையில் உள்ள ஆன்மா தான் என்ற கருத்தும் 'பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து உள்ள பொருளே நான்' என்ற கருத்தும் ஒவ்வொரு மந்திரத்திலும் வருகிறது. உணர்வை விரிப்பதற்கான சாதனை இது.


5. கர்ம பலன்களை அனுபவிக்கின்ற உயிருக்கு ஆதாரமான இந்த ஆன்மாவை அருகில் இருப்பதாகவும், அதே வேளையில் இறந்த காலம் எதிர் காலத்திற்கு தலைவனாகவும் அறிபவன் யாரையும் வெறுப்பதில்லை. அதுவே நீ கேட்ட பொருள்(ஆன்மா).

நம்முள் உள்ள இருவரில் ஒருவர் அனுபவங்களைப் பெறுகிறார். மற்றொருவர் அந்த அனுபவங்களைப் பெறுவதற்கு ஆதாரமாக இருக்கிறார். அதுவே ஆன்மா. அதுவே நாம்.

நம்முள் உள்ள ஆன்மாவே நாம் என்று கூறிவிட்டு அடுத்த வரியிலேயே, காலத்தின் தலைவன் நாம் அன்று நமது உணர்வை விரிக்கிறது உபநிஷதம்.

காலத்தின் தலைவன் ஆவது என்றால் என்ன

பொதுவாக நாம் கடந்த காலத்தை அசை போட்டுக் கொண்டு இருப்போம். அல்லது எதிர்கால கற்பனைகளில் மிதந்து கொண்டு இருப்போம். அதாவது நமது வாழ்க்கை இறந்த மற்றும் எதிர்காலங்களில் உழன்று கொண்டிருக்கிறது. நாம் நிகழ்காலத்தில் வாழ்வதே இல்லை. காலத்தின் தலைவனாக இருப்பது என்றால் இறந்த மற்ற எதிர்காலங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது. நிகழ்காலத்தில் வாழ்வது. நிகழ்காலத்தில் வாழ்வது என்றால் நிரந்தர தியான நிலையில் திளைப்பது. அல்லது எல்லா செயல்களையும் அன்புடன் பரமாத்மாவுக்கு அர்பணிப்பது. எதை நாம் உண்கிறோமா,எதைநாம் கொடுக்கிறோமோ,எதை நாம் செய்கிறோமோ அதை பரமாத்மாவுக்கு அர்பணிப்பது. அன்பு செய்வது, பக்திசெய்வது என்றால் . எல்லா செயல்களையும் பரமாத்தாவின் கட்டளை என்று ஏற்று, விருப்பத்துடன் செய்து. நிகழ்காலத்தில் வாழ்தல்.

எனவே காலத்தை வெல்வது என்றால் கடந்த மற்றும் எதிர்காலங்களின் பிடியிலிருந்து விடுபட்டு நிகழ்காலத்தில்  வாழ்வது.  இதை எப்படி செய்வது? கடந்த மற்றும் எதிர்காலங்கள் நம்மீது எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன? எண்ணங்களின் மூலம். எனவே மனத்தில் எண்ணங்களே எழாமல் தடுப்பது  நிகழ் காலத்தில் வாழ்வதற்கான வழிகளில் ஒன்றாகும்.

ஓர் எண்ணம் எழுந்து மறைந்த பிறகு அடுத்த எண்ணம் எழுகிறது.  இரண்டு எண்ண அலைகளுக்கு இடையே உள்ள காலத்தை அதிகப்படுத்தும் போது இது நிகழ்கிறது.

முதலில் தோன்றியவர் நீர் 

யார் தண்ணீர் முதலான பஞ்ச பூதங்களுக்கும் முன்னால் தவத்தினால் தோன்றியவரோ, யார் உயிர்களின் இதயக் குகையில் உறைபவரோ அவரே அனைத்தையும் காண்கிறார். அதுவே நீ கேட்ட பொருள் .

பிரபஞ்சத்திற்கு ஆதாரமான பேருணர்வு  பொருள் தான் நம்முள் ஆன்மாவாக உறைகிறது என்ற உண்மை இங்கே மற்றொரு கோணத்தில் கூறப்படுகிறது. பூமி,  தண்ணீர்,  அக்கினி,  காற்று,  ஆகாசம் ஆகிய ஐந்து பஞ்சபூதங்கள் அதாவது ஐந்து அடிப்படை பொருட்கள். இந்த ஐந்தின் சேர்க்கையாலேயே உலகமும் உயிர்களும் தோன்றியுள்ளன.  அவற்றிற்கு முன்பே தோன்றியவர் இறைவன். அந்த இறைவன்தான் நம்மில் ஆன்மாவாக நமது இதயக்குகையில் விளங்குகிறார்.

இறைவன் தவத்தினால் தோன்றியவர் என்று கூறுவதன் மூலம், அவரது அம்சமான ஆன்மாவை அடைய வேண்டுமானால் தவம் வேண்டும் என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது. தவத்தினால் மரணத்தையே வெல்லலாம் என்கிறார் திருவள்ளுவர். தவம்பற்றி பகவத்கீதை விரிவாக ஆராய்கிறது. உணவு, உடை, சுகபோகப் பொருட்கள் என்று புறமுகமாக செலவிடப்படுகின்ற ஆற்றலை சுருக்கி அந்த ஆற்றலை உயர்ந்த லட்சியங்களுக்காக பயன்படுத்துவது தவம்.

7. பிராண வடிவானவளும், எல்லா தெய்வங்களின் வடிவானவளும், பஞ்சபூதங்களுடன் தோன்றியவளுமாகிய எந்த தேவி உயிர்களின் இதயக் குகையில் புகுந்து உறைகிறாளோ அந்த தேவியின் வடிவாக இருப்பதே நீ கேட்ட பொருள்.

மின்சாரத்தின் ஆற்றலால் விளக்குகள் எரிவதைக் காண்கிறோம்;  விசிறிகள் சுழல்வதை காண்கிறோம், இன்னும் எத்தனையோ இயக்கங்களை காண்கிறோம். ஆனால் மின்சாரத்தை காண்பதில்லை. அதுபோல் இந்த பிரபஞ்சத்தில் எத்தனையோ இயக்கங்களை காண்கிறோம். பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உயிரினங்கள் தோன்றுகின்றன, மறைகின்றன, தீ எரிகிறது, தண்ணீர் ஓடுகிறது, சூரியன் உதிக்கிறது -  இவ்வாறு எத்தனையோ செயல்களை காண்கிறோம். இதற்கு காரணமான சக்தியை நாம் காண்பதில்லை. அதுவே பிராண சக்தி. இதனை விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்:

பிரபஞ்சம் இரண்டு பொருட்களால் ஆக்கப்பட்டுள்ளது அவற்றுள் ஒன்று ஆகாயம். எங்கும் வியாபித்து அனைத்தையும்  ஊடுருவியுள்ளது. உருவமுள்ள அனைத்தும் சேர்க்கையால் விளைந்த, அனைத்தும் ஆகாயத்திலிருந்து வெழிபட்டுள்ளன. ஆகாயமே காற்றாகவும் திரவப் பொருட்களாகவும், திடப் பொருட்களாகவும் ஆகியுள்ளது. சூரியனாக, சந்திரனாக, பூமியாக ,நட்சத்திரங்களாக, வால் நட்சத்திரங்களாக ஆகியுள்ளதும் ஆகாயமே. மனித உடல், தாவரங்கள் அனைத்தும், நாம் காண்கின்ற, நாம் உணர்கின்ற அனைத்தும், இருப்பவை அனைத்துமாக, இருப்பதும் ஆகாயமே....

எந்த சக்தியால் இந்த ஆகாயம் பிரபஞ்சமாகிறது?  பிராண சக்தியால்தான்..... இந்த பிராணனிலிருந்தே நாம் ஆற்றல் என்று அழைக்கின்ற, நாம் சக்தி என்று அழைக்கின்ற அனைத்தும் வெளிப்படுகின்றன. புவியீர்ப்பாக, காந்த சக்தியாக வெளிப்படுவதும் பிராணனே.  உடல் இயக்கங்களாக, நாடி ஓட்டங்களாக, எண்ணச் சக்தியாக வெளிப்படுவதும் பிராணனே. எண்ணம் முதல் மிகச் சாதாரண சக்தி வரை எல்லாம் பிராணனின் வெழிபாடுகளே. இதையே 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்று பாடினார் பாரதியார். எங்கும் நிறைந்துள்ள இறைவன் நம்முள் ஆன்மாவாக விளங்குவது போல் பிரபஞ்சத்தை இயக்குகின்ற இந்த பிராண சக்தியே நம்முள் நமது உடம்பையும் மனத்தையும் இயக்குகின்ற பிராணனாக செயல்படுகிறது. பிரபஞ் நிலையில் அந்தப் பிராணன் எல்லா தெய்வங்களின் வடிவாக, அதாவது அனைத்து ஆற்றல்களின் உறைவிடமாக பஞ்ச பூதங்களுடன் தோன்றியதாக கூறப்படுகிறது.

ஆன்ம அக்கினி நீ 


8. கருவுற்ற பெண்கள் கருவை எச்சரிக்கையாகக் காப்பதுபோல் அரணிக்கட்டைகளில் அக்கினி பாதுகாக்கப்படுகிறது.  விழிப்புணர்ச்சி பெற்ற யோகிகள் ஆன்ம அக்கினியை அதுபோல் கவனமாக நாள்தோறும் வழிபடுகின்றனர். அந்த ஆன்மா அக்னியே நீ கேட்ட பொருள்.

யாக குண்டங்களில் வளர்க்கப்படுகின்ற அக்கினி ஏற்கனவே எரிகின்ற தீயால் ஏற்படுவதில்லை. அவ்வளவு புனிதமாக கருதப்படுகிறது. யாகத்துக்கு தீ மூட்ட அறணிக்கட்டைகள் பயன்படுத்துகின்றனர். மேல் ஒன்றும் கீழ் ஒன்றுமாக உள்ள இரண்டு கட்டைகள் அவை. அவற்றை உரசுவதால் ஏற்படுகின்ற தீப்பொறியால் யாக அக்கினியை வளர்க்கின்றனர்.  அரணிக் கட்டைகளில் மறைந்துள்ள அந்த அக்கினி கருவிற்க்கு ஒப்பிடப்படுகிறது. கருப்பைக்குள் கரு எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பது பிரமிப்பு ஊட்டுகின்ற ஒரு விஷயமாகும். இயற்கையின் மகிமைகளில் ஒன்றாக கருதப்பட வேண்டியது. எவ்வாறு கருவெளியில் தெரிவது இல்லையோ அது போல் அரணிக்கட்டைகளில் மறைந்துள்ள அக்கினியும் வெளியில் தெரிவதில்லை.

நமது ஆன்மா அந்த அக்கினிபோல் வெளியில் தெரியாமல் கருப்பைக்குள் கரு பாதுகாக்கப்படுவது போல் இதய குகைக்குள் விளங்குகிறது. அரணிக்கட்டைகளை உரசும்போது எவ்வாறு அக்கினி வெழிப்படுகிறதோ, அதுபோல தியானத்தின் மூலம் யோகிகள் அந்த ஆன்மாவை காண்கின்றனர்.

ஆணையிடுபவன் நீ


9.யாரிலிருந்து சூரியன் உதிக்கிறானோ, எங்கே மறைகிறானோ  அந்த இறைவனை எல்லா தெய்வங்களும் போற்றுகின்றனர். அவரை மீறி யாரும் நடப்பதில்லை. நீ கேட்ட பொருள் அந்த இறைவனே.

பிராண சக்தி நம்மை இயக்குகிறது, பிரபஞ்சத்தை இயக்குகிறது, தெய்வமாக போற்றப்படுகிறது என்று 7-ஆம் மந்திரத்தில் கண்டோம். பல்வேறு விதமாக செயல்படுகின்ற பிராண சக்தி பல்வேறு தெய்வங்களாக கொண்டாடப்படுகிறது. அந்த தெய்வங்கள் அனைத்தும் அதாவது பிராண சக்தி முழுவதும் முழுமுதற் பொருளாகிய இறைவனுக்கு அடங்கியதே. அவருடைய  ஆணையால் தான் இந்த பிரபஞ்சம் இயங்குகிறது. அந்த இறைவனே நம் உள் ஆன்மாவாக விளங்குகிறார். அந்த ஆன்மாவே நீ என்று நசிகேதனுக்கு எமதர்மன் அறிவுறுத்துகிறான்.

இங்கே இருப்பதே அங்கே உள்ளது 

10. இங்கே எது இருக்கிறதோ, அதுவே அங்கே இருக்கிறது. அங்கே எது இருக்கிறதோ அதுவே இங்கும் இருக்கிறது. இந்த உலகில் வேறுபாடு இருப்பது போல் யார் காண்கிறானோ அவன் மரணத்திலிருந்து மரணத்தை அடைகிறான்.

இறைவனை எங்கும் தேடி கிடைக்காமல், கடைசியில் தன்னுள்ளே கண்டதாகக் கூறுகிறார் அப்பர்பெருமான். எங்கும் நிறைந்துள்ள இறைவன் நம்முள்ளே ஆன்மாவாக விளங்குகிறார். எனவே இறைவனை தேட வேண்டுமானால் முதலில் நம் உள்  தேட வேண்டும்.  இறைவனை அடைவதற்கான பாதை நம் உள்தான் இருக்கிறது.

மந்திரத்தின் இரண்டாம் வரி நல்ல கருத்து ஒன்றாகும். இறைவன் என்னும் பேரொளியின் சுடர் ஒன்று நம்மில் இருக்கிறது, நம் ஒவ்வொருவர் உள்ளும் இருக்கிறது;  மனிதர்கள் என்றல்ல, மிருகங்கள், தாவரங்கள் என்று உயிரினங்கள் அனைத்திலும் இருக்கிறது. சமுதாயத்தை நாம் அணுகுவதற்கான ஒரு முக்கிய அடிப்படைக் கருத்தை இங்கே காண்கிறோம். நம் ஒவ்வொருவர் உள்ளும் இருப்பது ஒரே இறைவனின் அம்சம் என்றால் நம்மில் வேறுபாடு இல்லை என்றாகுகிறது. எனவே வெறுப்பு, கோபம் போன்ற எதிர்மறை பண்புகளுக்கு இடம் இல்லாமல் போய்விடுகிறது.

எல்லாரிலும் எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறார் என்ற கருத்து நல்லொழுக்கத்திற்கு ஒரு சிறந்த அடிப்படைஆகிறது.  நான் ஏன் நல்லவனாக இருக்கவேண்டும்?  நான் ஏன் அடுத்தவனை துன்புறுத்தக்கூடாது? போன்ற கேழ்விகளுக்கு  'இறைவன் நம்மை தண்டிப்பார்' என்பதல்ல பதில்;  'நான் இறைவனின் அம்சம், நல்லவராக இருப்பது என் இயல்பு'  என்பதே பதில். நான் எதற்காக என்னை சுற்றி இருப்பவர்களிடம் அன்பு பாராட்ட வேண்டும்,  நான் எதற்காக என்னிடம் அன்பு பாராட்ட வேண்டும்? ஏன் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்?  என்னை கட்டாயப்படுத்துவது எது? அதுதான் இரக்கம்; எங்கும் ஒரே பொருள் உள்ளது என்ற உணர்வசி என்று விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்.



இவ்வாறு எல்லோரிலும் இறை அம்சத்தை கண்டு அனைவரையும், அனைத்தையும் நேசிக்காதவர்கள் மீண்டும் மீண்டும் பிறவிக்கு உள்ளாகிறார்கள். எங்கும் ஒரே பேருணர்வு நிலவுவதை காண்கிறவர்கள் பிறவிச் சுழலிலிருந்து விடுபடுகிறார்கள்.

உண்மையை அறிய மனமே கருவி



11. இந்த உண்மை மனத்தினால் உணரப்படுகிறது. இந்த உலகில் வேறுபாடு ஏதும் இல்லை. இங்கே வேறுபாடு இருப்பது போல் யார் காண்கிறார்களோ அவர்கள் மரணத்திலிருந்து மரணத்திற்கு செல்கிறார்கள்.



எங்கும் இறைவன் இருக்கிறார், நம் ஒவ்வொருவர் உள்ளும் இறைவனின் அம்சமே நிலவுகிறது என்ற உண்மை அறிவதற்கு நம்மிடம் உள்ள ஒரே கருவி மனம். இந்த மனம் தூயதாகும்போது, ஒன்றாகும் போது அது இந்த உண்மையை அறிவதற்கான தகுதி பெறுகிறது.

தூய மனம் என்றால் என்ன?

எண்ணங்களே எழாத, ஒருங்கிணைந்த மனமே தூய மனம், அந்த மனமே உண்மையை காட்டவல்லது. சற்று விளக்கமாக காண்போம்.

தண்ணீர் தூய்மையாக இருக்கும் போது அதில் நாம் முகம் பார்க்க முடியும். அதில் எதை கலந்தாலும் அதன் தூய்மை கெடுகிறது. கலப்பது பாலாக இருந்தாலும், விஷமாக இருந்தாலும் விளைவு ஒன்றுதான் - நமது முகம் அதில் பிரதிபலிக்காது. அதுபோல் மனமும் ஆன்மாவை பிரதிபலிக்க வேண்டுமானால் அதில் எண்ணங்களே இருக்கக்கூடாது. முதலில் நல்ல எண்ணங்களை மனத்தில் நிரப்பி தீய எண்ணங்களை விரட்ட வேண்டும். பிறகு நல்ல எண்ணங்களை விட்டுவிடவேண்டும். காலில் முள் ஒன்று தைத்தால் மற்றொரு முள்ளை கொண்டு வர வேண்டும். காலில் இருந்து முள்ளை எடுத்த பிறகு இரண்டு முள்களையும் எறிந்துவிடுகிறோம். அதுபோல் அஞ்ஞானம் முள்ளை எடுப்பதற்கு ஞான முள்ளை தேட வேண்டியிருக்கிறது. அஞ்ஞானம் அழிந்ததும், ஞானம் அஞ்ஞானம் இரண்டையும் எறிந்து விட வேண்டும். என்று இதனை விளக்குகிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

அதுபோலவே மனத்தை உன்னிப்பாக கவனிக்கின்ற யாருக்கும் ஒரு உண்மை புரியவரும். மனம் பல்வேறு பகுதிகளாக பிரிந்து கிடப்பது. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொன்றை நிறைவேற்ற துடித்துக் கொண்டு இருப்பதை நாம் உணரமுடியும். ஒரு தேரில் பூட்டப்பட்ட குதிரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் செல்ல முற்படும் ஆனால் அதில் பயணம் செய்பவனின் கதி என்னவாகும்? மனம் பிளவுபட்டு கிடக்கின்ற ஒருவரின் கதையும் அது தான். அவரால் எதையும் ஒழுங்காக செய்ய முடியாது. புற விஷயங்களை செய்ய முடியாத அவரால் அகவாழ்க்கை என்பதை நினைத்துப் பார்க்க முடியாது. ஒருங்கிணைந்த மனம்தான் தூய மனம்.

தூய மனம் என்று கூறும் போது இந்த இரண்டு கருத்துக்களை மனதில் கொள்ளவேண்டும்.

அங்குஷ்ட மாத்திர வித்யை 12 - 13

இங்கே  அங்குஷ்ட மாத்திர வித்யை கூறப்படுகிறது. அங்குஷ்ட என்றால் பெருவிரல். இறைவன் பெருவிரல் அளவினராக இதயக் குகையில் உறைகிறார்.

12. எங்கும் நிறைந்தவரும், இறந்த மற்றும் எதிர் காலங்களுக்கு தலைவரும் ஆன இறைவன் உடம்பின் நடுவில் இதயக் குகையில் பெருவிரல் அளவில் இருக்கிறார். அவரை அறிந்தவன் யாரையும் வெறுப்பதில்லை. நீ கேட்ட பொருள் அவரே.

13. எங்கும் நிறைந்தவரும், பிறந்த மற்றும் எதிர் காலங்களுக்கு தலைவருமான இறைவன் புகையற்ற ஒளிபோல் பெருவிரல் அளவினராக உள்ளார். இப்போது இருப்பவர் அவரே. என்றென்றும் நிலைத்திருப்பவரும் அவரே. நீ கேட்ட பொருளும் அவரே.

இறைவன் நம் இதயத்தில் ஆன்மாவாக விளங்குகின்ற நிலையில் அவருக்கு இங்கே ஒரு பரிமாணம் கூறப்படுகிறது. ஆன்மா பெருவிரல் அளவில் இருப்பதாக இந்த மந்திரங்கள் கூறுகின்றன.

அளவில் பெரியதாக இருக்கின்ற மரத்தை புகைப்படம் எடுத்தால் அது அந்த புகைப்பட சுருளின் அளவினதாக இருக்கும். அதுபோல், இதயத்தில் இஷ்ட தெய்வத்தை தியானிக்கும்போது ஆரம்ப காலங்களில், சிறி உருவத்தையே தியானிக் முடியும். இவ்வாறு தியானிக்க வசதியாக இருப்பதை குறிப்பிடுவதற்காக பெருவிரல் அளவு என்று கூறப்பட்டுள்ளது.

அளவில் சிறியதாக இருப்பதால் அது ஆன்மா அல்ல, இறைவனின் அம்சம் அல்ல என்று நினைத்து விடக்கூடாது. என்பதற்காகவே பதின்மூன்றாம் மந்திரம் அதனை ஒளி என்று குறிப்பிடுகிறது. சிறிய பொருளின் ஒளி சிறியதாக இருக்கும். பெரிய பொருளின ஒளி பெரியதாக இருக்கும் என்று எந்த நியதியும் கிடையாது. சிறிய நவீனம் மின்விளக்குகள்  பெரிய அரங்கங்களை ஒளிர செய்வதை காண்கிறோம். அதுபோல் பெருவிரல் அளவுடைய இந்த ஆன்மாவும் உணர்வுப் பேரொளியால் உடம்பையும் மனத்தையும் ஒளிரச் செய்கிறது.

'புகையற்ற ஒளி' என்பது கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். ஒரு பொருள் எரிவதால் ஒளி உண்டாகிறது. அந்த பொருளின் தன்மையை பொறுத்து புகை அதிகமாக இருக்கலாம்,  குறைவாக இருக்கலாம்; சிலவேளைகளில் கண்ணுக்கு தெரியாத அளவிற்குக்கூட இருக்கலாம். ஆனால் புகை இருந்தே தீரும். புகையற்ற ஒளி என்றால் அது எதையும் சாராத ஒளி என்பது பொருள்.

 இறைவனின் அம்சமான இத்தகைய ஒளிப் பொருள் நம்மில் உள்ளது. அதை உணர்ந்தவன் மரணத்தை வெல்கிறான் என்று நசிகேதனுக்கு உணர்த்துகிறான் எமதர்மன்.

உண்மையை அறியாதவனும் அறிந்தவனும் 14 - 15

14. மலைகளின் உயர்ந்த பகுதியில் பெய்த மழை நீர் எவ்வாறு தாழ்ந்த பகுதிகளுக்கு ஓடிவிடுகிறதோ, அவ்வாறே உயிரினங்களை வெவ்வேறாக காண்பவன், மீண்டும் மீண்டும் அவையாக பிறக்கிறான்.

இறைவன் ஆன்மாவாக நம்மில் உறைகிறார் என்று கண்டோம். எல்லோரிலும் இறையம்சம் உள்ளது என்றால் வேறுபாட்டுக்கு இடமேது?. வேறுபாடு காண்பவன் உண்மையை அறியவில்லை. உண்மையை உணராததால் மீண்டும் மீண்டும் பிறப்புக்கு உள்ளாகிறான். இந்த கருத்தை 10 - ஆம் மந்திர விளக்கவுரையில் விரிவாக கண்டோம்.

15. நசிகேதா! தெளிந்த நீரில் விடப்பட்ட தெளிந்த நீர் எவ்வாறு அதுவாகவே ஆகிறதோ அவ்வாறு உண்மையை உணர்கின்ற மகான் ஆன்ம வடிவாக ஆகிறார்.

குளவியை எப்பொழுதும் நினைத்துக் கொண்டு இருக்கின்ற புழு கடைசியில் குளவியாகவே மாறிவிடுகிறது என்பதை நீ கேட்டது இல்லையா?  என்று விளக்குகிற ஸ்ரீராமகிருஷ்ணர். 'நான் ஆன்மா' என்பதை பல கோணங்களில் ஆழ்ந்து சிந்திக்கும்போது நான் 'நான் ஆன்மா' என்ற ஆன்ம அனுபூதி வாய்க்கிறது.





அத்தியாயம் 5

அதுவே நீ 

மரணத்துக்குப் பின்னால் 


மரணத்துக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை இந்த அத்தியாயம் கூறுகிறது. நம்மில் இருவர் இருப்பதாக ஏற்கனவே கண்டோம். ஒன்று ஜீவன்   இன்ப துன்பங்களை அனுபவிப்பது. மற்றொன்று எதிலும் கலந்து கொள்ளாமல் சாட்சியாக நிற்கின்ற ஆன்மா. உடல் வீழ்தபிறகு ஜீவன் தனது பயணத்தை தொடர்கிறது, வாழும்போது செய்த செயல்களும் பெற்ற அனுபவங்களும் ஏற்ப மனிதனாகவோ மற்ற உயிரினங்களாக பிறக்கிறது. ஜீவனின் இந்த மாற்றங்களினால் ஆன்மா பாதிக்கப் படுவதில்லை.

அதுவே நீ என்ற உயர் நிலை தியானப் பகுதி மூன்று கோணங்களில்  (1,4,8 ) கூறப்படுகிறது.

ஆன்ம அனுபூதி பற்றிய சிறந்த விளக்கம் ஒன்றையும் நாம் காண்கிறோம்.

உடம்பெனும் நகரம்

1. பதினோரு வாசல்களை கொண்டது  உடம்பு, பிறப்பு அற்ற மாறுபாடு அற்ற உணர்வை உடைய ஆன்மாவின் கருவியாகும் . இவ்வாறு தியானித்து ஒருவர் கவலைகளிலிருந்து விடுபடுகிறார். நீ கேட்டது இந்த ஆன்மாவை பற்றியே.

உடம்பை ஒரு தடையாக நினைத்திருந்தேன். ஆனால் உடம்பில் இறைவன் கோயில் கொண்டிருக்கிறார் என்பதை கண்டபிறகு அதனை ஒரு கோயிலாக எண்ணி கவனமாக பாதுகாக்கிறேன். என்கிறார் திருமூலர். உபநிஷதம் உடம்பை ஆன்மாவின் கருவியாக கூறுகிறது. உடம்பை எப்படிப் பேண வேண்டும் என்பதற்கு இந்த மந்திரங்கள் வழிகாட்டுகின்றன. உடம்பை ஒருபோதும் வெறுக்கவோ ஒரு தடையாகவோ கருதவே கூடாது. ஆன்மாவை உணர்வதற்காக இறைவன் நமக்குக் கொடுத்துள்ள கருவியே உடம்பு என்ற எண்ணம் வேண்டும்.

இந்த உடம்பு பதினோரு வாசல்களை உடைய ஒரு நகரம் (புரம்) என்று கூறப்படுகிறது. இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு நாசித் துவாரங்கள், வாய், தொப்புள், குறி, குதம், மற்றும் உச்சந்தலையில் உள்ள பிரம்மரந்திரம் ஆகியவை பதினொரு வாசல்கள். உடம்பை ஒரு நகரமாக கூறுவது எண்ணிப் பார்க்கத்தக்கது. ஒரு நகரத்தில் நடைபெறுகின்ற அத்தனை செயல்பாடுகளும் உடம்பில் நிகழ்வதை இன்றைய உடலியல் துணையால் நாம் நன்றாக அறிய முடியும். சமுதாய வாழ்க்கை, கல்வி, கோயில், போக்குவரத்து, நதிகள், உணவு, உற்பத்தி சுத்திகரிப்பு, கழிவை வெளியேற்றுதல், காவல் என்று ஒன்றுவிடாமல் எல்லா துறைகளும் உடம்பினுள் உள்ளன. நமது முனிவர்கள் விஞ்ஞானத்தின் துணையின்றி அன்றே இதனை உணர்ந்து கூறியிருப்பது வியக்கத்தக்கது. சாந்தோக்கிய உபநிஷதம் உடம்பை ஒரு நகரம் என்று கூறாமல், இறைவன் வாழும் நகரம் (ப்ரஹ்ம புரம்) என்று கூறுகிறது.

'அதுவே நீ' என்ற தியான பகுதி இது.  ஆன்மா வாழும் வீடு இந்த உடம்பு. அதாவது உள்ளே உறைகின்ற ஆன்மா என்பது ஒன்று, உடம்பு என்பது வேறு ஒன்று. இதனை தியானிப்பவர்கள், இந்த உண்மையை ஆழ்ந்து சிந்தித்து தனக்குரிய தாக்கி கொள்கிறார்கள், அந்த உணர்விலேயே வாழ முடிந்தவவர்கள், சுதந்திரமாகிறாகள். அதாவது உடம்பு மனம் போன்ற கருவிகள் தன்னை கட்டுப்படுத்துவதில் இருந்து  விடுபடுகிறார்கள்.  உடம்பும் மனமும் தன்னிலிருந்து வேறானவை, அவை தன்னை கட்டுப்படுத்துவது இல்லை என்று உணர்கின்ற ஒருவர் மரணத்தில் இருந்து விடுபடுகிறார். ஏனெனில் மரணம் உடம்பிற்கு மட்டுமே சுருக்கமாக சொல்வதானால் அவர்கள் மரணத்தை வெல்கிறார்கள். உடம்பு விழுந்த பிறகும் மீண்டும் பிறவாத நிலையை அடைகிறார்கள்.

2.அந்த ஆன்மா எங்கும் செல்வது, தூய ஆகாயத்தில் சூரியனாக இருப்பது, அனைத்திற்கும் ஆதாரமானது, வெளியில்(space) காற்றாக  இருப்பது, அக்னியாக பூமியில் இருப்பது, விருந்தினராக வீட்டில் இருப்பது, மனிதனில் உறைவது, தேவனில் உறைவது, உண்மையில்உறைவது, ஆகாயத்தில் உறைவது, நீரில் தோன்றுவது, யாகத்தில் தோன்றுவது, மலையில் தோன்றுவது, பிரபஞ்ச நியதியாக விளங்குவது, பெரியது.

ஆன்மாவின் எங்கும் நிறைந்த தன்மைக்கான ஒரு பரந்த விளக்கத்தை இங்கு காண்கிறோம்.

எங்கும் நிறைந்ததாக இருப்பதால், அது செல்ல முடியாத இடம் என்ற ஒன்று இல்லை. எனவே எங்கும் செல்வது.

சங்கு, சிப்பி, முத்து, மீன் போன்ற நீர் வாழ் உயிரினங்கள் நீரில் தோன்றுபவை. தானியங்கள் முதலானவை பூமியில் தோன்றுபவை.

பிரபஞ்சத்தில் பல்வேறு சக்திகள் செயல்படுவதையும் அந்த சக்திகளே பிரபஞ்சத்தை இயக்குவதையும் கண்ட வேதகால மனிதர்கள் வாழ்வின் வளத்திற்கும் நலத்துக்கும் அந்த தேவர்களை நாடினார்கள்.  யாகங்களின் மூலம் அவர்களுடன் தொடர்பு கொண்டார்கள். எனவே யாகம் என்பது பொதுவாக தேவ சக்திகளின் சின்னமாக உள்ளது. அந்த தேவ சக்திகளாகவும் ஆன்மா இருக்கிறது. அதுவே யாகத்தில் தோன்றுவது என்று கூறப்பட்டது.

மலையிலிருந்து தோன்றுகின்ற நதிகள் முதலானவையாகவும் ஆன்மா உள்ளது.

சற்று அமைதியாக நின்று இந்த உலகை, அதன் செயல்பாடுகளை ஒரு முறை பார்க்கத் தெரிந்த யாருக்கும் இந்த உலகின் இயக்கம் ஒரு மாறாத நீதிக்கு கட்டுப்பட்டு நடைபெறுவது தெரிய வரும். சூரிய உதயம், காற்றின் இயக்கம், பூக்களின் மலர்ச்சி நட்சத்திரங்களின் பயணம் உயிரினங்களின் செயல்பாடுகள் என்று அனைத்திலும் ஒரு நியதி, ஓர் ஒழுங்கு நிலவுகிறது. இந்த ஒழுங்காகவும் நியதியாகவும் ஆன்மாவே உள்ளது.

3. பிராணனை மேலே இயக்குவதும், அபானனைக் கீழே தள்ளுவதுமான ஜீவன் உடம்பின் நடுவில் உள்ளது. எல்லா புலன்களும் அதனை சார்ந்திருக்கின்றன.

ரிஷிகளின் மாபெரும் கண்டுபிடிப்புகளுள். ஒன்று பிராணன் எங்கும் நிறைந்த, பிரபஞ்சத்தின் எல்லா இயக்கங்களுக்கும் காரணமான இந்த பிராணன் உடம்பில் பத்துவித செயல்களில் ஈடுபட்டு உடம்பை இயக்குகிறது.


பிராணன் - மேல்நோக்கிய இயக்கம்
அபானன் - கீழ் நோக்கி இயக்கம்
வியானன் - எல்லா பக்க இயக்கம்
உதானன் - மரணவேளையில் ஜீவன் வெழியேற உதவுதல்
சமானன் - உணவு ஜீரணம், உணவை ரத்தம் போன்றவையாக  மாற்றுதல்.
நாகன் - வாந்தி, ஏப்பம்
கூர்மன் - கண் இமைகளின் இயக்கம்
க்ருகலன் - பசி
தேவதத்தன் - கொட்டாவி
தனஞ்ஜயன் - உடம்பிற்கு ஆரோக்கியம் அளித்தல்

அனைத்தும் மொத்தமாக பிராணன் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த பிராணனை இயக்குவது ஜீவன் என்கிற இந்த மந்திரம். ஜீவன் இந்த பிராணனின் மூலமாக உடம்பையும் மனதையும் கட்டுப்படுத்தி அவற்றின் வாயிலாக சுகதுக்க அனுபவங்களை பெறுகிறது. இவ்வாறு உடம்பிற்கும் மனதிற்கும் தலைவனாக உள்ளது ஜீவன் அல்லது உயிர்.

மரணத்துக்குப் பின்னால் 4 - 11

மனிதன் ஐந்தின் தொகுதியால் சூழப்பட்டவன் -  உடம்பு, மனம்,  பிராணன், விஞ்ஞானம் (புத்தி), ஆனந்தம் இந்த ஐந்தும் ஆன்மாவின் உறைகளாக சட்டைகளாகக் கருதப்படுகின்றன. இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான வாழ்க்கை இருக்கிறது. தைத்திரீய உபநிஷதம் இவை ஒவ்வான்றையும் ஆன்மா என்று அழைப்பது கருத்தி்ல் கொள்ளத்தக்கது. கடைசி நான்கையும் சேர்த்தே பொதுவாக நாம் உயிர் என்று அழைக்கிறோம். இந்த உடம்பினுள் இரண்டு ஆன்மா இருப்பதாகவும் ஒன்று சாட்சியாக இருப்பதாகவும் மற்றொன்றுஅனுபவங்களைப் பெறுவதாகவும்.  இதில் அனுபவங்களை பெறுகின்ற ஆன்மாவாக கூறப்பட்டது உயிர், சாட்சியாக இருப்பது ஆன்மா.

உடம்பு என்ற கருவியை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போகும்போது, உயிர் அதனை விட்டு விடுகிறது.  இதனையே நாம் மரணம் என்கிறோம்.

எனவே மரணம் என்பது உடம்புக்கு மட்டுமே. மனம் பிராணன் போன்ற தொகுதிகளின் சேர்க்கையாகி உயிரின் பயணம் தொடர்கிறது. ஆன்மா இவை அனைத்திற்கும் சாட்சியாக நிற்கிறது.

மரணத்துக்குப் பின்னால் என்ன எஞ்சும்?

4. உடம்பில் இருக்கின்ற இந்த உயிர் உடம்பில் இருந்து விடுபட்டு வெளியேறிவிட்டால் இங்கே என்ன எஞ்சும்?  என்றும் அதுவே நீகேட்ட பொருள்.

உடம்பு வீழ்ந்துவிட்டது,  உயிர் வெழியேறிவிட்டது. எஞ்சுவது ஏதாவது உண்டா?  அதாவது,  இந்த இரண்டின் மாற்றங்களால் பாதிக்கப்படாத ஏதாவது நம்மில் உள்ளதா என்பதே  கேழ்வி.  உள்ளது, அதுவே ஆன்மா.

'அதுவே நீ'  தியானத்தின் ஒரு முக்கியமான பகுதி இது. மரணத்தையே தியானிக்க தூண்டுகிறது இந்தபகுதி.

சுவாமி விவேகானந்தர்:  'வாழ்வில் மிக மேலான உண்மை எதுவென்று சொல்லுங்கள் பார்க்கலாம்'.

(யாரும் பதில் சொல்லாததை கண்ட விவேகானந்தர் தொடர்ந்தார்.)

இதோ பாருங்கள், நாம் அனைவரும் இறந்து விடுவோம். இந்த உண்மை எப்போதும் உங்கள் மனதில் கொள்ளுங்கள். அப்போது மட்டுமே உங்கள் மனத்திலிருந்து பயம் விலகும். செயல்திறன் உருவாகும் , உடலும் உள்ளமும் புது எழுச்சி பெறும். உங்களுடன் தொடர்பு கொள்பவர்களும் தாங்கள் நன்மை அடைந்ததாக கருதுவார்கள்.

ஒருவர் : (ஆனால் சுவாமிஜி மரணத்தைப்பற்றி நினைப்பதால் மனமுடைந்து சோகம் உண்டாகாதா?)

சுவாமி:  உண்டாகும். முதலில் மனமுடைந்து சோகமும் துயர எண்ணங்களும் எழத்தான் செய்யும். சில நாட்கள் அப்படியே கழியட்டும். பின்னர் இதயத்தில் புதிய வலிமை புகுவதை காண்பீர்கள்.  எப்போதும் மரணத்தை பற்றி நினைப்பது, உங்களுக்கு ஒரு புதிய வாழ்வைத் தந்து, உங்களை மேன்மேலும் சிந்திக்கத் தூண்டுகிறது; "வெறுமை, வெறுமை, அனைத்தும் வெறுமை " என்பதின் உண்மையை உங்கள் கண்முன் ஒவ்வொரு கணமும் கொண்டுவருகிறது.  நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் கடந்து செல்லட்டும். உங்கள் ஆன்மா சிங்கத்தின் வலிமையுடன் விழித்தெழுவதை காண்பீர்கள். உள்ளே இருந்த சிறிய ஆற்றல், பேராற்றலாக மாறுவதை உணர்வீர்கள். எப்போதும் மரணத்தை நினையுங்கள்.

மாற்றங்களால் ஆன்மா ஏன் பாதிக்கப்படுவதில்லை?

5.எந்த மனிதனும் பிராணனாலோ, அபானனாலோ வாழ்வதில்லை. எதனை ஆதாரமாகக் கொண்டு, இந்த பிராணனும் அபானனும் இயங்குகின்றனவோ, அதனை ஆதாரமாகக் கொண்டே  அனைத்தும் வாழ்கின்றன.

 பிராணனும் அபானனும் முறையே உள்மூச்சு மற்றும் வெளி மூச்சிற்றுக்கு காரணமானவை. எனவே மூச்சு விடுவது என்ற செயல் இங்கே உணர்த்தப்படுகின்றது. மூச்சு விடுவதால் மனிதன் உயிர் வாழ்ந்து விடுவது இல்லை,  ஏனெனில் வேறு ஏதோ இருப்பதால்தான் மூச்சு விடுவதே நடைபெறுகிறது, என்கிறது இந்த மந்திரம்.

விளக்கு, விசிறி போன்ற மின்சாதனங்கள் மின்சாரத்தால் இயங்குகின்றன.  விளக்கை நிறுத்துவதோ, விளக்கிருந்த, இடத்தில் விசிறியைப் பொருத்துவதோ மின்சாரத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மின்சாதனங்கள் மின்சாரத்தை சாந்த் உள்ளனவே தவிர மின்சாரம் சாதனங்களை சார்ந்து அல்ல. அது போல் பிராணனும் அபானனும் மட்டுமல்ல அனைத்தும் ஆன்மாவில் சார்ந்துள்ளன. ஆன்மா எதையும் சாந்திருக்கவில்லை. எனவே உடம்பு, உயிர் என்று, எதில் நிகழும் மாற்றமும் அதனை பாதிப்பதில்லை.

மரணத்துக்குப் பின்னால் உயிரின் நிலை 6 - 7

6. நசிகேதா! நல்லது. மரணத்திற்குப் பின்னால் உயிர் என்ன ஆகும் என்பது பற்றியும், ரகசியமானதும் அழிவற்றதுமான ஆன்மா பற்றியும் உனக்கு இப்போது சொல்கிறேன்.

7.மரணத்துக்குப் பிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர், சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப்பயனும், பெற்ற அனுபவமும், எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்.

 எனவே எதைசெய்கிறோம் என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். எத்தகைய எண்ணங்களை நம் மனதில் நினைக்கிறோம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் எண்ணங்களே செயலாக உருவெடுக்கின்றன. நல்ல ஆரோக்கியமான எண்ணங்களை நினைப்பதால் செயலும் அனுபவம் அவற்றிற்கேற்ப அடுத்த பிறவி உயர்வானதாக அமையும்.

உயிர்கள் பல்வேறு பிறவிகளை எடுத்து கடைசியில் நிறைநிலையை அடைகின்றன என்பது மறுபிறவிக் கோட்பாடு. வாழும் காலத்தில் எத்தகைய செயல்களை செய்கிறோமோ, என்னென்ன அனுபவங்களை பெறுகிறோமோ அதற்கேற்ப அடுத்த பிறவி வாய்கிறது. சாதரணமாக வாழ்கின்ற ஒருவன் மீண்டும் மனித பிறவியைப் பெறுகிறான். ஏராளமாக நற்செயல்கள் செய்பவன் அதிக புண்ணியம் பெற்று தேவலோகத்தில் வாழ்கிறான். தீமைகள் செய்பவன் மிருகங்களாக தாவரஙகளாக பிறக்கிறான்.


8.புலன்கள் தூங்கும்போது தனக்கு விருப்பமானவற்றை உருவாக்கியபடி எது விழித்து இருக்கிறதோ அதுவே தூய, மரணமற்ற ஆன்மா என்று சொல்லப்படுகிறது. எல்லா உலகங்களும் அதனையே சார்ந்திருக்கின்றன. அதனை கடந்தவனாக யாருமில்லை.

வாழ்க்கையில் எத்தனையோ புதிர்களுள் தூக்கமும் கனவும் முக்கியமான இடம் வகிப்பவை அன்று முதல் இன்று வரை இவை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இந்த மந்திரம் கனவு பற்றி கூறுகிறது.

உடம்பும் மனமும் கருவிகள். அவற்றிற்கு ஓய்வு தேவை. உடம்பு ஓய்வெடுப்பது தூக்கம் எனப்படுகிறது. அப்போதும் மனம் தொடர்ந்து செயல்படுகிறது. அதுவே கனவு.

அங்கே தேர் இல்லை, இழுக்க மிருகங்கள் இல்லை, சாலைகள் இல்லை.  அங்கே இன்பம் இல்லை, களிப்பு இல்லை, ஆனந்தம் இல்லை. அங்கே குளம் இல்லை, ஏரி இல்லை, நதிகளும் இல்லை. அவர் அனைத்தையும் உருவாக்குகிறார். ஏனெனில் அவரே அனைத்தையும் உருவாக்குபவர். என்று கனவு உலகத்தைப் பற்றி பிருஹதாரண்யக உபநிஷதம் கூறுகிறது.  உடம்பு ஓய்வு எடுக்கும் போது மனம் செயல்படுகின்ற நிலை இது. விழிப்பு நிலையில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக இது அமையலாம், நிறைவேறாத ஆசைகளின் வெளிப்பாடாக இருக்கலாம், சிலவேளைகளில் எதிர்காலத்தைப் பற்றி அறிவிப்பாகவும் இருக்கலாம். மனம் இங்கே தனக்கென்று ஓர் உலகை உருவாக்கி இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது.

இன்னும் ஆழ்ந்த நிலையில் மனமும் ஓய்வு எடுக்கிறது. அது ஆழ்ந்த தூக்கம். ஆழ்ந்த தூக்கத்தின் போதும் நம்மில் யாரோ ஒருவர் விழித்திருந்து நாம் ஆழ்ந்து தூங்குவதை கவனிக்கிறார். அதனால்தான் விழித்ததும் நான் நன்றாக தூங்கினேன் என்று சொல்ல முடிகிறது. ஆழ்ந்த தூக்கத்திலும் சரி, கனவிலும் சரி, விழிப்பு நிலையிலும் சரி, அந்த ஒருவர் விழித்து இருப்பதால்தான் அனைத்தையும் நாம் உணர முடிகிறது. அந்த ஒருவரே ஆன்மா. அதுவே நீ என்று எமதர்மன் கூறுகிறான்.

ஆன்மா இருப்பதால்தான் நாம் மூன்று நிலைகளிலும் மாறிமாறி சஞ்சரிக்க முடிகிறது. இந்த நிலைகளின் மூலமாகத்தான் நாம் பல்வேறு உலகங்களையும் பல்வேறு விதமாக அனுபவிக்க முடிகிறது. அதனால்தான் எல்லா உலகங்களும் ஆன்மாவை சார்ந்து இருப்பதாக கூறப்பட்டது.

இவ்வாறு மூன்று நிலைகளிலும் சாட்சியாக நிற்கின்ற பொருளே நாம் என்பதை உணரும்போது உடம்பின் மாற்றங்களோ, மனத்தின் செயல்பாடுகளோ நம்மீது ஆதிக்கம் செலுத்துவது இல்லை. உடம்பின் மாற்றம் ஆகிய மரணமும் நம்மை பாதிக்காத நிலையை நாம் அடைந்து விடுகிறோம். அதுவே நீ தியான பகுதி இது.

ஆன்மாவின் பாதிக்கப்படாத தன்மை:
மூன்று உவமைகள்: 9 - 11
மரணத்துக்குப் பின்னால் உடம்பு வீழ்கிறது, உயிர் பயணத்தைத் தொடர்கிறது, ஆன்மா எந்த பாதிப்பும் இன்றி அனைத்து மாற்றங்களுக்கும் சாட்சியாக எப்போதும் போல் இருக்கிறது.  தொடரும் மூன்று மந்திரங்களில் இது மூன்று உவமைகள் மூலம் விளக்கப்படுகிறது.

9. ஒன்றான அக்கினி உலகில் வந்து எவ்வாறு பல்வேறு பொருட்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறதோ. அவ்வாறே எல்லா உயிர்களிலும் இருக்கின்ற ஆன்மா ஒன்றாக இருந்தாலும் பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது. அதே வேளையில் அந்த வடிவங்களுக்கு வெளியிலும் திகழ்கிறது.

பஞ்ச பூதங்களாகிய பூமி, தண்ணீர், அக்கினி, காற்று, ஆகாயம் என்று ஐந்து அடிப்படை பொருள்களின் சேர்க்கையால் ஆகியது உலகம். இந்த ஐந்தும் உலகின் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொர் இடத்திலும் நிறைந்து உள்ளது.

அவ்வாறு  அக்கினியும் எல்லா இடங்களிலும் உள்ளது. ஆனால் கட்டை, விறகு போன்ற எரிபொருட்களில் அது அதிகமாக வெளிப்படுகிறது. ஒரு கட்டையில் எந்த இடத்தை பற்ற வைத்தாலும் பற்றிக்கொள்கிறது. அதாவது அக்கினி அந்த கட்டை முழுவதிலும் வியாபித்துள்ளது. அந்தப் பொருள் முழுவதும் வியாபிக்கின்ற தன்மையே  இங்கு அந்த வடிவத்தில் விளங்குவது என்று கூறப்பட்டது.

அக்கினி ஒரு விறகில் இருக்கின்ற அதேவேளையில் எங்கும் நிறைந்ததாகவும் உள்ளது. எனவே விறகிலோ கட்டையிலோ ஏற்படும் மாற்றங்கள் அக்கினியை பாதிப்பதில்லை. அதுபோலவே ஆன்மாவும்.

அடுத்த உவமையில் இன்னும் தெளிவாக விளங்கும்.

10. ஒன்றான காற்று உலகில் வந்து எவ்வாறு பல்வேறு பொருட்களில் அந்த வடிவத்தில் விளங்குகிறதோ அவ்வாறே எல்லா உயிர்களிலும் இருக்கின்ற ஆன்மா ஒன்றாக இருந்தாலும் பல்வேறு உயிரினங்களில் அந்த வடிவத்தில் விளங்குகிறது. அதே வேளையில் அந்த வடிவங்களுக்கு வெளியிலும் திகழ்கிறது.

குடம் ஒன்று உள்ளது. குடத்துக்கு உள்ளேயும் காற்று உள்ளது, வெளியிலும் காற்று உள்ளது. குடத்திற்கு உள்ளே உள்ள காற்று குடத்தின் வடிவத்தைப் பெறுகிறது. குடத்தின வடிவங்களும் அளவுகளும் மாறுபடுவதற்கு ஏற்ப உள்ளே உள்ள காற்றின் வடிவமும் அளவும் மாறுபடுகிறது. குடத்தை உடைத்து விட்டால் காற்றுக்கு குடத்தின் வடிவம் போய்விடுகிறது, அது எங்கும் நிறைந்த தன்மையை அடைந்து விடுகிறது. அதுபோல் ஆன்மாவும் எங்கும் நிறைந்தது. அதேவேளையில் ஒவ்வொரு ஒவ்வொரு உயிரினங்களிலும் அந்தந்த வடிவத்தைப் பெற்று விளங்குகிறது. எவ்வாறு காற்று குடத்தால் பாதிக்கப்படுவது இல்லையோ அவ்வாறு ஆன்மாவும் உடம்பால் பாதிக்க படுவது இல்லை.

அந்தந்த வடிவம் என்று சொல்லும்போது(12 - 13) இல் கண்ட உவமை  நினைவில் கொள்ள வேண்டும். ஆன்மா பெருவிரல் அளவில் இருப்பதாக அங்கே கூறப்பட்டது. ஆனால் அது ஓர் ஒளி என்பதால் தான் நம்மால் அதனை புரிந்து கொள்ள முடிந்தது. இங்கும் ஒவ்வொரு உடம்பில் ஆன்மா ஒவ்வொரு வடிவத்தில் இருப்பதாக கூறும் போது அதனை ஒரு ஒளியாக,|ஒளிபோல் எங்கும் பரவி இருப்பதாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக ஆன்மா ஒரு மனித வடிவிலோ தாவர வடிவிலே மாறுகிறது என்பது அல்ல.

11. எல்லோருடைய காட்சிக்கும் ஆதாரமாக இருப்பவன் சூரியன். ஆனால் பார்வைக்கோளாறு மற்ற புற குறைபாடுகளோ சூரியனை பாதிப்பது இல்லை. அதுபோல் ஒன்றேயான ஆன்மா எல்லோரிலும் இருந்தாலும் உலகின் துக்கங்களால் பாதிக்கப்படுவது இல்லை. ஏனெனில் அது அனைத்தையும் கடந்தது.

இங்கே சூரியன் என்பது ஒளியின் சின்னமாக கூறப்படுகிறது. எதை காண வேண்டுமானாலும் ஒளி வேண்டும். ஒளியின்றி எதையும் காண முடியாது. காண்பவன் இருந்தாலும், பொருள் இருந்தாலும், ஒளி இல்லாவிட்டால் பார்க்க முடியாது. அதனால் தான் சூரியன் காட்சிக்கு ஆதாரமாக கூறப்படுகிறான்.

ஒவ்வொரு கண் பார்வைக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது சூரியன். என்றாலும் எந்த கண்களில் உள்ள குற்றமும் அதனை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை. காமாலை நோயாளி எல்லாவற்றையும் மஞ்சள் நிறமாக காண்கிறான். அவனது பார்வைக்கும் ஆதாரம் சூரியன் தான். ஆனால் அந்தக் குறை சூரியனை பாதிப்பதில்லை. இதைப்போலவே ஒன்றேயான இந்தப் பரம்பொருள் எல்லாவற்றுக்கும் ஆன்மாவாக இருந்தாலும் வெளியே உள்ள தூய்மை தூய்மை இன்மையோ அதை பாதிப்பதில்லை.

அது போலவே புற குறைபாடுகளும். ஒரே சூரியன் கங்கையிலும் பிரதிபலிக்கிறது சாக்கடையிலும் பிரதிபலிக்கிறது. இந்த வேறுபாடு எந்த விதத்திலாவது சூரியனை பாதிக்குமா. இல்லை அதுபோல் நல்லவர்- தீயவர், பண்டிதர்- பாமரர் ஆண்-பெண் பணக்காரன்-ஏழை சிறியவர் - பெரியவர் என்று எல்லோரிலும் ஆன்மா இருந்தாலும் இந்த வேறுபாடுகளோ, அவர்கள் அனுபவிக்கின்ற சுகதுக்கங்களோ எதுவும் ஆன்மாவை பாதிப்பதில்லை. சூரியன் எல்லா காட்சிகளுக்கும் ஆதாரமாக இருந்தாலும் எவ்வாறு எந்த செயலிலும் பங்கு கொள்ளாமல் தனித்து நிற்கிறாரோ அதுபோல் எல்லா செயல்பாடுகளுக்கும் ஆதாரமாக இருந்தாலும் ஆன்மா அவற்றை கடந்ததாக இருப்பதால் எந்த செயலும் அதனை பற்றுவதில்லை.

ஆன்ம அனுபூதி (12-15) 

மரணத்தால் பாதிக்கப்படாததாக உள்ளது ஆன்மா. அந்த ஆன்மா நான்  என்ற உண்மையை உணர முடியும் ஆனால் அதுதான் பெரிய விஷயம். ஆன்மீக சாதனைகள் மூலம் இந்த அனுபூதியை பெற வேண்டும்.

ஆன்ம அனுபூதியின் மகிமை (12 -13)

12. ஒன்றே ஆனதும் அனைத்தையும் ஆள்வதும், எல்லோரிலும் இருப்பதும், இதயத்தில் உறைவதும், ஒன்றாக இருந்தும் பலவாக தோன்றுவதும் ஆன ஆன்மாவை அனுபூதியில் உணர்கின்ற விவேகிகளுக்கே நிலைத்த இன்பம் உரித்தாகும், மற்றவர்களுக்கு இல்லை.

இறைவனின் சக்தி மாயை எனப்படுகிறது. இதற்கு இரண்டு பண்புகளை நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன ஒன்று, இருப்பதை மறைப்பது, இரண்டு, இல்லாததை இருப்பதாக காட்டுவது. உலகம், உயிர்கள் என்று அனைத்திலும் நிலவுவது ஒரே ஆன்மா. ஒரே உணர்வு பொருள். இந்த உண்மை மறைக்கப்பட்டு, உலகையும் மனிதர்களையும் உயிரினங்களையும் வெவ்வேறாக நாம் காண்கிறோம். இப்படி நமக்கு காட்டுவது இறைவனின் சக்தி ஆகிய மாயை. அந்த இறைவனே ஆன்மாவாக நம் உடம்பில் உறைகிறார். ஆன்மாவை அனுபூதியில் உணர்பவன் நிலைத்த இன்பத்தைப் பெறுகிறான். மற்றவர்கள் பெறுவதில்லை. வேறுபாட்டு உணர்வு இருக்கும்போது, பயம் தவிர்க்க முடியாதது. ஆனால் ஒருமை உணர்வில் பயமோ துன்பமோ இல்லை. ஏனெனில் யார் யாரைக் கண்டு பயப்படுவது. யார் யாருக்குத் துன்பம் செய்வது இருப்பதே ஒன்று அல்லவா எனவே இதை உணர்ந்தவர்கள் எப்போதும் இன்பத்தில் திளைத்திருக்கிறார்கள். உணராதவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை.

13.நிலையற்றவற்றில் நிலையானவரும் உயிரினங்களில் உணர்வாக விளங்குபவரும் பன்மையில் ஒருமையானவரும், ஆசைகளை நிறைவேற்றுபவருமான இறைவனை எந்த விவேகிகள் இதயத்தில் ஆன்மாவாக உறைபவராக அனுபூதியில் உணர்கிறார்களோ, அவர்களுக்கே நிலைத்து அமைதி உரித்தாகும், மற்றவர்களுக்கு இல்லை. 

ஆன்ம அனுபூதி என்பது என்ன?  14 - 15 

ஆன்ம அனுபூதி, இறையனுபூதி, இறைக்காட்சிகள் எல்லாம் பொதுவாக நாம் கேள்விப்படுகிறோம், படிக்கிறோம். உண்மையில் அது என்ன என்பது பற்றி யாராலும் சொல்ல முடியாது. ஏனெனில் அது ஆராய்ச்சிக்கு உரியது அல்ல, அது அனுபவத்திற்கு உரியது. இருப்பினும் ஆராய்ச்சி முயற்சிகள் தொடரவே செய்கின்றன. நசிகேதனும் இங்கே அது பற்றி கேட்கிறான். எமதர்மன் சிறந்ததொரு பதிலை கொடுக்கிறான். 


14.குறிப்பிட்டு சொல்ல முடியாததும் மேலானதுமான அந்த அனுபூதி இன்பத்தை நேரடியாக அனுபவிக்கின்றனர். அந்த அனுபவம் தானாக ஒளிர்கிறதா, அல்லது வேறொன்றால் ஒளிரச் செய்யப் படுகிறதா  இது பற்றி நான் அறிய விரும்புகிறேன்.

ஆன்மஅனுபூதி பெற்றதாக, இறைவனைக் கண்டதாக மகான்களும் பலரும் கூறியுள்ளனர். அது அகத்தே உணரப்பட்ட ஓர் அனுபவமா அல்லது புறப் பொருட்களை காண்பதுபோல் ஒரு புறக்காட்சியா என்பது நசிகேதனின் கேள்வி.

15அங்கே சூரியன் ஒளிர்வதில்லை;  சந்திரனும், நட்சத்திரங்களும் ஒளிர்வதில்லை;  மின்னல் ஒளிர்வதில்லை.  இந்த அக்கினி எப்படி ஒளிர முடியும்?  ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன.

ஆன்ம அனுபூதி என்பது ஒரு புற காட்சி அல்ல என்று இங்கே கூறப்படுகிறது. அனைத்தையும் காண ஒரு விளக்கு தேவை. சூரியனை காண விளக்கு தேவையா? தேவையில்லை. ஏனெனில் சூரியனின் ஒளியால் தான் அனைத்தும் ஒளிர்கின்றன. அதுபோல் ஆன்ம ஒளியால் தான் நாம் அனைத்தையும் காண்கிறோம். உலகப் பொருள்களை காண்பதற்கு உதவுகின்ற சூரியன், சந்திரன் நட்சத்திரங்கள் அனைத்தும் பிரகாசிப்பது ஆன்ம ஒளியால்தான். எனவே ஆன்ம இந்த ஒளிகளால் இயலாது.

பொதுவாக ஒளி, காட்சி என்றெல்லாம் படிக்கும்போது அது சாதாரணமாக நாம் காண்கின்ற ஒளியை போன்றது, அதைவிட பேரொளியானது என்றெல்லாம் எண்ணிக் கொள்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. பெற்ரோமாக்ஸ் விளக்கில் இருந்து வருகின்ற ஒளி போன்றது அல்ல, ஆன்ம ஒளி. அனைத்தையும் நாம் அறிந்துகொள்வது ஆன்ம ஒளியால்தான். அதன் காரணமாகவே ஒளி என்று கூறப்பட்டுள்ளது.

ஆன்ம அனுபூதி,  இறையனுபூதி என்பது ஒரு அனுபவம்;  உணர வேண்டியது. ஒரு புறக்காட்சி போல் அதனைக் காணமுடியாது. அன்பு, இரக்கம், இன்பம் போன்றவற்றை யாரும் காண முடியாது;  அனுபவிக்கவே முடியும்.  அது போல் ஆன்ம அனுபூதியும் அனுபவிக்க முடியுமே தவிர காண முடியாது.  இதையே ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜினனிடம், உனது இந்தக் கண்ணால் என்னை பார்க்க இயலாது. எனவே உனக்கு தெய்வீக கண்ணை தருகிறேன் என்று கூறுகிறார்.

எனினும் மிக உயர்ந்த நிலைகளில் புறக்கண்களால் இந்த காட்சிகளை கண்டதாக பல மகான்கள் வரலாறு தெரிவிக்கிறது.




அத்தியாயம் 6

மரணபயத்தை வெல் 

மரணத்தை விட கொடியது மரணம் பயம்.  மரணம் ஒருமுறைதான் மனிதனைக் கொல்கிறது. ஆனால் மரண பயம் ஒவ்வொரு கணமும் அவர்களை கொன்று கொண்டு இருக்கிறது. எனவே மரண பயத்தை  விடுமாறு இந்த கடைசி அத்தியாயத்தில் எமதர்மன் அறிவுரை கூறுகிறான். ஆன்ம அனுபூதி, இறையனுபூதி என்று அனைத்து உயர் அனுபவங்களுக்கும் இது முதற்படியாக அமைவது இங்கே விளக்கப்படுகிறது.

மரணத்துக்குப் பின்னால் என்ன உள்ளது என்பது நசிகேதனின் கேள்வி. அதற்கு 'மரணத்துக்ப் பின்னால் ஆன்மா இருக்கிறது, உண்மையில் நீ ஆன்மா, மரணம் என்பது உடம்பிற்கு மட்டுமே. உனக்கு மரணம் இல்லை' என்று பல கோணங்களில் இதுவரை எமதர்மன் கூறியதை கண்டோம்.

நமக்கு மரணம் இல்லாததால் நாம் தைரியமாக மரணத்தை எதிர்கொள்ளலாம்.  அதற்கு ஒருபடியாக, வாழும்போதே மரண பயத்தை விலக்கி வாழ கற்றுக்கொள்ள வேண்டும். எப்படி கற்றுக்கொள்வது?

அதற்கு மூன்று அடிப்படை உண்மைகளை புரிந்து கொள்ளுமாறு கூறுகிறான் எமதர்மன்.

மூன்று உண்மைகள் (1 - 4)

வாழ்க்கை ஒரு பிரதிபிம்பம்

1. இந்த அரச மரம் பழமையானது, மேலே வேரும், கீழே கிளைகளும் உடையது. அதுவே தூயது. அதுவே இறைவன். அது அழிவற்றது.  எல்லா உலகங்களும் அதையே சார்ந்திருக்கின்றன. அதை யாரும் கடந்து செல்ல முடியாது. நீ கேட்டது உண்மை அதுவே.

தலைகீழாக நின்ற ஓர் அரச மரத்திற்கு வாழ்க்கை ஒப்பிடப்படுகிறது. எப்போது ஒரு பொருள் தலைகீழாக தெரியும். பிரதிபலிக்கும்போது. ஆற்றின் கரையில் நிற்கின்ற மரத்தின் பிரதி பிம்பத்தை தண்ணீரில் பார்க்கும்போது மரம் தலைகீழாக நிற்பது போல் தோன்றும். அதன் வேர்ப்பகுதி மேலேயும், கிளைகள் கீழேயும் இருப்பதாகத் தெரியும். பிரதிபிம்பம் உண்மை அல்ல.

இங்கே வாழ்க்கை ஒரு தலைகீழான மரத்திற்கு ஒப்பிடப்படுகிறது. அதாவது வாழ்க்கை ஒரு பிரதி பிம்பம். எனவே இது உண்மை அல்ல. அதாவது வாழ்க்கையில் காண்பது உண்மை அல்ல. தலைகீழ் தோற்றம். இதன் பொருள் என்ன.

வாழ்க்கையில் நாம் இன்பமாக காண்பவை உண்மையில் இன்பம் அல்ல. அது போலவே துன்பமாக காண்பவை துன்பம் அல்ல.  பிறப்பை நாம் இன்பமாக காண்கிறோம். மரணத்தைக் கண்டு அஞ்சுகிறோம்.  ஆனால் உண்மையை உணர்ந்த மகான்கள் பிறப்பு வேண்டாம் என்கிறார்கள், மரணத்தை கண்டு சிரிக்கிறார்கள்.  மரணத்தை நேசிக்க வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர்: துறவு என்பது மரணத்தை நேசித்தல். சாதாரண மனிதர்கள் வாழ்வை நேசிக்கிறார்கள். துறவிகள் மரணத்தை நேசிக்கிறார்கள். அதுபோலவே, உலகம், அதன் உறவுகள், அது தரும் சுகம்கள் எல்லாவற்றையும் உண்மை, நிலையானவை என்று நம்புகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.

அப்படியானால் உண்மை என்ன?

ஆற்று நீரில் மரம் தலைகீழாக தெரிகிறது. அதன் உண்மையை உணர வேண்டுமானால், அந்த  பிரதி பிம்பத்தைப் விட்டு விட்டு அந்த பிம்பத்திற்கு ஆதாரமான மரத்தைப் பார்க்க வேண்டும். அதுவே உண்மை. அது போலவே வாழ்க்கையின் உண்மையை அறிய வேண்டுமானால் வாழ்க்கைக்கு ஆதாரமான இறைவனை நாட வேண்டும்.

வாழ்க்கையே - மரத்தையே  இறைவனாக கூறுகிறது மந்திரம். வேத, உபநிஷத கண்ணோட்டத்தின் அடிப்படையே இங்கே  காண்கிறோம். ஒருமை உணர்வு (integral vision) என்பது வேத ரிஷிகளின் அனுபூதி ஆக இருந்தது. அவர்கள் எங்கும் ஒரே உணர்வுப் பொருளையே கண்டனர். வாழ்க்கை என்பது இறைவனிலிருந்து வேறுபட்டது அல்ல. ஆன்மா கடவுள் அனுபூதி என்று எது வேண்டுமானாலும் இந்த வாழ்க்கையின் மூலமே அடைந்தாக வேண்டும், வாழ்க்கையில் இருந்து விலகி ஓடுவதால் பயனில்லை. இந்த எல்லா நிலைகளும் வாழ்க்கையைத் சார்ந்துள்ளன என்பதையே  'எல்லா உலகங்களும் அதையே சார்ந்திருக்கின்றன'  என்பதையே  இந்த மந்திரம் கூறுகிறது. 'அதுவே நீ'  தியான பகுதி இது.

இறைவனே தலைவர் 


2. இந்த உலகங்கள் அனைத்தும் பிராணனில் இருந்து வெளிப்படுகின்றன; பிராணனால் இயங்குகின்றன. வஜ்ராயுதத்தை உயர்த்திப் பிடித்து இருப்பது போல் இறைவனிடம் இருக்கின்ற பெரும் பயம் காரணமாகத்தான் இந்த இயக்கங்கள் நடைபெறுகின்றன. இதனை அறிபவர்கள் மரணம் அற்றவர்கள் ஆகின்றனர்.

பிராணனால் தான் அனைத்தும் இயங்குகின்றன என்பதை விரிவாகக் கண்டோம். இறைவனின் சக்தியாகிய அந்த பிராணன் எவ்வாறு இயங்குகிறது?  இறைவனிடம் உள்ள பயத்தால் என்கிறது இந்த மந்திரம்.

வஜ்ராயுதம் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. ஒன்று, இடி;  மற்றொன்று விருத்திரா அசுரனை அழிப்பதற்காக ததீசி முனிவர் எலும்பிலிருந்து செய்யப்பட்ட ஆயுதம். இரண்டும் பேராற்றலின் சின்னங்கள். இறைவன் பேராற்றலின் வடிவமாக உள்ளார் என்பதை இங்கே சுட்டி காட்டப்படுகிறது.

வாழ்க்கையின் உண்மையை அறிய வேண்டுமானால் இறைவனை நாட வேண்டும் என்று கண்டோம் (1). அந்த இறைவனின்  பேராற்றலின் உறைவிடம், அனைத்திற்கும் தலைவர் என்பதை இந்த மந்திரம் கூறுகிறது.

பயம் ஓர் அடிப்படை உணர்ச்சி 

3. இறைவன் மீது உள்ள பயத்தினால் அக்கினி எரிகிறது; சூரியன் சுடுகிறது. இந்திர வாயுனும் தேவனும் தத்தம் வேலைகளை செய்கின்றனர். ஐந்தாவதான மரணதேவனும் அந்த பயத்தினால்தான் தொழிலைச் செய்கிறான்.

'எனக்கு மேல் ஒருவன் இருக்கிறான், அவனுக்கு பதில் சொல்ல நான் கடமைப்பட்டவன்' என்ற உணர்ச்சி இருக்கும் போது ஒருவன் கண்ணும் கருத்துமாக வேலை செய்கிறான். இயற்கை சக்திகள் அனைத்தும் அவ்வாறு செயல்படுவதாக இங்கே கூறப்படுகிறது. தாங்கள் தவறினால் தண்டிப்பதற்காக ஒருவர் உயர்த்திய ஆயுதத்துடன் நிர்க்கிறார் என்ற பயத்துடன் இயற்கை சக்திகள் வேலை செய்கின்றன.
பொதுவாக இறைவனை அன்பு, இனிமை மென்மை கருணை போன்ற அமைதியான குணங்களின் இருப்பிடமாக தான் கருதுகிறோம். ஆனால் வாழ்க்கைக்கு மறுபக்கம் ஒன்று உள்ளது பயங்கரம், கொடுமை போன்ற பண்புகள் உலகில் நிலவுவதை யாரும் மறுக்க முடியாது. அவையும் இறைவனில்  இருந்துதான் வந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இறைவனின் ஆதிக்கம் இல்லாத இடங்களும் இருப்பதாகவிடும். எனவே பயங்கரம் போன்ற பண்புகளையும் சேர்த்து இறைவனை காணும் போது தான் வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டவர்களாவோம். படுபயங்கரத்தின் உறைவிடமாக ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு காட்டிய விஸ்வரூப தரிசனம் வாழ்க்கையின் இந்த மறுபக்கமே. காளி, நரசிம்மமூர்த்தி, ருத்ரன் போன்ற பயங்கர வடிவில் தெய்வத்தை வழிபடுவதின் உண்மை இதுவே.

இவ்வாறு மரணபயம் முதலான அனைத்து எதிர்மறை உணர்ச்சிகளையும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டு, வாழ்க்கையை முழுமையாக இறைவனை நோக்கித் திருப்புமாறு  இந்த மந்திரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த உண்மைகளை  உணரவதின் விளைவு

4. இங்கே உடம்பு வீழ்வதற்கு முன்பு இந்த உண்மைகளை உணர முடியுமானால் அகக்காட்சி வாய்க்கிறது. உணர முடியாவிட்டால் உலகில் மீண்டும் மீண்டும் பிறக்க நேர்கிறது.

அகக்காட்சியின் படிகள் 

வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் போது அகக்காட்சி தெளிவு பெறுகிறது. ஆன்ம அனுபூதியை நாடி ஆன்மீக பயணத்தை மேற்கொள்பவர்கள் முதலில் சந்திப்பது இருளையே, குழப்பத்தையே. குரு ஒருவரின் வழிகாட்டுதல் உடன் தொடர்ந்து சாதனைகளில் ஈடுபடும்போது இந்த குழப்பங்கள் விலகுகின்றன. மனம் பக்குவம் பெற பெற அகவுலக்காட்சி தெளிவாகிறது;  புறவுலகைவிட அகவுலகம் உண்மையானதாக தெரியத் தொடங்குகிறது.  இவ்வாறு அகக்காட்சி தெளிவுபெறுவதை  இந்த மந்திரம் நான்கு படிகளாக கூறுகிறது.

5.புத்தியில் கண்ணாடியில் போலவும், பித்ரு லோகத்தில் கனவில் போலவும், கந்தர்வ லோகத்தில் தண்ணீரில் போல் தெளிவற்றும், பிரம்மலோகத்தில் நிழலும் வெயிலும் போல் தெளிவாகவும் அகக்காட்சி வாய்க்கிறது.

கந்தர்வலோகம்:  இது போன்ற உலகங்கள் போகங்களுக்கு உரியவை. பூமியில் ஏராளம் நற்பணிகள் செய்தவர்கள் தங்கள் புண்ணிய பலனை அனுபவிப்பதற்காக செல்கின்ற உலகங்கள் இவை.

சுகபோக நாட்டங்களில் இருந்து விடுபடாத நிலைக்கு இந்த உலகங்கள் உதாரணமாக கூறப்பட்டுள்ளன. மனம் சுகபோகங்களை நாடுகின்ற நிலையில் ஆன்மா பற்றிய உண்மைகள் தெளிவற்றதாக உள்ளன. நீரில் தெரிகின்ற பிம்பம் ஒரு சிறிய அலை எழுந்தாலும் எவ்வாறு தெளிவற்று போய்விடுகிறதோ, அவ்வாறே இந்த நிலையில் இருப்பவர்களின் விவேகம், லட்சிய நாட்டம் போன்றவை சிறிய எதிர்மறை எண்ணங்களாலும் கலங்கி விடுகின்றன.

 பித்ரு லோகம்: இறந்தவர்கள் வாழும் உலகம் இது. உடம்பு விழ்ந்த பிறகு உள்ள நிலை இது. சாதனைகளின் மூலம் உடம்பில் இருந்து தன்னை பிரித்தறிய தெரிந்த ஒருவனின் நிலைக்கு உதாரணமாக இது கூறப்படுகிறது.  இங்கே ஆன்மா பற்றிய உண்மைகள் கனவு காட்சிகள் போல் உள்ளன. கனவுக் காட்சிகள் அந்த நேரத்துக்கு முற்றிலும் உண்மை போலவும் விழித்த பிறகு உண்மையற்றவை என்றும் தெரிபவை. அதுபோல், உடம்பு வேறு, தான்வேறு என்பதை அனுபவரீதியாக உணராதவர்கள் சில நேரங்களில் அக உலகத்திற்கும் சில நேரங்களில் புற உலகத்திற்குமாக  ஊசலாடுகிறார்கள். இரண்டும் அந்தந்த நேரங்களுக்கு உண்மை போலவே தெரிகின்றன.

புத்தி: புத்தி பற்றியும் அதன் விழிப்பு பற்றியும் ஏற்கனவே விரிவாகக் கண்டோம். புத்தி விழிப்புற்ற நிலையில் அவர்களுக்கு அக உண்மைகள் அழுக்கற்ற கண்ணாடியில் தெரிந்த பிம்பம் போல் தெளிவாக உள்ளன. இருந்தாலும் கவனமில்லாமல் இருந்தால் கண்ணாடி அழுகுற வாய்ப்பு உள்ளது. எனவே புத்தி விழிப்புற்ற நிலையையில் இருப்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.

பிரம்மலோகம்: பிரம்மலோகம் கைலாசம், வைகுண்டம் போன்றவை தெய்வங்களின் உறைவிடங்களாக கருதப்படுபவை. சாதனைகள் மூலம் இறை நிலையை பெற்றவர்களுக்கு உவமையாக இங்கே கூறப்பட்டுள்ளது. நிழலும் வெயிலும் என்ற உவமை நேரடியாக பொருந்துவதல்ல. இறை நிலை அல்லது ஆன்ம நிலை என்பது எந்த உவமையாலும் விளக்கபட முடியாதது. எனவே கோடி காட்டுவதுபோல் ஓர் உதாரணம் சொல்லப்பட்டுள்ளது. நிழலும் வெயிலும் எதிரிடையானவை. நிழல் இருப்பதால் வெயிலும், வெயில் இருப்பதால் நிழலும் தெளிவுபெறுகின்றன. அவ்வாறு துல்லியமாக, தெளிவாக ஆன்மக் காட்சி கிடைப்பதாக இங்கே கூறப்படுகிறது.

சாதனை முறை 6 - 8

அகக் காட்சி தெளிவுற்று, மனம் குழப்பங்களில் இருந்து விடுபட்ட பிறகுதான் உண்மையான ஆன்மீக சாதனை ஆரம்பிக்கிறது.  இந்த மூன்று மந்திரங்கள் சாதனை பற்றி கூறுகின்றன. புலன்களை பற்றிய உண்மையை அறிவதில் இருந்து சாதனை தொடங்குகிறது.

6. புலன்களின் தனித்தன்மை, அவற்றின் எழுச்சி மற்றும் ஒடுக்கம், தனித்தனியான உற்பத்தி ஆகியவற்றை பகுத்தறிகின்ற விவேகி கவலையிலிருந்து விடுபடுகிறான்.

ஐந்து புலன்களும் பஞ்சபூதங்களின் தன்மைகளை அடிப்படையாக பெற்றுள்ளன.

காது  - ஆகாயம்  -  ஒலி
மூக்கு - வாயு  - ஸ்பரிசம்
கண் -  அக்கினி  - ஒளி
நாக்கு - தண்ணீர்  - சுவை
உடம்பு - பூமி -  மணம்
(தோல்)

இவ்வாறு ஒவ்வொரு புலனும் பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றில் இருந்தும் தனித்தனியாக தோன்றின,  தனித்தனி செயல்களை செய்கின்றன. விழிப்பு நிலையில் எல்லா புலன்களும் செயல்படுகின்றன. கனவிலும் தூக்கத்திலும் ஒடுங்கி விடுகின்றன.

புலன்களின் ஆரம்பமும் சரி, செயல்படுகின்ற நேரமும் சரி, ஒடுக்கமும் சரி எல்லாம் ஜீவனுடன், பிராணனுடன் சம்பந்தப்பட்டவை; ஆன்மாவுடன் எந்தவிதத்திலும் சம்மந்தப்படாதவை.  புலன்களின் செயல்பாட்டிற்கும் ஆன்மாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே இங்கு நாம்  கருத்தில் கொள்ளவேண்டியது. இந்த உண்மையை அறிபவர்கள் புலன்களின் செயல்பாட்டால் கலங்குவதில்லை, தான் ஆன்மா என்பதில் நிலைபெற்று நிற்கிறார்கள் அவர்கள்.

7.புலன்களை விட மனம் வலிமையானது. மனத்தை விட புத்தி வலிமையானது. புத்தியை விட ஆன்மா மிக மேலானது. மேலான ஆன்மாவை விட மாயை மேலானது.

8. அவ்யக்தத்தைவிட இறைவன் மேலானவர். அவர் எங்கும் நிறைந்தவர். (இவர்தான் என்று சுட்டிக் காட்டுவதற்கு) எந்த அடையாளமும் இல்லாதவர். அவரை அனுபூதியில் உணர்வதால் மனிதன் (தளைகளில் இருந்து) விடுபடுகிறான்; மரணமிலாப் பெரு நிலையை அடைகிறான்.

புலன்களின் செயல்பாடு தனியானவை, அவற்றுடன் ஆன்மாவிற்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை உணர்ந்து மனம் ஆன்மாவில் நிலை பெறும்போது புலன்கள் இயல்பாகவே தங்கள் வேகத்தை இழக்கின்றன. இதனை படிப்படியாக 7-8 ஆம் மந்திரங்கள் தெரிவிக்கின்றன. 10 - 11 மந்திரங்களும் இதே கருத்தை வலியுறுத்துவதாக அமைந்து ஒப்பு நோக்கத்தக்கது.

இறையனுபூதி 9 - 16

இறைவனை உணர்ந்தால் மனிதன் மரணமில்லா நிலையை அடைகிறான். அந்த நிலையைப் பற்றிய சில விளக்கங்கள் இங்கே தரப்படுகின்றன.

இந்த கண்களால் காண முடியாது

9. இறைவனுடைய உருவம் புறத்தில் காணக்கூடியதாக இல்லை. யாரும் அவரைக் கண்களால் காண்பதில்லை. இதயக் குகையில் உள்ள ஆன்மாவால், விழிப்புற்ற புத்தியில் மனிதன் தொடர்ந்து முயற்சியால்  உணரப்படுகிறார். அவரை அறிபவர்கள் மரணமற்றவர்கள் ஆகின்றனர்.

மிகவும் பொருள் பொதிந்த மந்திரம் இது. இறையனுபூதி என்பதன் ஒரு தெளிவான விளக்கத்தை இங்கு நாம் காண்கிறோம். இங்கே ஐந்து விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

1.புறத்தில் காணக் கூடியது அல்ல: 2. கண்களால் காண்பதில்லை: இந்த கருத்துக்களை ஏற்கனவே கண்டோம்.

3. ஆன்மாவால் காணப்படுகிறது: உடம்பில் உள்ள சாதாரண கண்கள் இறைவனை காண்பது இல்லை என்றால் அவரைக் காண்பது, உணர்வது யார்? இதயக் குகையில் உள்ள ஆன்மா. இதயக் குகை பற்றியும்  ஆன்மா பற்றியும் ஏற்கனவே விரிவாக கண்டுள்ளோம். இறைவன் ஒரு பேரொளி என்றால் ஆன்மா ஒரு சுடர், ஒரு பொறி. ஒவ்வொருவரிலும் அந்தப் பொறி உள்ளது. அந்த பொறிதான் இறைவனை அறிகிறது.

4.புத்தி தெளியவேண்டும்: ஆன்மா இறைவனை எங்கே காண்கிறது. விழிப்புற்ற புத்தியில். இதுபற்றியும் ஏற்கனவே விரிவாகக் கண்டுள்ளோம்.

5. மனத்தின் தொடர்ந்து முயற்சி வேண்டும்: ஆன்மா, இதயக் குகை, புத்தி என்றெல்லாம் கூறியதால் அவை ஏதோ நம்மை மீறிய விஷயங்கள் என்று எண்ணி விடாமல், நமது கருவியாகிய மனத்தை தொடர்ந்து சாதனைகளில் ஈடுபடுத்த வேண்டும். ஏதாவது ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து முழுமூச்சுடன் அதில் முன்னேற வேண்டும். இவ்வாறு மனத்தின் தொடர்ந்த முயற்சியால் புத்தி தெளிகிறது. தெளிந்த புத்தியால் தன்னை ஆன்மாவுடன் ஒன்றுபடுத்திக் காணமுடிகிறது. நம்மில் உள்ள இருவரில் நாம் ஜீவன் என்ற நிலை மாறி  'நான் ஆன்மா' என்ற நிலை உருவாகிறது. இந்த ஆன்ம நிலையில் இறைகாட்சி கிடைக்கிறது.

இறையனுபூதி ஓர் ஓய்வு நிலை

10. எப்போது ஐந்து புலன்களும் மனமும் ஓய்வு நிலையில் இருக்கின்றனவோ, புத்தி முயற்சியற்று இருக்கிறதோ அது மிக மேலான நிலை என்று சொல்லப்படுகிறது.

எந்த செயலும் அற்றநிலை மிக மேலான நிலையாக சொல்லப்படுகிறது. இதனை சரியாக புரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது. சோம்பி கிடப்பதையும் தூக்கத்தையும் இதனுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. புத்தி என்ற ஒன்று இங்கே குறிப்பிடப்பட்டு உள்ளதை  கவனத்தில் கொள்ள வேண்டும். சாதாரண மனிதர்களிடம் புத்தி விழிப்புறவில்லை என்பதை ஏற்கனவே பல இடங்களில் கூறியுள்ளோம். எனவே புத்தி விழிப்புற வேண்டும். அப்போதுதான் புலன்களும் மனமும் ஓய்வு நிலையை அடையும். அதன் பிறகே செயலற்ற நிலை உண்மையில் வாய்க்க முடியும். அக விழிப்புணர்வு ஏற்பட்டு மனமும் புலன்களும் நமக்கு வசப்பட்ட பிறகே இந்த நிலை பற்றி யோசிக்க வேண்டும். அதற்கு முன்னால் செயல் அற்ற நிலைக்காக முயற்சிப்பது தவறான முயற்சியாகும்.

தன்னுணர்வு நிலை

11. புலன்கள் வசப்பட்டு, நிலையாக நிற்கின்ற அந்த நிலை யோகம் என்று கருதப்படுகிறது. அந்த நிலையை அடைந்தவர்கள் தன்ணுணர்வு உடையவர்கள் ஆகிறார்கள். ஆனால் யோகநிலை வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் உட்பட்டது.

தன்ணுணர்வு என்றால் என்ன?  இதனை சத்வ நிலை என்று கீதை விளக்குகிறது. புலன்கள் எதுவும் தங்கள் பாதையில் திரியாமல், அதேவேளையில் தூக்கத்திலும் ஆழ்ந்து விடாமல் சுற்றி நடக்கின்ற அனைத்தையும் அறிந்த வண்ணம் உணர்வுபூர்வமாக நிற்கின்ற அமைதி நிலை இது. புலன்கள் என்பவை மனதின் வாசல்கள். அடைபட்டுவிட்ட  இந்த நிலையில் மனத்தை எங்கு செலுத்தினாலும் அது ஆழமாக செல்ல முடியும். படிப்பு, ஆராய்ச்சி ஆன்மீக சாதனைகள் போன்றவற்றை இந்த நேரம் செய்தால் விரைவில் வெற்றி கிடைக்கும்.

இந்த நிலையை சுவாமி விவேகானந்தர் மிகவும் புகழ்ந்து கூறுகிறார். உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள், அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதை பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் (self conscious)செயலில் ஈடுபடும் ஆனால் சக்தி வரும், பெருமை வரும், நன்மை வரும், தூய்மை வரும், எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும்.

புத்தி விழித்தெழுந்த, அந்த நிலையில் மனத்தை எதில் செலுத்தினாலும் அதில் பல அரிய விஷயங்களை சாதிக்க முடியும். விஞ்ஞானம், கலை என்று எந்தத் துறையை எடுத்தாலும் அதில் உன்னதங்களை காண முடியும். ஆனால் ஆன்மீகத்தில் சாதிக்க வேண்டுமானால் புத்தியும் மனமும் செயலற்றதாக வேண்டும். என்பதை முந்தின மந்திரம் வலியுறுத்தியதை கருத்தில் கொள்ள வேண்டும்.

யோக நிலையை அடைந்து, அதன் பிறகு நாம் எந்தத் துறையை  மேற்கொண்டாலும் அதில் வெற்றி பெற முடியும்.  ஆன்மீகம் அல்லது உயர் வாழ்வு வேண்டுமானால் மனத்தையும் புத்தியையும் புறத்தில் செல்லவிடாமல் அகத்தில் நிலைநிறுத்த வேண்டும்.

மற்றொரு கருத்து இங்கே கூறப்பட்டுள்ளது. இந்த யோக நிலை என்பது எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் உட்பட்டது. அதாவது புத்தி விழித்தெழுந்த நிலையை அடைந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது இன்றியமையாதது. ஒரு முறை யோக நிலை வாய்த்தாலும், தொடர்ந்த பயிற்சியின் மூலம் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அந்த நிலையில் இருந்து வீழ்ச்சி அடைய நேரும்.

விளக்க முடியாத நிலை 12 - 13 

12. வாக்கினாலோ மனத்தினாலோ கண்களாலோ அந்த அறுதி உண்மையை அடைய இயலாது.  'இருக்கிறது' என்று சொல்பவரை தவிர வேறு யார் அதனை அடைய முடியும்?

அன்பு பாசம் போன்றவற்றை அனுபவிக்காத மனிதர்கள் இருக்க முடியாது. ஆனால் அறிவினால் அவற்றை விளக்க இயலாது, இதயத்தால் அவற்றை உணர மட்டுமே முடியும். அது போலவே இறைவன், ஆன்மா போன்ற உண்மைகளையும் சாதாரண அறிவினால் அடைய இயலாது.  'கடவுள் ஒருவர் இருக்கிறார்' ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது என்பதையெல்லாம் நூலறிவு போன்ற எந்த அறிவின் துணையும் இன்றி இயல்பாகவே உணர்ந்து யார் இறைவனை நாடுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

13. இந்த உண்மை 'இருக்கிறது' என்று முதலில் அறிய வேண்டும். பிறகு அதன் உண்மை நிலையையில் உணர வேண்டும். 'இருக்கிறது' என்ற நிலையில் ஆழமாக உணரும் போது, அதிலிருந்து உண்மை நிலை அனுபூதி இயல்பாக வாய்க்கிறது.

பாவனையே(imagination) தெய்வப் பேருணர்வின்  (inspiration) வாசல் என்கிறார் ஸ்வாமி விவேகானந்தர்.

ஓர் உண்மையை அடைய வேண்டுமானால் அதனை மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும், அதைப் பற்றி கேட்க வேண்டும், சிந்திக்க வேண்டும் தியானிக்க வேண்டும் என்கிறது உபநிஷதம். தொடர்ந்த சிந்தனையின் மூலம் அந்த உண்மையை நமது மனத்தில் நினைக்கும் போது, அந்த உண்மையைப் பற்றிய அனுபூதி இயல்பாக வாய்க்கிறது.

மரணமிலாப் பெருநிலை  14 - 15

14. மனத்தை சார்ந்து இருக்கும் எல்லா ஆசைகளும் விலகும்போது மனிதன் மரணம் அற்றவனாகிறான். இங்கேயே இறைநிலை அடைகிறான்.

எப்போது ஆசைகளை விட முடியும்,  முந்தின மந்திரம் கூறிய இருக்கிறது ,என்ற கருத்து ஆழ்ந்த சிந்தனையின் மூலம் நம்மில் நிலை பெறும் போது. ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவிக் கொண்டிருப்பது மனதின் இயல்பு. வெளியில் அதை அலைபாயாமல், ஆசைப்பட்டு பொருள்களின் பின் செல்லாமல் இருக்க வேண்டுமானால் உள்ளே அது நிலைபெற்ற ஓர் இடம் வேண்டும். அந்த இடம் புற உலகத்தை விட உண்மையானது இன்பமானது இனிமையானது என்பதை மனம் நம்ப வேண்டும். அப்போது மட்டுமே அது புற ஆசைகள் விடும். அதனால்தான் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்ற கருத்தை மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும் என்று முந்தின மந்திரம் கூறியது.

15. எல்லா முடிச்சுகளும் அவிழும் போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான். உபதேசம் இவ்வளவுதான்.

ஆசைகள் மட்டுமல்ல, மனதில் இன்னும் எவ்வளவோ உள்ளன. உணர்ச்சிப் போராட்டங்கள் (), உணர்ச்சி சிக்கல்கள்() என்று எத்தனையோ விஷயங்கள் மனதில் உள்ளன. அவை அனைத்தும் சரியாக வேண்டும். மனம் தூய்மை பெறுவதுதான் ஆன்ம வாழ்வின் அடிப்படை என்பதை ஒரு சத்தியபிரமாணம் போல் சொல்வதற்காக உபதேசம் இவ்வளவுதான் என்று கூறுகிறான் எமதர்மன்.

16.இதயத்தின் நாடிகள் 101 அவற்றில் ஒன்று உச்சம் தலையைப் பிளந்து செல்கிறது. அதன் வழியாக மேலே செல்பவர்கள் மரணமற்ற நிலையை அடைகிறார்கள். மற்ற நாடிகளின் வழியாக வெளியேறுபவர்கள் பல்வேறு உலகங்களில் உளறுகிறார்கள்.

இதயம் என்பது பிராணனின் இருப்பிடம். உணர்ச்சிகள், செயல்பாடுகள், என்று வாழ்க்கையின் அனைத்தும் இங்கிருந்தே கட்டுப்படுத்தப்படுகின்றன. விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை மூளை அனைத்து செயல்களின் மையமாக இருந்தாலும் நமது சாத்திரங்கள் இதயத்தையே மையமாக கொள்கின்றன. நான் என்று சொல்லும்போது சரி, ஆழ்ந்த மனக்கவலை, அளவற்ற சந்தோஷம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது சரி, இதயத்தில் கைவைத்தே நாம் பேசுவது இங்கு நினைவு கூறத்தக்கது.  இந்த இதயம் நாம் அறிந்த பௌதிக இதயம் அல்ல, இது உணர்ச்சி இதயம்.

இந்த இதயத்தில் இருந்து நூற்றொரு நாடிகள் புறப்படுகின்றன. இவற்றின் மூலமே கட்டளைகள் இடப்படுகின்றன, அனுபவங்கள் பெறப்படுகின்றன. நாடிகள் சாதாரண கண்களுக்கு புலனாகாதவை.  இவற்றில் ஒன்று உச்சந்தலை வழியாக செல்கிறது. உச்சந்தலையில் பிரம்ம ரந்திரம் உட்பட இந்த உடம்பில் பதினொரு துவாரங்கள் இருப்பதாக ஏற்கனவே கண்டோம். இந்த பிரமரந்திரத்தின் வழியாக ஒரு நாடி செல்வது இதன் வழியாக உயிரை விடுபவன் மரணமற்ற நிலையை அடைகிறான். மற்ற நூறு நாடிகளும், மீதி பத்து வாசல்களும் ஏதாவது ஒன்றிலி நிறைவு பெறுகின்றன. இவற்றின் வழியாக உயிர்வழியா உயிர் வெளி ஏறினால் மீண்டும் பிறவி வாய்க்கிறது. ஆசைகள் அற்ற யோகியால் மட்டுமே பிரமரந்திரத்தில் வழியாக உயிரை வெளியேற்ற முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.


அங்குஷ்டமாத்ர புருஷ வித்யை

17.உடம்பில் உறைவதான ஆன்மா பெருவிரல் அளவுடையது, மக்களின் இதயத்தில் எப்போதும் உள்ளது. மூஞ்சை புல்லிலிருந்து தீக்குச்சியை பார்ப்பது போல் அதனை சொந்த உடம்பிலிருந்து பொறுமையுடன் பிரிக்க வேண்டும். அந்த ஆன்மா தூயது, அழிவற்றது என்று அறிந்துகொள். அந்த ஆன்மா தூயது, அழிவற்றது என்று அறிந்துகொள்.

நசிகேதனுக்கு எமதர்மன் கூறிய உபதேசத்தை பொறுத்தவரை கடைசி மந்திரம் இது. கட உபநிஷதம், அங்குஷ்ட மாத்திர புருஷ வித்யை நசிகேத வித்யை என்ற இரண்டு முறைகளை போதிப்பதாக ஏற்கனவே கண்டோம். பெருவிரல் அளவுடைய ஒளிப்பொருள் ஒன்று நம்முள் இதயக்குகையில் உள்ளது. அதனை உடம்பிலிருந்து பிரித்தறிய வேண்டும், அந்த ஆன்மாவே எங்கும் நிறைந்த பரம்பொருள் என்பதை உணர வேண்டும். இதுவே இந்த இரண்டு வித்யைகளின் பொதுவான கருத்து ஆகும். இந்த கடைசி மந்திரத்தில் மீண்டும் ஒருமுறை அந்த கருத்தை வலியுறுத்தி உபதேசத்தை நிறைவு செய்கிறார் எமதர்மன்.

ஆன்மா, அதை உணர்வது போன்றவை, அவ்வளவு சுலபமானவை அல்ல, சாதனைகளில் விடாமுயற்சியும், உடனடியாக பலன் தெரியாத நிலையில் பொறுமையும், பலர் இதனை சாதித்திருக்கிறார்கள். என்னாலும் முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் வேண்டும். அதனை இந்த மந்திரம் வலியுறுத்துகிறது.

நிறைவு

18. எமதர்மனால் சொல்லப்பட்ட இந்த வித்யைகளையும், எல்லா யோக விதிகளையும் ஏற்று கொண்டு நசிகேதன் தூயவன் ஆகி மரணம் அற்றவரானார். பிறகு இறைவனை அடைந்தார். மற்றவர்களும்  இந்த வித்யையை அறிந்து பின்பற்றும் போது இறை நிலையை அடைகிறார்கள்.

உபதேசத்தைக் கேட்டதுடன் நசிகேதன் நின்றுவிடவில்லை. அதனைப் பின்பற்றினார். மனத்தைத் தூய்மை படுத்தினார். மரணமற்ற நிலையை அடைந்தார். இறுதியாக இறைவனை அடையப் பெற்றார். இந்த பேறு ஒருவருக்கு மட்டும் உரியதல்ல. பின்பற்றுகின்ற யாரும் இதனை அடையலாம், பின்பற்றி பாருங்கள் என்று ஒரு சவால் போல் இந்த மந்திரத்தை கூறிவதுடன் உபநிஷதம் நிறைவு பெறுகிறது.

 இவ்வாறு கட உபநிஷதம் நிறைவுபெறுகிறது ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹரே கிருஷ்ணா

No comments:

Post a Comment